24_08

வெளியே இருந்து வரும் சட்டமும் உள்ளே இருந்து வரும் தீட்டும்...


பொதுக் காலம் 22ஆம் வாரம்

01.09.2024 - ஞாயிற்றுக் கிழமை

சட்டங்களும் கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டது மனிதனின் நல்வாழ்வுக்காக. ஒரு சட்டத்தை காப்பாற்றுவதற்காக மேலும் சட்டங்கள் இயற்றப்படுவது இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒன்றாக இருந்தாலும் அதன் பரிணாமங்கள் பல வகையாக இருக்கின்றன. சட்டம் பொதுவாக இருந்தாலும் அந்த சட்டத்திலிருந்து சில கிளைகள் துளிர்விட்டு, மற்றவரை காப்பாற்ற வேறொரு சட்டமாக அது மாற்றப்படுகிறது. (சட்டத்தில் ஓட்டை விழுகிறது). 

கடவுள் கொடுத்தது தூய்மைச் சட்டம். அந்த தூய்மை என்பது உள்ளத்தின் தூய்மையை குறிக்கிறது. (நான் உங்கள் கடவுள் நீங்கள் என் மக்கள் என்று உள்ளங்களுக்கு இடையே தூய சட்டத்தைக் கொணர்ந்தார் கடவுள்).

 ஆனால் உள்ளத்தில் தூய்மை இல்லாத மனிதர்கள், வெளிப்புற தூய்மை மீது அக்கறை கொண்டவர்கள் போல தங்களை காட்டிக் கொள்வதனால் கடவுள் கொடுத்த சட்டத்தை மாற்றக்கூடிய மனநிலை கொண்டவர்களாக மாறிப் போனார்கள். தங்களை மேலானவர்களாக காட்டிக்கொள்ள விரும்பியவர்கள், வெளிப்புறத்தில் தூயவர்களாக தங்களை காட்டிக் கொண்டார் இதுதான் உண்மை. 

இன்றும் அதே போல பல நபர்கள் வலம் வருவதை நாம் பார்க்கிறோம். தொட்டால் தீட்டு, பேசினால் தீட்டு, பொது இடத்திற்கு வந்தால் தீட்டு, கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டு, உண்மையின் சார்பாக இருந்தால் தீட்டு என்று தங்கள் உள்ள சிந்தனையில் தீட்டை வைத்துவிட்டு மற்றவர்களை தீட்டு உள்ளவர்களாக பார்க்கக் கூடியவர்கள் இத்தகைய மனிதர்கள்.

கடவுள் விரும்பாததை கடவுள் விரும்புவதாக சொல்லி இன்று பல சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன. சடங்கை நிறைவேற்றவில்லை என்றால் நீங்கள் கடவுளின் கட்டளையை மீறுகிறீர்கள் என்று சொல்லி மிரட்டலும் விடுக்கப்படுகின்றன.

 (கடவுளே வந்து இது தவறு என்று சொன்னாலும் கடவுளையும் குற்றம் காணும் மனநிலை இங்கு நம்மில் பலருக்கு உண்டு). இதை தான் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்களும் சதுசேயர்களும் மறைநூல் அறிஞரும் செய்தார்கள்.

இயேசு நல்லதை செய்த போதிலும் அவர் மீது பொய் குற்றம் சுமத்தினார்கள். வெளிப்படையாக இயேசு செய்தது நல்லது என்று தெரிந்திருந்தாலும் ஏன் அவரை தடுத்தார்கள்? தங்களை மீறி அவர் செயல்படுகிறார், தங்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்ற மனநிலை தான் இயேசு நல்லது செய்த போதிலும் இயேசுவுக்கு எதிராக அவர்களை செயல்பட வைத்தது.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (மாற்கு 7:1-8) பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவிடம் வந்து உம்முடைய சீடர் சிலர் தீட்டான, அதாவது கழுவாத கைகளால் உண்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்வி அக்கறையினால் கேட்கப்பட்ட கேள்வி அல்ல. மாறாக தாங்கள் தூய்மையை கடைப்பிடிப்பவர்கள் என்பதை இயேசுவின் முன்னால் எண்பித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி. சட்டங்களை மட்டும் தூயதென கடைபிடிப்பது சரியல்ல, உள்ளத்தை தூயதாய் காப்பதே சிறந்தது.

இந்த உலகில் தங்களை தூயவர்களாக நல்லவர்களாக காட்டிக்கொள்ள மனிதர்கள் போராடிக் கொண்டிருக்கிறார். இன்று ஒருவரிடம் தன்னை நல்லவராக காட்ட எண்ணுபவர், நாளை மற்றவரிடம் தன்னை நல்லவராக காட்ட நடிக்க வேண்டி இருக்கிறது. உள்ளத்தில் தூய்மை இருந்தால் யாருக்கும் நாம் நம்மை நல்லவர் என்று காட்ட வேண்டிய அவசியம் இல்லை. 

குறைகுடம் தான் கூத்தாடும். நிறையுள்ள உள்ளத்தில் மற்றவரின் குறை தெரியாது. (மற்றவர்கள் தவறு செய்கிறபோது இது தவறு என்று சுட்டிக் காட்டுவது வேறு, மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு என்று குறை கூறுவது வேறு). இயேசு தெளிவாக சொல்கிறார், "மனிதருக்கு உள்ளே இருந்து வெளியே வருபவை தான் மனிதரை தீட்டுப்படுத்தும். ஏனென்றால் மனித உள்ளத்தில் இருந்து தான் பரத்தமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றை செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன".

தனக்குள்ளே தூய்மையற்ற தீட்டை வைத்துக் கொண்டு மற்றவர்களை தீட்டு உள்ளவர்கள் என்று தீர்ப்பிடுவதற்கு நாம் யார்?

மட்கி மண்ணுக்குள் செல்லும் மனிதனின் உடல் சக மனிதனை சாதியம் எனும் தீட்டால், சமயம் என்னும் தீட்டால், நிறம் மொழி இனம் என்னும் தீட்டால் பிரித்தாளுகிறது.

மாற்றங்கள் வெளியே உருவாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நம் உள்ளத்தில் முதலில் உருவாக்கப்பட வேண்டும். 

கடவுளின் படைப்பு அனைத்தும் தூயது என்ற பார்வையும், கடவுள் அனைத்தையும் நல்லது என்று கண்டார் என்ற எண்ணத்தினால் தூண்டப்பட்டு நாமும் அனைத்திலும் நல்லதை காண வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் (இணைச் சட்டம் 4:1-2,6-8) ஒரு அருமையான இறைவார்த்தை கொடுக்கப்பட்டிருக்கிறது, "நாம் குரல் எழுப்பும்போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல் மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளை கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?". கடவுள் நம்மை தீட்டோடு படைக்கவில்லை. கடவுளின் படைப்பில் தீட்டு இல்லை. எனவே தான் கடவுள் மனிதரை தூய்மையற்ற வாழ்விற்கு அல்ல தூய வாழ்விற்கே அழைத்திருக்கிறார். (தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 4:7 இவ்வாறு சொல்கிறது, "கடவுள் நம்மை ஒழுக்கக்கேட்டிற்கு அல்ல, தூய வாழ்வுக்கே அழைத்தார்").

கடவுள் நியமங்களையும் முறைமைகளையும் சட்டங்களையும் எதற்காக கொடுத்திருக்கிறார்? அவற்றை மனிதன் கடைப்பிடித்து கடவுளுக்குரிய பாதையில் நடக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் இந்த சட்டங்கள் மனிதர்களை பிரிக்கிறது. உயர்த்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் சட்டங்கள் வேறுபட்டதாக இருக்கிறது. 

மதிப்பு மிக்கவர்களாக சமூகத்தில் தூக்கி நிறுத்தப்பட்டவர்களுக்கு சட்டம் வளைந்து வழிவிடுகிறது. 

இது கடவுள் வகுத்த சட்டமா? நிச்சயம் இல்லை. 

இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு (1:17-18,21-22,27) தன்னுடைய திருமுகத்தில் இவ்வாறு சொல்கிறார், நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம் ஒளியின் பிறப்பிடமான விண்ணகம் தந்தையிடமிருந்து வருகின்றன.

நம் கடவுள் தூயவராய் இருப்பது போல நாமும் தூய்மை நிறைந்தவர்களாய் இருக்க வேண்டும்.

இறைவார்த்தையை கேட்கிறவர்களாக மட்டும் இருந்து நாம் நம்மை ஏமாற்றி விடக்கூடாது என்பதை இரண்டு வாசகம் தெளிவுப்படுத்துகிறது.

- மனிதரில் பாகுபாட்டை ஏற்படுத்தி விட்டு கடவுளின் பந்தியில் அமர்வது நியாயமற்றது. 

- மனிதரில் ஏற்றத்தாழ்வுகளை கண்டு கடவுள் முன்னால் தாள் பணிவது ஏமாற்று வேலை

- சட்டங்களையும் கோட்பாடுகளையும் தூக்கிப் பிடித்துவிட்டு பணம், வசதி உள்ள பக்கம் சாய்வது இரட்டை வேடத்தின் அடையாளம். 

- ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல இறைவார்த்தைக்கு செவிமடுத்து உலக வாழ்க்கைக்கும் நம்மை கையளிப்பது தெளிவற்ற வாழ்வை உணர்த்துகிறது. 

- வெளிப்புறத்தில் தூயவரை போல இருந்துவிட்டு உட்புறத்தில் தீய எண்ணங்களுக்கு தீனி போடுவது போலி வாழ்க்கை. 

கடவுளின் சட்டம் நம்மை தூய்மைப்படுத்துவதற்கு அன்றி நம்மை பிளவுபடுத்துவதற்கு அல்ல. கடவுள் ஒவ்வொன்றிலும் நல்லதை கண்டார். நாமும் நிறைவின் வழியாக நிலை வாழ்வை காண்போம். தூய வாழ்வின் வழியாக தூயவரைக் கண்டு கொள்வோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...