28.05.2024 - செவ்வாய்க் கிழமை
"தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்" - யோவான் 12:25
எதிர்பார்ப்பு இல்லாத மனிதர் யாரும் இருக்க முடியாது. நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு வேலையிலும் நமக்கு கைம்மாறு கிடைக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு.
நாம் அன்பு செய்யக்கூடியவர்கள் நம்மை அன்பு செய்ய வேண்டும் என்பது அன்பின் எதிர்பார்ப்பு. நான் மருத்துவமனைக்குச் செல்கிறேன் மருத்துவர் எனக்கு நலம் கொடுக்க வேண்டும் என்பது நலனின் எதிர்பார்ப்பு. ஆலயத்திற்கு செல்கிறேன் கடவுள் எனக்கு ஆசிரை கொடுக்க வேண்டும் என்பது ஆசிரின் எதிர்பார்ப்பு.
இவ்வாறாக, இடத்திற்கு ஏற்றார் போல் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
சில வேளைகளில் நாம் எதிர்பார்த்து, கிடைக்காத போது ஏமாற்றத்தை சந்திக்கிறோம். அந்த ஒரு ஏமாற்றம் அடுத்த வேலையை செய்வதற்கு தடையாக கூட இருக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:28-31) பேதுரு இயேசுவிடம், "நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மை பின்பற்றியவர்கள் ஆயிற்றே" என்று சொல்லி, மறைமுகமாக 'எங்களுக்கு என்ன கிடைக்கும்' என்று கேட்கிறார்.
என்பொருட்டும் நற்செய்தி பொருட்டும் எல்லாவற்றையும் இழந்தவருக்கு, மறுமையில் நிலை வாழ்வு உண்டு என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
நம்முடைய எதிர்பார்ப்பு எல்லாம் கண்ணுக்கு புலப்படுகின்றவற்றைப் பற்றியே இருக்கிறது. அது நிரந்தரமானது அல்ல என்பது தெரிந்ததும் கூட நம்முடைய எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை நமக்கு பெற்று கொடுக்கிறது. .
இயேசு தரக்கூடியது நிலை வாழ்வு; அதுவே நம்முடைய எதிர்பார்ப்பாக இருந்தது என்றால் அதை குறித்த பணிகளில், முயற்சிகளில் நாம் ஈடுபடுவோம். அதன் வழியாக நிரந்தரமானவற்றை நாம் பெற்றுக் கொள்வோம்.
நம் எதிர்பார்ப்பு நிலை வாழ்வை நோக்கியதாக இருக்கட்டும்... அதுவே நிரந்தரம். அதுவே நமக்கு நிரந்தர மகிழ்வை கொடுக்கும்.
No comments:
Post a Comment