11.05.2024 - சனிக் கிழமை
“உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது” - 1யோவான் 2:15
உலகில் வாழும் மனிதர் ஒருவரையொருவர் சார்ந்து வாழ அழைக்கப்பட்டுள்ளனர். சார்புநிலை என்பது அடிமையாகும் நிலை அல்ல. பிறர் நல்வாழ்வு பெற ஒத்துழைப்பது, உடனிருப்பது. இத்தகைய பிறர் வாழ்வு உயர துணைநிற்கும் பண்பு உலகு சார்ந்தது அல்ல. கடவுளின் பிள்ளைகளிடமே இத்தகைய பண்பு காணப்படும்.
உலகு சார்ந்தவர்களை உலகும் ஏற்றுக் கொள்ளும். உலகு சார்ந்தவைகள் எவையெவை? 1யோவான் 2:16 இவ்வாறு சொல்கிறது, “உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை தந்தையிடமிருந்து வருவன அல்ல. அவை உலகிலிருந்தே வருபவை”.
உலகினரை நாம் சார்ந்து வாழ வேண்டும், ஆனால் பற்றிக் கொண்டு அல்ல. “நமக்கோ விண்ணகமே தாய்நாடு” (பிலிப்பியர் 3:20) என்ற மனநிலை நமக்குள் இருக்க வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16:23-28) இயேசு உலகிலிருந்து பிரிந்து தந்தையை நோக்கி செல்கிறார். தந்தையின் அன்பை நமக்கு தருபவர். கேட்பதையெல்லாம் கொடுப்பவர். நமக்கு மகிழ்ச்சியை நிறைவாக தரக்கூடியவர். இயேசு, தந்தையிடம் நமக்காக பரிந்துப் பேசுபவர்.
அவரில் நம்பிக்கை கொள்வோர் தந்தையின் அன்பையும் பெறுவர் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவர்மீது நம்பிக்கை என்பது அவர் வார்த்தையின்படி வாழ்வதே. வார்த்தை வாழ்வாகும்போது அங்கு நம்பிக்கை மிகுதியாகிறது.
உலகப் பற்று நமது மனித நிலையை இழக்கச் செய்கிறது. உலகச் செல்வங்கள் நிலையானவை அல்ல என்பதை நாம் அறிந்திருந்தாலும் அதை சேர்த்து வைக்கும் வெறி நம்மில் மேலோங்கி இருக்கிறது.
உலகிலிருந்து, உலகை துறந்து இயேசு வாழ்ந்தது நாமும் உலகை துறந்து வாழ்வோம். இயேசுவைப் போல, விண்ணகத்தை நோக்கி நம் கண்களை உயர்த்துவோம்.
No comments:
Post a Comment