பொதுக் காலம் 8ஆம் வாரம்
02.03.2025 - ஞாயிற்றுக் கிழமை
தவறை சுட்டிக் காட்டுவது வேறு, தவறை மட்டும் காண்பது வேறு. ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் செய்ததை அம்பலப்படுத்தி விடுவோம். ஒருவர் நம்மை எதிர்க்கிறார் என்றால் அவரை குறைக் கூறிக் கொண்டே இருப்போம்.
பார்வையற்றவர் பார்வையற்றவருக்கு எப்படி வழி காட்ட முடியாதோ அதே போல குறை மட்டும் உள்ளவர் குறையுள்ளவரை கரை சேர்க்க முடியாது.
நல்ல மரம் நல்ல கனியை கொடுக்கும் கெட்ட மரம் கெட்ட கனியை தான் கொடுக்கும். ஆனால் கெட்ட மனிதர் மனது வைத்தால் நல்லதையும் செய்யலாம்.
இங்கு நிரந்தரமான நல்லவரும் இல்லை நிரந்தரமான கெட்டவரும் இல்லை.
மாற்றம் நம்மிலிருந்து தொடங்கப்பட வேண்டும். மாறாத மனிதர் சமூகத்தில் மாற்றத்தை கொணர முடியாது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6:39-42) "வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்" என்கிறார் இயேசு.
நம் குறைகள் களையப்பட வேண்டும். நம் குறைகள் களையப்பட்ட பிறகு தான் நாம் மற்றவர்களின் கறைகளை கழுவ முடியும்.
நாம் செய்வது தவறு என்பதை ஒருவேளை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நாம் செய்வது தவறு என்பது வெளியில் இருப்பவர்களுக்கு நன்றாய் தெரியும்.
சபை உரையாளர் நூல் 7:20 இவ்வாறு சொல்கிறது, "குற்றமே செய்யாமல் நல்லதே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை".
நம்மைவிட மற்றவரை குறைவாக மதிப்பிடும் பழக்கம் மறைய வேண்டும். உட்புறம் தூய்மையானால் வெளிப்புறம் புதுப்பொலிவு பெறும்.
தவறுவது மனித இயல்பு அதை திருத்திக் கொள்வதும் மனித இயல்பாக இருக்க வேண்டும். நம்மை உறுத்திக் கொண்டிருக்கும் துரும்பை முதலில் அகற்ற முற்படுவோம்...
இன்றைய முதல் வாசகத்தில் (சீராக்கின் ஞானம் 27:4-7) ஒருவரின் பேச்சை/சொல்லை குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சல்லடையில் உமி தங்கி விடுவது மனிதரின் பேச்சில் மாசு படிந்துவிடுகிறது.
நம் உள்ளமும் செயல்களும் நம்மை யாரென்று காட்டிக் கொடுக்கிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1 கொரிந்தியர் 15:54-58) ஆண்டவருக்காக உழைப்பது வீண் போகாது என்கிறார் திருத்தூதர் பவுல். சாவைக் குறித்து அச்சமுற தேவையில்லை. அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்துக் கொள்ளும். சாவை வென்று நமக்கு வெற்றி அளித்துள்ளார் இறைவன். எதற்கும் அச்சமுறாது நாம் உறுதியாய், நிலையாய் நிற்க வேண்டும்.
No comments:
Post a Comment