24_03

உண்மையை மறைக்கும் வதந்தி...

 

01.04.2024 - திங்கட் கிழமை

“உங்கள் உள்ளம் தளராதிருக்கட்டும்; நாட்டில் உலவும் வதந்திகளைக் கேட்டுக் கலங்காதீர்கள்” எரேமியா 51:46

உலகில் உண்மையை மறைப்பதற்கு பல வதந்திகள் அல்லது பொய்யுரைகள் பரப்பப்படுகின்றன. இறுதியில் எது உண்மை? எது பொய்? என்று கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு அது போய்விடுகிறது.

நல்லவர்களை பொல்லாதவர்கள் என்று சித்தரித்து காட்டுவதற்கு பயன்படும் ஆயுதமே இந்த வதந்தி. உண்மையை மறைக்கும் கொடிய கொலைக் கருவி வதந்தி. ‘உண்மை உடனுக்குடன்’, ‘உள்ளது உள்ளப்படியே’, ‘உண்மையின் உரைக்கல்’ என்று பல்வேறு விளம்பரங்கள் செய்தித்தாளுக்கோ அல்லது தொலைக்காட்சி செய்திகளுக்கோ கொடுக்கப்படுகின்றன. ஆனால் அவை எல்லா வேளையிலும் உண்மையை பரப்புவதில்லை, உண்மைச் சம்பவத்தை படம் பிடித்துக் காட்டுவதில்லை.

அவர்கள் உண்மையை எடுத்துரைத்தால், அவர்கள் கண்டிக்கப்படுவார்கள், அவர்களுடைய உரிமம் ரத்துச் செய்யப்படும். எனவே தங்களை காப்பாற்ற சில வதந்திகள், பொய்யுரைகள் பரப்படுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (மத் 28:8-15) இயேசுவின் உயிர்ப்பை குறித்து வதந்திகள் பரப்பப்படுகின்றன. தலைமைக் குருக்கள், மூப்பர்கள் இணைந்து படைவீரருக்கு பணம் கொடுத்து, உண்மையை மாற்றி பேச சொல்கிறார்கள். நற்செய்தி பதிவு செய்கிறது, அன்று பரப்பப்பட்ட வதந்தி இன்று வரை யூதரிடையே பரவியிருக்கிறது. 

ஒரு தடவை பரப்பப்படும் வதந்தி, காலந்தோறும் நிலைத்திருக்கும் என்பதற்கு இது உதாரணம். நீதிமொழிகள் நூல் 24:28 சொல்கிறது, “தக்க காரணமில்லாதபோது அடுத்திருப்பாருக்கு எதிராகச் சான்று சொல்லாதே; உன் வாக்குமூலத்தில் அவருக்கு எதிராக உண்மையைத் திரித்துக் கூறாதே.” உண்மையை திரித்துக் கூறி அடுத்தவர் வாழ்வை சிதைப்பது பாவம்.

இயேசுவின் உயிர்ப்பில் பங்கெடுக்கிறோம். நாம் உண்மையை உண்மையென்று உரைக்கும் இயேசுவின் விழுமியங்களை நமதாக்கி, அவரை பிரதிபலிப்போம். நாம் உண்மையை உலகறிய தந்தியடிப்போம்… பொய்யெனும் வதந்தியை முறியடிப்போம்…


உயிர்த்தெழுந்த இயேசுவின் விழுமியங்கள்…


31.03.2024 - ஞாயிற்றுக் கிழமை

உயிர்ப்பு ஞாயிறு

“ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்…” - விடுதலைப் பயணம் 15:1

கொலை செய்து அவரது மூச்சை நிறுத்திவிட்டோம், இனி நமக்கு பிரச்சனை இல்லை என்று எண்ணியது அதிகார வர்க்கம். அவர் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிக்கிறார் என்பதை அவர்கள் அறியவில்லை. புரட்சியாளர்களின் உடல்கள் புதைக்கப்பட்டாலும் அவர்கள் விழுமியங்கள் ஒருநாளும் புதைக்கப்படுவதில்லை.

இங்கு இயேசுவின் உடல்கள் புதைக்கப்பட்டபோதிலும் அது மண்ணில் தங்கிவிடவில்லை. அவர் மாண்புடன் உயிர்பெற்றார். அவர் உடலோடு இணைந்து அவரது விழுமியங்களும் உயிர்பெற்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 16:1-7) இயேசுவின் உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கிக் கொண்டு மூன்று பெண்கள் கல்லறை நோக்கிச் செல்கிறார்கள். இது ஒரு துணிச்சல்மிக்க  செயல்பாடு. அவர்களுக்குள் இருந்தது ஒரே ஒரு கவலை தான், கல்லறை வாயிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்? கல்லறையில் படைவீரர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பார்களே என்ற செய்தி அவர்களுக்கு தெரிந்திருக்குமா? (மத்தேயு 27:66 - “அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்”). 

இந்த செய்தி அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். தெரிந்திருந்தால், அவர்கள் அங்குச் செல்ல அஞ்சி இருப்பார்கள், நமக்கு யார் கல்லை புரட்ட உதவுவார் என்ற கேள்வி எழுந்திருக்காது. (நறுமணப் பொருள் கொண்டு இறந்தவர்களின் உடலை பூசுவது அவர்களது பழக்கவழக்கம்). அவர்கள் எண்ணமெல்லாம் இயேசுவுக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பது தான். எனவே அவர்கள் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் கல்லறைக்கு செல்கிறார்கள். இவர்களின் துணிச்சல்மிக்க இந்த செயல்பாடு இயேசுவின் விழுமியம் தான். 

கல் அகற்றப்பட்டிருப்பதை கண்டு உள்ளே செல்கிறார்கள், வெண்தொங்கல் ஆடை அணிந்த ஒருவரை காண்கிறார்கள், திகிலுறுகிறார்கள். ‘இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார், அவர் இங்கே இல்லை, கலிலேயாவில் அவரை காண்பீர்கள்’ என்று அந்த நபர் சொன்னதும் அவர்கள் கல்லறையை விட்டு வெளியே வருகிறார்கள்.

அவர்கள் கல்லறையை விட்டு வெளியே வந்ததும் ஓட்டம் பிடிக்கிறார்கள், நடுக்கமுறுகிறார்கள், மெய்மறந்து போகிறார்கள், யாரிடமும் எதையும் கூறவில்லை. 

இன்று இயேசுவின் உயிர்ப்பைக் கொண்டாடுகிறோம். இன்று இயேசுவின் விழுமியங்களும் கொண்டாடப்பட வேண்டும். அவர் போதித்த, உதிர்த்த, விதைத்த வார்த்தைகள் வாழ்வாக்கப்பட வேண்டும். அன்பு, இரக்கம், மன்னிப்பு, அமைதி, நீதி, நேர்மை ஆகியவை வாழ்வாக்கப்பட வேண்டும்.

கல்லறையை எதிர்கொண்டு சென்றவர்களுக்கு முன் கல் என்ற தடங்கல் இருந்தது. அவர்கள் கல்லறையை நெருங்கி சென்றதும் தடங்கல் இல்லை ஆனால் தடுமாற்றம் இருந்தது. இயேசுவின் உயிர்ப்பை பற்றிய தடுமாற்றம். அவர்கள் கேட்ட செய்தியை மற்றவருக்கு அறிவிப்பதற்கான தடுமாற்றம்.

‘கண்டு நம்புவோரை விட காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்’ என்றார் இயேசு. இயேசுவின் உயிர்ப்பை நாம் கண்களால் காணவில்லை, ஆனால் கேட்டு அறிந்திருக்கின்றோம். அவரின் வாழ்வை நம்பிக்கையினால் கண்டுணர்ந்திருக்கிறோம். 

ஆனால் அந்த மூன்று பெண்களை போல, அறிவிக்க மறந்திருக்கின்றோம். அவர்களுக்குள் இருந்த தடுமாற்றம் அதிர்ச்சியாக, நடுக்கமாக, அச்சமாக இருந்தது. அதே போலத்தான் நமக்குள்ளும் இயேசுவின் விழுமியத்தை அறிவிக்க பல தடுமாற்றம்\தடைகள் இருக்கின்றன. 

- மற்றவர்களை போல இருந்துவிட்டு செல்வோம்

- நல்லவர்களாக இருப்பதால் என்ன பலன்?

- அவர் வாழ்ந்தார், இறந்தார், சென்றார். அவரை போல எனக்கு ஏன் துன்பம்?

- நன்மை செய்வதால் எனக்கு என்ன கைம்மாறு? என்ற கேள்விகளே கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடுவதற்கு தடையாக இருக்கிறது.

நாம் சற்று சிந்தித்து பார்த்தோம் என்றால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட தங்கள் எடுத்துக்காட்டான வாழ்வால் கடவுளை பிரதிப்பலிக்கிறார்கள். நம் வாழ்வு கிறித்தவர்கள் என்று பெருமிதம் கொள்வதோடு, வாடிக்கையான சடங்குகளை நிறைவேற்றுவதோடு நின்று விடுகிறதே என்பது தான் வருந்ததக்க விஷயம்.

தவக்காலம் எப்போது முடியும்? பாஸ்கா காலம் எப்போது வரும் என்ற எதிர்ப்பார்ப்பு தான் நம்மில் அதிகம். பாடுகள் வேண்டாம், மரணங்கள் வேண்டாம், தியாகங்கள் வேண்டாம், இழப்புகள் வேண்டாம். இவைதான் நாம் எதிர்பார்க்கும் கிறித்தவம். ஆனால் இயேசுவின் போதனை அதுவல்ல, இறப்பு இல்லாமல் உயிர்ப்பு இல்லை, தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை, துன்பம் இல்லாமல் மாட்சி இல்லை.

கிறிஸ்துவின் விழுமியங்கள் வாழ்வாக்கப்படாமல் கிறித்தவமும் இல்லை…

அன்று கிறிஸ்துவின் கதை முடிந்தது என்று ஒரு கூட்டம் எண்ணியது. ஆனால் கிறிஸ்துவின் கதை முடியவில்லை, அவர் உயிர்த்தெழுந்துவிட்டார், அவரின் விழுமியங்களோடு அவர் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கிறிஸ்துவின் விழுமியங்களோடு கிறித்தவர் என்ற பெருமைக் கொள்வோம்… உயிர்ப்பில் மகிழ்வோம்…


சிலுவையில் தியாகம்

 

29.03.2024 - பெரிய வெள்ளி

“நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்; நம்மை ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச் செய்தார்” - உரோ 4:25

இன்று புனித வெள்ளி. இயேசுவின் பாடுகளின் உச்சக்கட்டம். இரவு முழுவதும் ஏற்பட்ட கொடிய வேதனைகளுக்கு பிறகு மீண்டும் பிலாத்துவிடம் விசாரணை. தனக்குரிய கொலைக் கருவியை தானே தூக்கி கொண்டு ‘மண்டை ஓட்டு’ (எபிரேய மொழியில் கொல்கொதா) இடத்திற்கு நடந்து சென்றார். அவரது உடலிலும் காயங்கள் உள்ளத்திலும் காயங்கள். “அவரோ, நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்” - எசாயா 53:5

இயேசுவுக்கு இந்த வேதனையெல்லாம் பெரிதல்ல… இத்தனை நாள்கள் ஒறுத்தல் செய்து, தியாகம் செய்து, கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கை, மன்னிப்பு, அன்பு ஆகிய தியாகச் செயலோடு வாழ்ந்தவர்கள் நாளை முதல் பழைய வாழ்க்கைக்கு சென்று விடுவார்கள் என்பது தான் அவருக்கு ஏற்படும் பெரிய வேதனை.

‘வாருங்கள் அவரோடு இறப்போம்’, ‘நான் உம்மை மறுதலிக்க மாட்டேன்’ என்று சொன்னவர்கள் நிலைக் குலைந்து போனது போல, நாமும் நிலை தடுமாறிவிடுவோம் என்பது அவருக்கு தெரியும். ‘உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்று உறுதி கூறுகிறேன்’  என்று சொல்வதோடு அந்த தீர்மானம் முடிந்து விடுவது வேதனை தான்.

கைகளிலும் கால்களிலும், விலாவிலும் ஆணிகளின் காயங்கள். படைவீரர்களின் ஏளன பேச்சுகள், கடந்து செல்வோரின் ஆணவ பேச்சுகள், சீடர்களின் துணிச்சலற்ற தன்மை, முள்முடி வேதனை இவையெல்லாம் இயேசுவின் சுமைகள். இந்த சுமைகள் அவரில் ஏறுவதற்கு நாம் தான் காரணம்.

சிலுவையில் அவருடைய கடைசி 7 வார்த்தைகளை நினைவுக் கூருவோம்… வார்த்தைகளின் வலிகளை உணர்வோம்…

1. தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை - லூக்கா 23:34

2. நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் - லூக்கா 23:43

3. அம்மா, இவரே உம் மகன்… இவரே உம் தாய்…

4. என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? - மத்தேயு 27:46

5. தாகமாயிருக்கிறேன் - யோவான் 19:28

6. எல்லாம் நிறைவேறிற்று - யோவான் 19:30

7. தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் - லூக்கா 23:46

இறந்தும் வாழ்வை கொடுக்கிறார்… இழப்பின் மகிழ்வில் வலிகளை தாங்கிக் கொள்கிறார்… அவரின் தியாகம் நிறைந்த வாழ்வு நம் வாழ்வுக்கு முன்மாதிரி. 

வாடிக்கையான சடங்குகளை கொண்டாடுவதில் திருப்திபட்டு அதோடு நின்று போனோம் என்றால், அவர் தியாகம் நமக்கு தெரியாது.

அவரின் வலிகள் நமக்கு தெரியாது

அவரின் மதிப்பீடுகள் நமக்கு விளங்காது

அவரின் அன்பு நமக்கு புரியாது

அவர் நமக்காக இறந்தார் என்பதை உணரும் தருணம் தான், நாம் அவரின் தியாகத்தை நம் வாழ்வில் வெளிக்காட்டும் நேரம்.

அவரில் அவராக மாறுவோம்… சடங்குகளின் அர்த்தத்தை உணர்ந்து சரித்திரம் படைப்போம். இயேசுவின் விழுமியங்கள் இம்மண்ணில் தூவப்படட்டும்.

தலைமைத்துவம் + குருத்துவம் = இழப்பில் வாழ்வு


28.03.2024 - பெரிய வியாழன்

புனித வியாழன், Maundy Thursday, பெரிய வியாழன் என்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இன்றைய நாள் மூன்று சிறப்புகளைக் கொண்டுள்ளது.

1. தலைமைத்துவம் - பாதங்களை கழுவி பணிவிடை புரிவதில் வெளிப்படுகிறது

2. குருத்துவம் - இதை என் நினைவாகச் செய்யுங்கள், ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்ற அன்புக் கட்டளையை நிறைவேற்ற அழைப்பு

3. நற்கருணை - அப்பத்தையும் கிண்ணத்தையும் எடுத்துக் கடவுளுக்கு நன்றி சொல்லி, தன்னையே உணவாகத் தந்தது

தலைமைத்துவம் தனது பணியின் பணிவில் வெளிக் கொணரப்பட வேண்டும், குருத்துவம் தன்னை இழந்து பிறருக்கு வாழ்வு கொடுப்பதில் வெளிப்பட வேண்டும். நற்கருணை என்பது சமப்பந்தி என்ற உயரிய எண்ணம் உருவாக வேண்டும்.

இயேசு தன் சீடர்களின் பாதங்களை கழுவியது ஒரு முன்மாதிரியான செயல். அடிமைகள் தனது தலைவருக்கு செய்ய வேண்டிய ஒரு பணி தான், தலைவர் வெளியே சென்று வந்த பிறகு அவருடைய காலடிகளை கழுவுவது. அத்தகைய செயலை இயேசு முன்னெடுக்கிறார். அதோடு இயேசு நிறுத்தவில்லை, “ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடைமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” - யோவான் 13:14-15) என்கிறார். வார்த்தையால் சொல்லப்படுவதைவிட வாழ்க்கையால் எடுத்துரைப்பது அடுத்தவரை எளிதாக ஈர்க்கும். இயேசுவின் வாழ்வு ஈர்ப்பையும் கொடுத்தது, அவரை போல மற்றவர்களை இயங்கவும் வைத்தது.

‘இதை என் நினைவாகச் செய்யுங்கள்’ என்ற இயேசுவின் வார்த்தை குருத்துவத்தின் வழியாக இன்றும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. கல்வாரி பலி அனுதினமும் அரங்கேறுகிறது. திருப்பலியில் பலி பொருளும் அவரே… பலி இடுபவரும் அவரே… 

தன்னையே இழப்பதும் பிறர் வாழ்வு உயர உழைப்பதும் தான் நற்கருணைக் கொண்டாட்டத்தின் உட்பொருள். இயேசுவின் தியாகம் தன்னை கொடுப்பதில் வெளிப்பட்டது. நற்கருணை என்பது சமப்பந்தி. இந்த பந்தியில் உயர்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்ற வேறுபாடு இல்லை. சாதிய ஏற்றத் தாழ்வுகள் இல்லை, அடிமை தலைவன் என்ற நிலை இல்லை, முன்னுரிமையும் சிறப்பு தரிசனமும் இல்லை. அனைவரும் கிறிஸ்துவின் ஒரே திருவுடலையும் திருஇரத்தத்தையும் பெறுகிறோம்

முப்பெரும் நிகழ்வின் ஒன்றிப்புதான் இந்த புனித வியாழன். இந்த வியாழனில் மகிழ்ச்சியும் உண்டு துயரமும் உண்டு. ஒவ்வொரு விடுதலைக்குள்ளும் பல பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

1. இயேசு இரத்த வியர்வை வியர்த்தார் (லூக்கா 22:44)

2. தனது சீடரால் காட்டிக் கொடுக்கப்பட்டார் (மாற்கு 14:43-45) சீடரின் மறுதலிப்பு (மாற்கு 14:66-72) சீடரின் நிராகரிப்பு (மாற்கு 14:50-51)

3. இரவு முழுவதும் படைவீரர்களால் கொடிய வேதனை (மத்தேயு 26:67-68)

நாம் மீட்கப்பட பல்வேறு தியாகங்களை அவர் செய்தார். “அவரோ, நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்” - எசாயா 53:5 

புனித வாரத்தை பொருள் உணர்ந்து கொண்டாடுவோம். தற்காலிக மனமாற்றம், மனவருத்தம் அல்ல அவருடைய காயங்களை ஆற்றும் குற்றமுணர்ந்த மனமாற்றத்தை (பாவங்களுக்கு பரிகாரம் செய்யும் மனமாற்றத்தை) வெளிப்படுத்துவோம்.

சிந்தனைக்கு சில…

- கிறித்தவ விழுமியங்களை வாழ்வாக்க தவறிய தருணங்களை எண்ணிப் பார்ப்போம். தாழ்ச்சி, மன்னிப்பு, அன்பு, பொறுமை, நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்த தருணங்களுக்காக மன்னிப்பு கேட்போம்.

- நற்கருணைக் கொண்டாட்டத்தின் மகத்துவத்தை உணராமல் வாழ்ந்த தருணங்களை நினைவில் கொள்வோம். ஏற்றத்தாழ்வு நிறைந்த உள்ளத்தோடு சமப்பந்தியில் பங்கெடுத்த நாட்களுக்காக மன்னிப்பு கேட்போம்.

- குருக்களும் தவறக் கூடியவர்கள், அவர்கள் செய்த தவறை அவர்களிடம் எடுத்துக் கூறாமல், அடுத்தவர்களிடம் எடுத்துக் கூறி எள்ளி நகையாடிய தருணங்களை நினைவு கூர்வோம். குருக்களுக்கு எதிராக பேசிய தருணங்களுக்கு மன்னிப்பு கேட்போம்.

புனித வாரத்தில் மேற்கொள்ளப்படும் சில வாடிக்கையான செயல்கள்

ஒருவேளை அல்லது இருவேளை உணவுகளை தவிர்த்தல்

புலால் உணவுகளை தவிர்த்தல்

ஆலயம் சந்தித்தல், இறைவேண்டல் செய்தல்

சிலுவைப் பாதை செய்தல்

ஒப்புரவு வழிபாட்டில் பங்கெடுத்தல்

உழுந்தங் கஞ்சி, சுடு கஞ்சி செய்து மக்களுக்கு கொடுத்தல்

அலைபேசி, தொலைக்காட்சி உபயோகத்தை குறைத்தல்

கருப்பு நிற உடை அணிதல்

புலனத்தில் (வாட்ஸ் அப்) வருந்தக்க பாடல்கள் வைத்தல்

புனித வாரத்தில் மேற்கொள்ளப்படும் சில வேடிக்கையான செயல்கள்

பாடுப்பட்ட இயேசுநாதர் திருமுன் சுயபடம் (செல்ஃபி) எடுத்தல்

விளம்பரங்களை தேடுதல் (தன்னை எல்லோரும் பார்க்க வேண்டுமென காரியங்களை செய்தல்)

ஒறுத்தல் முயற்சிகளுக்கு உறுவிளைவிக்கும் படியாக குளிர்பானங்கள், மோர் வழங்குதல், அதை பெறுவோர் கூச்சலிட்டுக் கொண்டு, அடித்து பிடித்து அதை வாங்குதல்

வழிபாட்டில் பங்கெடுக்காது ஆலயத்திற்கு வந்தும் சுவரில் அமர்ந்தோ, சாய்ந்தோ நின்றுக் கொண்டு அலைபேசி உபயோகித்தல், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருத்தல்

திருப்பலி அல்லது வழிபாடு முடிந்து செல்லும் வழியில் உள்ள கடைகளில் நின்று கொண்டு உணவுகளை வாங்கி உண்ணுதல் (ஆலயத்திற்கு உள்ளே மட்டும் துக்கம் கொண்டாடும் குழுவினர்)

ஆலயத்தின் உள்ளே அல்லது ஆலய வளாகத்தில் நின்றுக் கொண்டு புறணி பேசுதல்

இயேசுவின் பாடுகளில் பங்கெடுக்காது பராக்குகளுக்கு இடம் கொடுப்பது (அடுத்தவர் உடை, நகை, நடை கண்டு வியப்பது 

இது இயேசுவின் பாடுகள்… ஆனால் சுமைகள் நம்முடையது… 

தூயவர் அவர்… பாவம் செய்தது நாம்…

மனம் வருந்துவோம்…


பணிவில் தொடங்குகிறது தலைமைத்துவம்


28.03.2024 - பெரிய வியாழன்

“உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்” - மத்தேயு 23:11

தலைமைத்துவம் என்பது தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கு பணிசெய்வதற்கே. பணிசெய்வதற்காக வருபவர்கள் தங்களுக்கு ஓட்டுக் கிடைக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவோ பணிவான, தாழ்வான பணிகளை சில நாள்களுக்கு செய்வர். பார்ப்பவர்களுக்கும் தெரியும், உடன் பயணிப்பவர்களுக்கும் தெரியும் இது நடிப்பு என்று. காரணம் தேர்தல் நேரத்தில் மட்டும் இத்தகைய தலைமைத்துவச் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

ஓட்டுக் கிடைப்பதற்கான எதை சொன்னாலும் செய்ய தலைவர்கள் முன்வருவார்கள், வாக்குறுதிகள் அள்ளி வீசப்படும், மற்றவர்களை பற்றி அவதூறு சொல்லப்படும், உங்கள் நலனுக்காகவே நாங்கள் என்று சொல்லப்படும்… இவையெல்லாம் ஒரு சில மாதங்களுக்கே. மனிதர்களும் தங்களுக்கு தற்காலிக ஆதாயம் கிடைப்பதால் பொய் வாக்குறுதிகளை நம்பி நம்பி ஏமாந்துப் போகிறார்கள்.

இது தலைமைத்துவப் பண்பா? நிச்சயமாக இது தலைமைத்துவ பண்பும் அல்ல… நல்ல தலைவரின் பண்புமல்ல. தன்னால் எதைச் செய்ய முடியுமோ அதை எடுத்துச் சொல்வதோடு, தான் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை காண்பது தான் நல்ல தலைமைத்துவம்.

இயேசுவின் தலைமைத்துவம் தனித்துவமிக்க தலைமைத்துவம். நாமும் (திருத்தந்தை, கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், கிறித்தவ நம்பிக்கையாளர்கள்…) அவருடைய தலைமைத்துவத்தை பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். பல நிலைகளில் அவரை பிரதிப்பலிக்க தவறிவிடுகிறோம். (“நீங்களோ நெறி தவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறி விழச் செய்தீர்கள். வேலியரோடு நான் செய்த உடன்படிக்கையைப் பாழாக்கிவிட்டீர்கள், என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்”. - மலாக்கி 2:8)

அருள்பொழிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தலைமைத்துவ பொறுப்பு இருக்கிறது என்று சொல்லி, இயேசுவின் தலைமைத்துவ பண்பை தட்டிக் கழிக்கும் நபர்களும் இங்கு உண்டு. தலைமைத்துவ பண்பு என்பது அதிகாரம் செலுத்துவதில் அல்ல, இயேசுவின் வாழ்வை பிரதிபலிப்பதில் இருக்கிறது. “நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” (யோவான் 13:15).

இயேசு அதிகாரத்தை அன்பாக மாற்றினார் - (ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் - யோவான் 13:34)

மன்னிப்பாக மாற்றினார் - (தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை - லூக்கா 23:34)

பணிவாக மாற்றினார் - சீடர்களின் பாதங்களை கழுவினார்

சமத்துமாக மாற்றினார் - ஒடுக்கப்பட்டவர்களை தேடிச் சென்றார், தொழுநோயாளிகளை தொட்டார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் இயேசு, பணிவை தன் அதிகாரமாக கொண்டு, தான் மட்டுமல்ல தன்னை பின்பற்றுவோரும் பணிவோடு பணிபுரிய அழைப்பு விடுக்கிறார். தலைவராக இருந்து அதிகாரம் செலுத்துவதும் மற்றவர்களை ஆட்டிப் படைப்பதும் எளிது. ஆனால் இயேசுவின் தலைமைத்துவத்தை கடைப்பிடிப்பது கடினம். 

இன்றைய நற்செய்தியிலிருந்து தியானிக்க சில வார்த்தைகள் (யோவான் 13:1-15)

இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது (யோவான் 13:1)

கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் (யோவான் 13:3),

ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடருடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார் (யோவான் 13:5)

உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை (யோவான் 13:11)

நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் (யோவான் 13:15)

                                - தொடரும்…

 

சந்தேக கேள்விகள்!


27.03.2024 - புதன் கிழமை

“உன்னை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறவர்களிடம் அறிவுரை கேளாதே; உன்மேல் பொறாமை கொள்வோரிடமிருந்து உன் எண்ணங்களை மறைத்துக்கொள்” - சீராக் 37:10

சந்தேகம் வாழ்வை அழிக்கக் கூடியது. சந்தேகப்படுவோரின் வாழ்க்கையும் நரக வேதனை தான், யார் மீது சந்தேகம் முன் வைக்கப்படுகிறதோ அவர்களுடைய வாழ்க்கையும் நரக வேதனை தான். ஒருவர் மீது சந்தேகம் வருகிறது என்றால் நேராக கேட்டு விட வேண்டும். சந்தேகப்படுவதற்கு அங்கு ஒன்றும் நடக்கவில்லை என்றால் அது நல்லது. தீர்வு கிடைக்கவில்லையென்றால் அதை நாம் தான் சரிசெய்ய வேண்டும். அதைவிட்டு விட்டு இறுதிவரை சந்தேகத்திலேயே நிலைத்திருப்பது நல்லதல்ல.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 26:14-25) நான் இயேசுவை காட்டிக் கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? என்று யூதாசு ஒரு கேள்வியை தலைமைக் குருக்களிடம் முன்வைக்கிறான். தனக்கு ஏதாவது கிடைக்குமா என்ற சந்தேகம். வெள்ளிக்காசு கிடைத்தது சந்தேகம் தீர்ந்தது. 

புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள், நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும்? என்று. நகருக்குள் சென்று இன்னாரிடம் போய் சொல்லுங்கள் என்கிறார். சீடர்களுக்கு பதில் கிடைத்தது.

உங்களுள் ஒருவன் என்னை காட்டிக் கொடுப்பான் என்கிறார் இயேசு, சீடர்கள் வருத்தமுற்றவர்களாய் ஆண்டவரே அது நானோ? என்று கேட்கிறார்கள், யூதாசும் தெரிந்தும் கேட்கிறான். நீயே சொல்லிவிட்டாய் என்று பதில் கொடுக்கிறார் இயேசு. 

சந்தேகங்கள் கேள்விகளாய் மாறும் போது அங்கு பதில் கிடைக்கிறது. சந்தேகங்கள் வெளிவராமல் தேங்கி இருக்கிறபோது அது ஆபத்தானதாக மாறுகிறது. 

சந்தேகங்களை, பிரச்சனைகளை பெரிதாக்குவதற்கான கேள்விகளாக நம் கேள்விகள் அமைய கூடாது. நம் குடும்பத்தில், துறவற இல்லத்தில் நமக்கு எதிராக இருப்போரை பற்றிய சந்தேகம் எழும்போது தயக்கம் இல்லாமல் நேரிடையாக கேட்டு விடுவோம். சந்தேகத்தோடு உடன் பயணிப்பதைவிட சந்தேகத்தை விட்டொழித்து சந்தோசத்தோடு வாழ்வது நல்லது.

 

குழந்தை மனம் வேண்டும்.... கிறிஸ்தவ பாடல்







 Watch Instagram page

_to_serve_in_his_love (Simon Aldus J.)

நம்முடைய மனம் குழந்தையின் மனமாக மாறியது என்றால் போட்டியும் இல்லை, பொறாமையும் இல்லை, வெறுப்புமில்லை கசப்புணர்வுமில்லை நம்முடைய வாழ்வில்.

குழந்தையின் முகம் வெளிப்புறத்தில் மட்டுமல்ல உட்புறத்திலும் மகிழ்ச்சியோடும் அன்போடும் இருக்கும். 

நாம் குழந்தைகளாக இருந்த போது நமக்குள் இருந்த அந்த மகிழ்ச்சி, அன்பு எல்லாம் வளர வளர குறைந்து கொண்டே போனது.

எல்லோருக்குள்ளும் அந்த குழந்தைத்தனம் குழந்தை உள்ளம் இருக்கத்தான் செய்கிறது.

அது அவ்வப்போது வந்து எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது. 

இயேசு சொல்கிறார், 'குழந்தைகளாய் மாறாவிடில் ஐயோ உங்களுக்கு கேடு'.

சீடர்களின் கேள்விகள்?



26.03.2024 - செவ்வாய்க் கிழமை

“உன் கடவுள் எங்கே? என்று என் பகைவர் நாள்தோறும் என்னைக் கேட்பது, என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல என்னைத் தாக்குகின்றது.” - திருப்பாடல்கள் 42:10

கேள்விகள் கேட்கப்படுவது சரிதான். ஆனால் எதற்காக கேள்விக் கேட்கப்படுகிறது என்பது முக்கியம். சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவா? பிரச்சினைகளைத் தீர்க்கவா? குழப்பங்களை உருவாக்கவா? நான் சொல்வது தான் சரியென்பதை நிரூபிக்கவா?

பல்வேறு தளங்கள் கேள்விகளால் நிறைந்திருக்கிறது. எல்லா கேள்விகளும் விடைகளால் நிரம்புவதில்லை. சிலவற்றிற்கு விடை உண்டு, சில கேள்விகள் விடைக்கான தொடர் தேடலில் இருக்கின்றன. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 13:21-33.36-38) உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்கிறார் இயேசு. அப்போது இயேசுவின் அன்புச் சீடரிடமிருந்து மற்ற சீடர்களின் சார்பாக (பேதுரு தூண்டிவிட)  எழக்கூடிய கேள்வி, “ஆண்டவரே அவன் யார்?”. அப்பத்துண்டைத் தோய்த்து யாருக்கு கொடுக்கிறேனோ அவன் தான் என்பதையும் இயேசு சொல்லிவிட்டார், ஆனால் சீடர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. 

இயேசுவின் உரைக்கு பிறகு சீமோன் பேதுரு கேட்ட கேள்விகள், ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்?, ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர முடியாது. இயேசு எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுக்கிறார், ஆனால் அதை வாசகர்களாக இருந்து நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் இயேசுவின் சீடர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. 

யாரை பற்றி கேள்விக் கேட்கப்பட்டதோ (யூதாசு) அவரும் தவறி விடுகிறார், யார் கேள்வி கேட்டாரோ (பேதுரு) அவரும் தவறி விடுகிறார். யூதாசு காட்டிக் கொடுக்கிறார், பேதுரு மறுதலிக்கிறார்.

எப்போதும் அவரவர் பிரச்சினையை அவரவர் அந்நேரத்தில் புரிந்துக் கொள்வதில்லை. நமக்குள்ளும் பல கேள்விகள் எழத் தான் செய்கிறது, என்னுடைய குடும்பத்திற்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? கடவுள் இருக்கிறாரா? கடவுளை நம்பி என்ன பயன்? எனக்கு மட்டும் ஏன் இத்தனை தோல்விகள்? எல்லாம் முடிந்து நாள்கள் சென்ற பிறகுதான் நமக்கு எல்லாம் புரிய ஆரம்பிக்கிறது. இயேசுவின் சீடர்களுக்கும் அப்படித்தான் நடந்தது. 

இயேசு தங்களோடு இருக்கும் வரை அவர்களால் எதையும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுடைய கேள்விகள் முற்று பெறாமலேயே இருந்தது. இயேசுவின் இறப்பிற்கு பிறகு ஒவ்வொன்றிற்கும் விடை கிடைத்தது.

கேள்விகளோடு மட்டும் நின்று விடாமல் அவற்றிற்கான தொடர் தேடலில் ஈடுபடுவோம். ஏனென்றால் விடை கிடைத்தால் மீண்டும் அதே தவறுகள், பிரச்சினைகள் நம்மில் உருவாகாமல் இருக்கும்.


வெறுப்பு மனப்பான்மையை விரட்டியடிக்க…


25.03.2024 - திங்கட் கிழமை

“விருப்பு வெறுப்பின்றித் தீர்ப்பிடுங்கள்; உயர்ந்தோனுக்கும் தாழ்ந்தோனுக்கும் ஒன்றுபோல செவிகொடுங்கள்; எந்த மனிதனுக்கும் அஞ்ச வேண்டாம், ஏனெனில், நீதித்தீர்ப்பு கடவுளுக்கே உரியது…” - இணைச் சட்டம் 1:17

ஒருவருக்கு அஞ்ச ஆரம்பித்தால் ஒவ்வொருவருக்கும் அஞ்ச வேண்டியிருக்கும். ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த ஆரம்பித்தால் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருக்கும். 

இயேசுவுக்கு யூதர்களையும் தலைமைக் குருக்களையும், யூதாசையும் மகிழ்ச்சிப்படுத்துவது நோக்கமல்ல… ஒருவேளை அது அவருடைய நோக்கமாக இருந்திருந்தால் அவர் சிலுவையை சுமக்க வேண்டியிருந்திருக்காது, எல்லோரையும் போல வாழ்ந்திருக்க முடியும். ஆனால் எது தேவையோ, எது சரியோ எது உண்மையோ அதை இயேசு அனுமதித்தார், செய்தார். 

பணஆசை தான் யூதாசின் காட்டிக் கொடுத்தலுக்கு காரணம் என திருவிவிலியம் சொல்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (யோவான் 12:1-11) “இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்திற்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டான். ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் அப்படி கேட்டான்.” என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

(காண்க மத்தேயு 18:28 + அடிக்குறிப்பு)

1 தெனாரியம் - 1 உரோமை வெள்ளி நாணயம், அப்படியென்றால் 300 தெனாரியம் - 300 உரோமை வெள்ளி நாணயங்கள்.

ஒருவேளை அது பணமாக கொடுக்கப்பட்டிருந்தால், அதை தனது தேவைக்காக அவன் எடுத்திருக்கக் கூடும். அது தனக்கு கைக்கூடவில்லையே என்ற வெறுப்பும் அவனிடம் இருந்தது. ஆசை யாரை தான் விட்டது. தன்னோடு இருப்பவரை காட்டிக் கொடுக்க அதுவும் சிலுவைச் சாவுக்கு கையளிக்க எப்படி தான் யூதாசுக்கு மனம் வந்ததோ!

உரோமையர்கள் யூதர்கள் மீது ஆட்சி, அதிகாரம் செலுத்துவதை யூதாசு (யூதர்கள்) விரும்பவில்லை, எனவே இயேசு என்னும் யூதரை உரோமையருக்கு எதிராக திருப்பி விடவும் அவன் காட்டிக் கொடுத்திருக்கலாம் என்ற கருத்தும் இங்கு உண்டு. இயேசு தன்னை காப்பாற்றிக் கொள்ள உரோமையரை அழித்துவிடுவார் என்றும் அவன் எண்ணினான். ஆனால் அது கைக்கூடவில்லை. இது யூதாசின் மறைவான திட்டம்.

மறுபுறம், தலைமைக் குருக்கள் இலாசரைக் கொன்றுவிட வேண்டும் என்ற அளவுக்கு இயேசு மீது வெறுப்பு கொண்டனர். ஏனென்றால் இயேசுவால் உயிர்பெற்ற இலாசரின் காரணமான, பலர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டனர்.

ஒருவரின் (மரியா இயேசுவின் அடக்க நாளை முன்னிட்டு அவருடைய கூந்தலால், இயேசுவின் காலடிகளை நறுமணத் தைலம் கொண்டு துடைத்தது) செயல் அவருக்கு பாராட்டை பெற்றுக் கொடுக்கிறது, ஒருவரின் (யூதாசு) சொல் அவரின் திருட்டு மனப்பான்மையை சுட்டுகிறது. நாமும் யூதாசை போல, தலைமைக் குருக்களை போல வெறுப்பு மனப்பான்மையோடு தான் இருக்கிறோம். பிடிக்காதவர்களை அழிக்கவும், எதிர்ப்பவர்களை தகர்க்கவும் திட்டம் தீட்டுகிறோம்.

“உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள்” (மத் 5:44), என்று சொல்லி வெறுப்பு மனப்பான்மையை விரட்டி அடித்தார் இயேசு. நாம் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டாம். சரியானதை சரியென்றும் தவறை தவறென்றும் ஏற்றுக் கொள்வோம்.


ஆர்ப்பரிப்பில் ஆரம்பமாகும் பாடுகள்…



 24.03.2024 - ஞாயிற்றுக் கிழமை

எதையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டால் அது சுமையாக தெரியாது. குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கு பிரசவ வலி வேதனை அல்ல, தன் பிள்ளைகளுக்காக உழைக்கும் தந்தையின் மன வலி வேதனை அல்ல, முதியோர் இல்லத்தில் இருந்தாலும் தன் பிள்ளைகளுக்காக செபிக்க மறவாத தாய், தந்தை உள்ளங்களின் வேதனை வெறுப்பல்ல.

சிலர் ஏமாற்றங்களை கண்டு நொந்துவிடுகிறார்கள், சிலர் வாழ பழகிக் கொள்கிறார்கள், சிலர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள். எதிர்ப்பு இல்லாத ஏற்றுக் கொள்தல்கள் நிறைந்த பலனை கொடுக்கத் தான் செய்யும். சிலருக்கு தன்னை இழந்து பிறர் வாழ்வை உயர்த்துவதில் மகிழ்ச்சி. சிலருக்கு இருப்பதை பகிர்ந்து கொடுப்பதில் மகிழ்ச்சி. பிறரின் தேவையை பூர்த்தி செய்வதில் ஒருசிலருக்கு மகிழ்ச்சி.

இப்படி அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வோரின் வாழ்வு ஆர்ப்பரிப்பில் (மகிழ்வில்) தொடங்குகிறது. இறுதியில் செய்த நன்மைக்கு கைம்மாறாக துன்பத்தில் முடிவடைகிறது. இறைவாக்கினர் எரேமியா கேட்பது போல இருக்கிறது நன்மை செய்தோரின் வாழ்க்கை, “நன்மைக்குக் கைம்மாறு தீமையா?” - எரேமியா 18:20

இவ்வுலகில் தான் நன்மைக்கு கைம்மாறு தீமை, நாம் எதிர்நோக்கி இருக்கும் அவ்வுலகில் நன்மைக்குக் கைம்மாறு நன்மை தான், தீமைக்குக் கைம்மாறு தீமை தான். 

செய்த (நன்மையான) செயலுக்கு எதையும் எதிர்பாராதவர்கள் துன்பம் வந்தாலும் துவண்டு போவதில்லை. இப்படிபட்ட வாழ்க்கை வாழ்வதற்கும் மனதில் உறுதி (தில்) வேண்டும். ‘இது உனக்கு தேவையா?’ என்று நம் உறவுகளே நம்மை கேட்கும். ‘இருக்கிறத வச்சி ஒழுங்கா வாழ தெரியல இவுங்களுக்கு’ என்று ஊரே எள்ளி நகையாடும். மற்றவர்கள் நமக்கு செய்த துரோகம் கூட நமக்கு வலிக்காது, ஆனால் வெந்த புண்ணில் இன்னும் வேதனையை கூட்டும் உடன் உறவுகளின் வார்த்தைகள் தான் வேதனையை அதிகரிக்கும்.

இயேசுவுக்கும் இது விதிவிலக்கல்ல…

இன்று பாடுகளின் ஞாயிறுக்குள் அடியெடுத்து வைக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகம் மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது (மாற்கு 14:1-15:47). நான்கு நற்செய்தியாளர்களை பொருத்தவரை, வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைகிறார் இயேசு. இது தனது பாடுகளின் தொடக்கம் என்பது இயேசுவுக்கு தெரியும். ஓசான்னா என்று சொன்னவர்கள் சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்! என்று சொல்வார்கள் என்பது இயேசுவுக்கு நன்றாகவே தெரியும்.

வாழ்க! வாழ்க! என்ற ஆர்ப்பரிப்போடு ஆரம்பாகிறது இயேசுவின் எருசலேம் நுழைவு. ஒழிக! ஒழிக! என்ற ஆர்ப்பரிப்போடு அரங்கேறுகிறது இயேசுவின் சிலுவை ஏற்பு.

“அவரோ, நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்” - எசாயா 53:5

(இன்றைய நாளின் நற்செய்தி தலைப்புகள் - இயேசுவை கொல்லச் சதித்திட்டம் தீட்டப்படுகிறது, இயேசுவை காட்டிக் கொடுக்க யூதாசு உடன்படுகிறான், பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது, யூதாசின் சூழ்ச்சி வெளியாகிறது, இயேசு தன்னையே உணவாக தருகிறார், பேதுருவின் மறுதலிப்பு முன்னறிவிக்கப்படுகிறது, கெத்சமணித் தோட்டத்தில் இயேசு ஆழ்துயரம் கொள்கிறார், இயேசு கைது செய்யப்படுகிறார், தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் குற்றவாளியாக நிற்கிறார், பேதுரு மறுதலிக்கிறார், இயேசு பிலாத்திடம் அழைத்துச் செல்லப்படுகிறார், இயேசுவுக்கு மரணத் தண்டனை விதிக்கப்படுகிறது, படைவீரர்கள் ஏளனம் செய்கிறார்கள், சிலுவையில் இயேசு, இயேசு உயிர்த் தியாகம் செய்கிறார், இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது). 

இயேசுவும் இந்த கேள்வியை கேட்டிருக்கலாம்!, “நன்மைக்குக் கைம்மாறு தீமையா?”

நீண்ட நெடிய துயரமும் பாடுகளும் இயேசுவை எவ்வளவு வேதனைக்கு உள்ளாக்கியிருக்கும். அன்று மட்டுமல்ல, இன்றும் இயேசுவின் பெயரால் செய்யப்படும் அநியாயங்கள், இயேசு விரும்பாததை இயேசு விரும்புவதாக செய்யும் செயல்கள் இயேசுவை வேதனைக்கு உள்ளாக்கத் தான் செய்கிறது. 

மனிதர்கள் முன் நல்லவர்களாக காட்டிக் கொள்வது முக்கியல்ல… கடவுளின் முன்னிலையில் நல்லவர்களாக இருப்பது தான் முக்கியம்.

மகிழ்வின் ஆர்ப்பரிப்பு தொடக்கம் தான். ஆர்ப்பரிப்பை தொடர்ந்து வரும் மிரட்டல்கள், இடையூறுகள், தடுமாற்றங்கள், துன்பங்கள் ஆகியவற்றில் நிலை தளர்ந்துவிடாமல் இருப்போம். அவ்வுலகில் நாம் பெறப் போகும் கைம்மாறு தான் ஆர்ப்பரிப்பின் நிறைவு.

நம் சுமைகளை ஒருபோதும் மற்றவர்கள் மேல் சுமத்தாத நல்வாழ்வு இயேசு விரும்பும் வாழ்வு. மற்றவர்களின் சிலுவைகளை சுமந்து அவர்களுக்கு உதவி செய்வதன் வழியாக, இயேசுவின் பாடுகளில் பங்கெடுப்போம். புனித வாரத்தில் மனித மாண்புகளை சுமந்தவர்களாய் பயணிப்போம்… 


சதித்திட்டம் தீட்டும் சதிகாரர்கள்


23.03.2024 - சனிக் கிழமை

“சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக் கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்” - நீதிமொழிகள் 12:20

மற்றவர்களை எப்படி அழிக்கலாம், மற்றவர்கள் நற்பெயரை எப்படி கெடுக்கலாம் என்று சதித்திட்டம் தீட்டப்படுகிறது. சிலவற்றை சதிகாரர்கள் சாதித்துவிடுகிறார்கள். அதன்பொருட்டு பெருமிதம் அடைகிறார்கள். நான்கு பேர் இணைந்து 5ஆவது நபருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டும்போது அந்த நால்வரும் மனதில் நினைக்க வேண்டியது, இன்று அடுத்தவர் வாழ்வை கெடுத்த நம் வாழ்வு, நாளை என்னவாகும் என்று?

கடவுள் கொடுத்த வாழ்வு அழகனாது. அதை மாசுப்படுத்திவிட்டு எதை நாம் பெரியதாக சாதிக்க போகிறோம்? நம் வாழ்வை எடுப்பதற்கே நமக்கு உரிமையில்லாதபோது, பிறர் வாழ்வை கெடுப்பதற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 11:45-57) “இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்து கொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்? இவனை இப்படியே விட்டு விட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர்…” என்று தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தை கூட்டி இயேசுவுக்கு எதிராக பேசுகிறார்கள். இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்று தலைமைக் குருவாய் இருந்த கயபா சொல்கிறார். இவை இயேசுவுக்கு எதிரான சதித்திட்டம்.

இனத்தை, மொழியை, நாட்டை, கட்சியை காக்க நான் தியாகம் செய்வேன் என்று யாரும் முன்வருவதில்லை, ஆனால் அப்பாவி மக்களை பலியாக்கி அதன் மூலம் குளிர்காயும் சதிகாரக் கூட்டம் அன்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது.

சொல்லால், செயலால் அடுத்தவரை அழிப்பதில் காட்டும் ஆர்வத்தை, அடுத்தவர் வாழ்வுநிலை உயர்வதில் காட்டுவோம். சதிகாரர்களாக அல்ல மற்றவர்களின் தேவையை சந்திப்பவர்களாக மாறுவோம்.


உண்மையே வெல்லும்


22.03.2024 - வெள்ளிக் கிழமை

“இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்” - திருப்பாடல்கள் 51:6

உண்மையை உண்மையென்று சொல்வதற்கு இங்கு போராட வேண்டி இருக்கிறது. எது சரி! எது தவறு! என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் நம் கர்வத்தை விட்டு கொடுக்க முடியாது என்பதால், நமக்கு எது சரியென தெரிகிறதோ அதை எல்லோரும் சரியென ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறோம். 

நம்முடைய நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வருவதற்கு மனம் வருவதில்லை. மற்றவர் பக்கம் உள்ள நியாயத்தையும் கொஞ்சம் காது கொடுத்து தான் கேட்போமே என்பதெல்லாம் இல்லை. எல்லாம் தன்மையம் தான். நாம் தேடிக் கொண்ட புகழ், பதவி, பட்டம் எல்லாம் நம்முடைய உண்மைத்தனத்தினால் பெறப்பட்டது என்றால் கடவுளுக்கு நன்றி. நம்மிடம் இருப்பவையெல்லாம், மற்றவர்களை அடக்கி ஒடுக்கி பெறப்பட்டவையென்றால் அதனால் என்ன பயன்யென்ன? 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 10:31-42) இயேசு தன்னை கடவுளாக்கிக் கொண்டார் என்று அவர்மேல் கல்யெறிய யூதர்கள் குழு முன்வருகிறது. இயேசு சொல்வது உண்மையாய் இருந்தும் அவருடைய செயல்கள் நற்செயல்களாய் இருந்தும் அவரை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் யூதர்கள். என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, என்னுடைய செயல்களையாவது நம்புங்கள் என்று இயேசு இறங்கி வருகிறார்கள். என் செயல்கள் வழியாக என் தந்தையின் விருப்பத்தை நான் செயல்படுத்துகிறேன் என்கிறார் இயேசு.

கடவுள் பயம் என்பது இப்போதெல்லாம் இல்லாமல் போய்விட்டது. தன்னையே கடவுளாக பலர் மாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் பின்னாலும் ஒரு கூட்டம் ஓடத் தான் செய்கிறது. அறிவு இருந்தும் அதை செயல்படுத்த முடியாமல் பலர் அலைந்து திரிகிறார்கள். ஒருசில மனிதர்களை கடவுளாக்கி, ஒருசில மனிதர்களை கீழ்த்தரமாக நடத்துகின்றனர்.

உண்மையாய் இருப்பவர்கள் மற்றவர்கள் பார்வையில் தோற்றுக் கொண்டிருப்பது போல தெரியும். ஆனால் அவர்கள் தோற்கவில்லை, துவண்டு போய் இருப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார்கள்.

கடவுளை ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்பவர்கள், கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களை (உண்மைக்காக குரல் கொடுப்பவர்களை) ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மைக்கு செவிமடுக்க வேண்டும். உண்மையின் பாதையில் நடக்க வேண்டும்.


வார்த்தைகள் மிக முக்கியம்


21.03.2024 - வியாழக் கிழமை

“என் வார்த்தைகளெல்லாம் நேர்மையானவை; உருட்டும் புரட்டும் அவற்றில் இல்லை” நீதிமொழிகள் 8:8

பேசக்கூடிய வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும். பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பதிவு செய்யப்படுகிறது. வார்த்தைகள் அடுத்தவருடைய மனதிலும் அலைபேசியிலும் பதிவு செய்யப்படுகின்றன, எனவே கவனம் தேவை. மனதில் பதிவு செய்யப்படுவது ஆறாத காயங்களாக மாறி விடுகின்றன. அலைபேசியில் பதிவு செய்யப்படுவது பின்னாளில் நமக்கே காயத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

சில வார்த்தைகள் ஆறுதல் அளிக்கின்றன, சில வார்த்தைகள் வாழ்வு கொடுக்கின்றன, சில வார்த்தைகள் கண்ணீர்விட வைக்கின்றன, சில வார்த்தைகள் போலியாக உள்ளன, சில வார்த்தைகள் ஏமாற்றுகின்றன. நம் வாயில் இருந்து வரும் வார்த்தைகளில் உருட்டும் புரட்டும் இருக்கின்றதா?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 8:51-59) இயேசு யூதர்களிடம், “என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்” என்கிறார். அதைக் கேட்ட யூதர்கள் அவரை பேய்ப்பிடித்தவன் என்கிறார்கள். யூதர்கள் இயேசுவை நோக்கி வீசுகின்ற வார்த்தைகள் கடினமானதாக இருக்கிறது. இயேசு தன்னை பெருமைப்படுத்துவதற்காக இதை சொல்லவில்லை. காரணம் மனிதர் தரும் பெருமை அவருக்கு தேவையன்று. இயேசுவை பெருமைப்படுத்துபவர் தந்தை கடவுள். 

யூதர்களுக்கு ஆபிரகாம் பெரியவராக தெரிகிறார். ஆனால் இயேசு பெரியவராக தெரியவில்லை. ஆபிரகாம் கடவுளின் வார்த்தையை நம்பி செயல்பட்டவர். கண்ணால் காணாததை நம்பியவர் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அவரைவிட பெரியவராக, அவருக்கு முன்பே இருக்கும் இயேசுவும், அவருடைய வார்த்தையும் யூதர்களுக்கு பெரிதாகப்படவில்லை.

இதற்கு காரணம், சொல்வதையெல்லாம் செய்பவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் நீங்கள் செய்வது அர்த்தமற்றிருக்கிறது என்று ஒருவர் சொன்னார் என்றால் அது யாருக்கும் பிடிக்காது. அதைத் தான் இயேசு செய்தார். தந்தையை தெரியும் என்கிறீர்கள் ஆனால் அவர் விரும்புவதை நீங்கள் செய்வதில்லை என்பது இயேசுவின் குற்றச்சாட்டு.

எதையும் கண்டுக் கொள்ளாமல், ஆதிக்க வர்க்கத்தினருக்கு ஆம் என்று சொன்னால் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லை. எதிர்த்து கேள்வி கேட்கின்ற போது நம்மை தீர்த்துக்கட்ட கூட்டம் கூடிவிடும்.

‘நான் உண்மையை பேசவில்லை என்றால் நான் பொய்களின் தந்தையாக இருக்கக்கூடிய சாத்தானுக்கு அடிமையாகி விடுகிறேன். அதன் குழுமத்தில் உறுப்பினர் ஆகிவிடுகிறேன்’ என்பார் புனித ஜெரோம் எமிலியானி.

(“நான் சொல்வதற்குச் செவிசாய்க்க உங்களால் இயலவில்லை. எனவேதான் நான் சொல்வதை நீங்கள் கண்டுணர்வதில்லை. சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி. அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும்போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில், அவன் பொய்யன், பொய்ம்மையின் பிறப்பிடம்” - யோவான் 8:43-44)

இறைவார்த்தைக்கு செவிமடுப்போம். இறைஒளியில் நடப்போம். யாருடைய ஏமாற்று வார்த்தைகளிலும் விழுந்துவிடாமல் இருப்போம்.

 

தந்தையின் பிள்ளைகளாக...


20.03.2024 - புதன் கிழமை

“நான் என் தந்தையின் அருமை மைந்தனாய், தாய்க்குச் செல்லப் பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்” - நீதிமொழிகள் 4:3

தந்தை மகன் உறவு என்பது குழந்தைப் பருவத்தில் அவ்வளவு இணக்கமாக இருக்கும். மகனின் குழந்தை பருவத்தில், தந்தை சிறந்த தலைவராக தெரிவார். வளர வளர உறவில் விரிசல் ஏற்படும். ஹீரோவாக தெரிந்த தந்தை எதிரியாக தெரிவார். மகனுக்கும் தந்தைக்கும் அவ்வளவாக உரையாடல், அன்பு, தகவல் பரிமாற்றங்கள் இருக்காது. (ஒரு சிலரை தவிர)

உளவியல் சொல்கிறது, மகளுக்கு தந்தையின்மீதும், மகனுக்கு தாயின்மீதும் அளவுக்கதிகமாக அன்பு இருக்கும். ஒருசில இடங்களில் விதிவிலக்கு உண்டு. தந்தையிடம் கேட்க நினைப்பதெல்லாம் தாயின் வழியாகவே பரிந்துரைக்கப்படும். மகன் நேரிடையாக தந்தையிடம் எதையும் கேட்பதில்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 8:31-42) தந்தை மகன் உறவில் பிரச்சினை இல்லை. தந்தையை மகன் பிரதிபலிக்கிறார். ஆனால் தந்தையை ஏற்றுக் கொள்வது போல, மகனை ஏற்றுக் கொள்வதில் தான் தயக்கம் இருக்கிறது. யூதர்கள் இயேசுவுக்கு எதிராக செயல்படுகிறார்கள். அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள்.. 

தந்தையிடமிருந்து நான் வந்தேன், தந்தையின் வார்த்தை என் வழியாக உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்று இயேசு சொல்கிறார். என் வார்த்தைகளை நீங்கள் நம்பவில்லையென்றால் என்னை அனுப்பிய தந்தையையும் நீங்கள் நம்பவில்லை என்கிறார் இயேசு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு ஒரு உருவகத்தை கையாளுகிறார், “பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக சொல்கிறேன். வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு”. அடிமை - பாவம் செய்தவர்கள் (கடவுளின் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாதவர்கள்) விடுதலை - மகன் (வார்த்தையை நம்புவோருக்கு விடுதலை வழங்குபவர் இயேசு). இந்த நம்புதல் என்ற வார்த்தை என்பது நம்புகிறேன் என்று சொல்வதில் வெளிப்படுவதல்ல, மாறாக நம்பிக்கை என்ற செயலில் வெளிப்படுவதே (கடவுளின் வார்த்தையின்படி நடப்பது, இருப்பது).

கடவுளை ஏற்றுக் கொள்கிறேன், நம்புகிறேன் என்றால் அவருடைய பிள்ளையாக மாற வேண்டும். தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதே இயேசுவின் பணிவாழ்வு. அவர் தனது பணியை தந்தை விரும்பும் வகையில் செய்து, தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவர் ஆனார்.

நாமும் நம்பிக்கை நிறைந்த செயல்களால் கடவுளுக்கு நெருக்கமானவர்களாவோம்… அவரின் பிள்ளைகளாவோம்…


புனித யோசேப்பு - அறிந்ததும் அறியாததும் (தொடர்ச்சி…)

 

8. 'மீட்பரின் பாதுகாவலர்' என்ற திருத்தூது ஊக்க உரையை வெளியிட்டவர் யார்? அதில் குறிப்பிடப்பட்டிருப்பது என்ன?

1989ஆம் ஆகஸ்ட் 15அம் தேதி, திருத்தந்தை புனித 2ஆம் யோவான் அவர்கள், ‘மீட்பரின் பாதுகாவலர்’ என்ற திருத்தூது ஊக்க உரையை வெளியிட்டார். புனித யோசேப்பு வாழ்வில் விளங்கிய பல்வேறு பண்புகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. (மீட்புத் திட்டத்தில் புனித யோசேப்பின் பங்கு, திருக்குடும்பத்தில் அன்பான தந்தை…)

9. திருப்பலியில் பயன்படுத்தப்படும் முதல் நற்கருணை மன்றாட்டில் புனித யோசேப்பின் பெயரை சேர்த்த திருத்தந்தை யார்?

1961ஆம் ஆண்டு திருத்தந்தை புனித 23ஆம் யோவான் இப்புனிதரின் பெயரை முதல் நற்கருணை மன்றாட்டில் இணைத்தார்.

காண்க…

10. அனைத்து நற்கருணை மன்றாட்டிலும் புனித யோசேப்பின் பெயரை சேர்த்த திருத்தந்தை யார்?

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2013 ஆம் ஆண்டு மே மாதம் புனித யோசேப்பு திருநாளன்று இப்புனிதரின் பெயரை, திருப்பலியில் பயன்படுத்தப்படும் அனைத்து நற்கருணை மன்றாட்டிலும் சேர்த்தார்.

காண்க…

11. எந்த திருத்தந்தை மே மாதம் 1ஆம் தேதியை புனித யோசேப்பின் விழாவாக அறிவித்தார்?

திருத்தந்தை 12ஆம் பயஸ். (யோசேப்பை தொழிலாளர்களின் பாதுகாவலர் என்று அறிவித்தார்)

12. புனித யோசேப்பு ஏன் முதுமை தோற்றத்தில் சித்தரிக்கப்படுகிறார்?

இறைவனின் அன்னையான மரியாவின் கன்னிமையை காக்கின்ற விதத்தில், புனித யோசேப்பு வயதில் முதிர்ந்தவராக சித்தரிக்கப்படுகிறார்... (அது உண்மையல்ல)

13. புனித யோசேப்பு ஆண்டு எப்போது சிறப்பிக்கப்பட்டது?

2020 டிசம்பர் 8 முதல் 2021 டிசம்பர் 8 வரை. (2020 டிசம்பர் 8அம் நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் ‘தந்தையின் இதயத்தோடு’ என்ற திருத்தூது மடலை வெளியிட்டார்.)

14. புனித யோசேப்பை குறித்த பாரம்பரிய இறைவேண்டல் (முதல் நூற்றாண்டிலேயே செபிக்கப்பட்டது)

ஓ! புனித யோசேப்பே,

நான் உம்மைப் பற்றி சிந்திக்க ஒருபோதும் சோர்வடைவதில்லை. 

இயேசு உங்கள் கரங்களில் உறங்குகிறார். 

அவர் உங்கள் இதயத்திற்கு அருகில் இருக்கும்போது நான் உம்மை அணுகத் துணிவதில்லை. 

என்பெயரால் அவரை நெருக்கமாக அழுத்தி, இயேசுவின் நேர்த்தியான நெற்றியில் எனக்காக முத்தமிட்டு, நான் இறக்கும் தருவாயை நெருங்கும்போது அந்த முத்தத்தை எனக்கு திருப்பிதர அவரிடம் கேளுங்கள். 

எங்கள் மரண வேளையில் உடனிருக்கும் புனித யோசேப்பே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். - ஆமென்


புனித யோசேப்பு - அறிந்ததும் அறியாததும்



1. புனித யோசேப்பு யார்?

தாவீதின் வழிமரபை சார்ந்தவர். யாக்கோபின் மகன். மரியாவின் கணவர், இயேசுவின் வளர்ப்புத் தந்தை.

2. புனித யோசேப்பு யாருக்கெல்லாம் பாதுகாவலர்?

உலகளாவிய திருஅவை, குடும்பங்கள், தந்தையர், கருவுற்ற தாய்மார்கள், பயணம் செய்வோர், புலம் பெயர்ந்தோர், வீடு விற்போர், வீடு வாங்குவோர், தச்சர், கைவினைஞர், பொறியியலாளர்கள், அனைத்து தொழிலாளர்கள்.

3. புனித யோசேப்பு எதற்கெல்லாம் முன்மாதிரி?

கற்பு, உழைப்பு, நேர்மை, உண்மை, கீழ்ப்படிதல், இறைநம்பிக்கை

4. புனித யோசேப்பிடம் காணப்படும் அடையாளங்கள் எவை?

லில்லி மலர் - அவருடைய தூய்மையின் அடையாளம்

கோடாரி, தச்சு சதுரம் - அவருடைய பணி, நேர்மையின் அடையாளங்கள்

5. ஏன் யோசேப்புக்கும் மரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது?

விவிலிய பார்வையில் - அன்னை மரியாவின் இழிநிலையை நீக்க (மத்தேயு 1:20 “…அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால் தான்”, அன்னை மரியாவையும் குழந்தையையும் காப்பாற்ற (மத்தேயு 2:14 குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்”)

புனித தாமஸ் அக்குவினாஸின் பார்வையில் - ‘கன்னியின் வயிற்றில் கருவாகத் தோன்றிய இறைமகனுக்கு ஆன்மிகத் தொட்டிலாக, யோசேப்பு - மரியா திருமணம் தேவைப்பட்டது. மரியாவுக்கு தவறான விதத்தில் குழந்தை பிறந்தது என்ற பேச்சு எழாமல் இருக்க அவ்வாறு நடந்தது”. 

6. எந்த திருத்தந்தை புனித யோசேப்பை குறித்து முதல் சுற்றுமடல் எழுதினார்? 

1889 ஆம் ஆண்டு,  திருத்தந்தை 13ஆம் லியோ அவர்கள்  Quamquam Pluries என்ற சுற்றுமடலில் புனித யோசேப்புக்கு மார்ச் மாதத்தில் சிறப்பு வணக்கம் செலுத்த அங்கீகாரம் கொடுத்தார்.

7. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித யோசேப்பை பற்றி கூறியது என்ன?

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  Patris Corde என்ற திருத்தூது மடலில், புனித யோசேப்பை பற்றி எழுதியுள்ளார். அதில் அவர் கூறியது, ‘இவ்வுலகில் மனிதனாக பிறந்து வாழ்ந்த இயேசுவுக்கு, புனித யோசேப்பு தந்தை கடவுளின் பிரதிபலிப்பாக இருந்தார். மகனை பாதுகாத்தார், வழிநடத்தினார்.’ தொடர்ந்து இணைச் சட்டம் 1:31-ஐ மேற்கோள் காட்டி தந்தை கடவுளை போல யோசேப்பு தன் மகனை தூக்கிச் சுமந்ததை எடுத்துச் சொல்கிறார், “பாலை நிலத்தில், நீங்கள் நடந்து வந்த வழிகளில் எல்லாம் இங்கு வந்து சேரும்வரை ஒருவன் தன் மகனைத் தூக்கிச் செல்வது போல உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைத் தூக்கி வந்ததைக் கண்டீர்களே!”  

தொடரும்….


நேர்மையின் தந்தை - புனித யோசேப்பு


19.03.2024 - செவ்வாய்க் கிழமை

“ஆண்டவர் எனது நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார்; என் மாசற்ற செயலுக்கு ஏற்பக் கைம்மாறு செய்தார்” - 2 சாமுவேல் 22:21

இன்றைய நாளில் கற்பின் பாதுகாவலரும் புனித கன்னி மரியாவின் கணவருமான புனித யோசேப்பின் விழாவை கொண்டாடுகின்றோம். தவக்காலத்தில் நினைவுக் கூரப்படும் பெரும் புனிதர் புனித யோசேப்பு.

“அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிட திட்டமிட்டார்” - மத்தேயு 1:19 

மோசேயின் சட்டப்படி கணவனை அறியாமல் ஒரு பெண் கருத்தரித்தார் என்றால், அவர் கல்லால் எறிந்துக் கொல்லப்பட வேண்டும். (காண்க இணைச்சட்டம் 22:20-24) 

இந்த சட்டங்கள் யோசேப்புக்கு நன்கு தெரியும். அவர் கடவுள் முன்னிலையில் நேர்மையுடன் இருந்தார். எனவே இரண்டு காரியங்களை செய்கிறார். 1. தம் மனைவியை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கிவிட திட்டமிடுகிறார். 2. கடவுளின் தூதர் கனவில் எச்சரித்ததும் தம் மனைவியை ஏற்றுக் கொள்கிறார். 

மறைவாக விலக்கி விட எண்ணியதன் நோக்கம், மரியாவுக்கு எந்தவொரு தீங்கும் நேர கூடாது என்பதனால் தான். இருந்தபோதிலும் கனவுகளின் வழியாக கடவுளின் செய்தியை, உண்மையை பெற்றுக் கொண்டதும், தன் நிலைப்பாட்டை மாற்றிப் கொள்கிறார். அவரது நேர்மை அவரை திருக்குடும்பத்தின் தலைவராக்கியது.

கொன்ஸ்தாந்திநோபிள் பேராயரான புனித யோவான் கிறிஸ்தோஸ்தம் புனித யோசேப்பை பற்றி இவ்வாறு கூறுவார், “ திருக்குடும்பத்தின் தலைவர் என்ற மிக மேலான பொறுப்பைப் பெற்றிருந்த யோசேப்பு, மிகுந்த தாழ்ச்சியும் தன்னடக்கமும் நிறைந்தவராக வாழ்ந்தார்”.

திருக்குடும்பத்தின் தலைவரான புனித யோசேப்பு தனது நேர்மையினால் அன்னை மரியாவையும் குழந்தை இயேசுவையும் துன்ப வேளையில் காப்பாற்றினார். கடவுளின் சொல்லிற்கிணங்க வழிநடத்தினார்.

பழைய ஏற்பாட்டு யோசேப்புக்கும் புதிய ஏற்பாட்டு யோசேப்புக்கும் சில தொடர்புகள் இருக்கின்றன..

- பழைய ஏற்பாட்டு யோசேப்பு கனவுகளுக்கு விளக்கம் கொடுத்தார், புதிய ஏற்பாட்டு யோசேப்பு கனவுகளின் வழியாக விளக்கத்தை பெற்றார்.

- பழைய ஏற்பாட்டு யோசேப்பு மக்களை பஞ்சத்தில் இருந்து காத்தார், புதிய ஏற்பாட்டு யோசேப்பு தன் குடும்பத்தை தீமையிலிருந்து காத்தார்.

- பழைய ஏற்பாட்டு யோசேப்பு தன் சகோதரர்களை மன்னித்தார், புதிய ஏற்பாட்டு யோசேப்பு தன் மனைவியை ஏற்றுக் கொண்டார்.

- இருவர் சொல்லிலும் செயலிலும் நேர்மை வெளிப்பட்டது.

இன்றைய நாளின் புனிதர் நமக்கு விடுக்கும் அழைப்பு என்பது, நேர்மைத்தனம் என்பது நேர்மையான செயல்களிலும் கடவுளுக்குகந்த வழிகளிலும் வெளிப்பட வேண்டும்.

நேர்மையாளர்களை ஊக்குவிப்போம்… நேர்மையாய் இருக்க முயற்சிப்போம்…


மன்னிப்பு என்னும் தீர்ப்பு

 18.03.2024 - திங்கட் கிழமை

“நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்; என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும்”. - எசாயா 50:8 

‘நாம் நம்முடைய தவறுக்கு வாதாடுபவராகவும் பிறருடைய தவறுக்கு நீதிபதியாகவும் இருக்கிறோம்’ என்று ஒரு சொல்லாடல் உண்டு. நாம் நம்முடைய தவறை ஒருபோதும், பொதுவெளியில் அறிக்கையிடுவதில்லை, ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் அடுத்தவர் செய்த சிறிய செயலையும் ஊதி ஊதி பெரியதாக்குகிறோம், அவர்களை தீர்ப்பிடுகிறோம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 8:1-11) மறைநூல் அறிஞரும் பரிசேயரும் ஒருதலை சார்பாக செயல்பட்டனர். இங்கு அந்த விபசாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை அழைத்து வந்ததன் நோக்கம் இயேசுவை சிக்க வைப்பதற்கு தான். விபச்சாரத்தில் ஈடுப்பட்டவர்களை கல்லால் எறிந்துக் கொல்ல வேண்டும் என்பது மோசேயின் சட்டம். நீர் என்ன சொல்கிறீர்? என்று இயேசுவை சிக்க வைக்க பார்த்தனர். 

விபசாரத்தில் பிடிப்பட்ட அல்லது ஈடுப்பட்ட ஒரு பெண்ணை அழைத்து வந்தனர் பரிசேயர், மறைநூல் அறிஞர். ஆனால் அவரோடு இணைந்து தவறு செய்த ஆண் ஏன் இழுத்து வரப்படவில்லை? காரணம் அது ஆணாதிக்க சமுதாயம். இருவர் இணைந்து தவறு செய்தாலும் அதில் பெண் தான் பழியைச் சுமக்க வேண்டும்.

இயேசு அவர்களின் சூழ்ச்சிகளை அறிந்தவராய் செயல்பட்டார். உங்களுள் பாவம் செய்யாதவர் இப்பெண்மேல் கல் எறியட்டும் என்றார். ஒருவரையும் காணவில்லை. அவர்கள் தீர்ப்பிடவில்லையா நானும் தீர்ப்பிடவில்லை, இனிமேல் பாவம் செய்யாதீர் என்று ஒரு தீர்ப்பை கொடுக்கிறார் இயேசு. 

மன்னிப்பு வழியாக பரிவை காட்டி, புதுவாழ்வு வாழ அழைப்பு விடுத்தார் இயேசு.

வெளிப்படையாக பெரிய தவறுகளை செய்தவர்கள், சிறிய தவறுகளை செய்தவர்களுக்கு அல்லது தவறுகளை செய்யாதவர்களுக்கு தீர்ப்பு வழங்குவது இன்றும் தானே இயல்பாக நடைபெறுகிறது. சில தீர்ப்புகள் பலரது வாழ்க்கையை அழித்திருக்கிறது, மேலே எழும்ப முடியாமல் தடுத்திருக்கிறது.

 “நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.” - மத்தேயு 7:2

நம் நிலை உணர்வோம். மன்னிப்பு என்னும் தீர்ப்பை மற்றவர்களுக்கு கொடுப்போம். ஏனென்றால் தண்டனை என்னும் தீர்ப்பு ஒருவரை முழுவதும் திருத்தாது. (ஒருவர் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்) தண்டனை மட்டும் எப்பொழுதும் தீர்வாகாது.


இயேசுவின் நேரம் வந்துவிட்டது

17.03.2024 - ஞாயிற்றுக் கிழமை

“கடவுளுக்கு அஞ்சுங்கள்; அவரைப் போற்றிப் புகழுங்கள். ஏனெனில் அவர் தீர்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது. மண், கடல், நீருற்றுகள் ஆகியவற்றைப் படைத்தவரை வணங்குகள்” என்று அவர் உரத்த குரலில் கூறினார்” - திருவெளிப்பாடு 14:7

நம்முடைய பின்னணியில் நேரம் என்பது நல்ல நேரம், கெட்ட நேரம் என்று பொருள்படும். ஆனால் இயேசுவின் பார்வையில் நேரம் வந்துவிட்டது என்பது பாடுகளின் தொடக்க புள்ளி அல்லது மாட்சியுறும் நேரம். கானாவூர் திருமண விழாவில், “அம்மா அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே என்றார்” - யோவான் 2:4 இங்கு நேரம் என்பது இயேசு மாட்சியுறுதலுக்கான நேரம். 

யோவான் நற்செய்தி 7:30இல் “அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை”. இங்கு நேரம் என்பது காட்டிக் கொடுக்கப்பட வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை என்பதை குறிக்கிறது. 

மாட்சியுறுதல் என்றால் என்ன? இயேசு தன்னை இறைமகனாக வெளிப்படுத்தும் தருணம், கடவுள் தன் மகனுக்கு மதிப்பளிக்கும் நேரம், இயேசுவின் பாடுகள் நெருங்கும் வேளை, சிலுவை சாவை ஏற்கும் நேரம், இறந்து உயிர்த்தெழுதல். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 12:20-33) மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்கிறார். நேரம், மாட்சி என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது. உயிரை இழக்கும் தருணம் வந்தபோதிலும் கூட, மடியும் கோதுமை மணி மிகுந்த விளைச்சலை கொடுக்கும் என்பதை தெளிவுப்படுத்துகிறார். இழப்பதில் தான் மற்றவருக்கான வாழ்வு இருக்கிறது என்பதை நினைவுப்படுத்துகிறார். பிறரின் நலனில் தன்னை கரைப்போர் நிலைவாழ்வுக்கு உரியவர் ஆவார் என்கிறார்.

தனது நேரம் நெருங்கி வருவதைக் குறித்து இயேசு கலங்குகிறார். அவருடைய கலக்கம் அவருடைய மனித நிலையிலிருந்து வெளிப்படுகிறது. அவருடைய உள்ளம் கலக்கமுற்றிருக்கிறது. இந்த வேளையில் “மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்” என்று தந்தை மகனை தேற்றுகிறார், உயர்த்துகிறார், மகிமைப்படுத்துகிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் (எரேமியா 31:31-34) இஸ்ராயேல் வீட்டாரோடு கடவுள் செய்யவிருக்கும் புதிய உடன்படிக்கை பற்றி பேசப்பட்டுள்ளது. உடன்படிக்கை இரண்டு நிலைகளில் இருந்தது. 1. வாக்குறுதியின் உடன்படிக்கை 2. சட்ட உடன்படிக்கை

1. வாக்குறுதியின் உடன்படிக்கை என்பது கடவுள் ஆபிரகாம், மோசே, யோசுவா, இஸ்ராயேல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள். (உன்னை பெரிய இனமாக்குவேன் தொடக்க நூல் 12:2, எனது பிரசன்னம் உன்னோடு செல்லும்- விடுதலைப் பயணம் 33:14, இன்னும் பல)

2. சட்ட உடன்படிக்கை - மோசே வழியாக கடவுள் கொடுத்த பத்துக் கட்டளை (விடுதலைப் பயணம் 20:1:17)

இன்றைய முதல் வாசகத்தில் அதையும் கடந்த, புதிய உடன்படிக்கை பற்றி பேசுகிறார் கடவுள். நான் அவர்கள் கடவுள்; அவர்கள் என் மக்கள். என்னை அவர்கள் அறிந்து கொள்வர், எனக்குரிய வழியில் அவர்கள் நடப்பர் என்பது கடவுளின் விருப்பம். இவ்வாறு நடப்பதனால் அவர்களின் பழைய பாவங்கள் நினைவுக் கூரப்படாது என்கிறார் ஆண்டவர்.

இரண்டாம் வாசகத்தில் (எபிரேயர் 5:7-9) இயேசு தனது பாடுகளை குறித்து கண்ணீர் சிந்தி மன்றாடும் நிகழ்வு கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்ப்படிதல் வாயிலாக மகன் தந்தையை மாட்சிப்படுத்தினார். தந்தை மகனுக்கு செவிசாய்த்து அவரை மாட்சிப்படுத்தினார். மகனின் கீழ்ப்படிதல் நாம் அனைவரும் மீட்படையக் காராணமாக இருக்கிறது.

இயேசுவின் இறப்பு கோழைத்தனத்தின் வெளிப்பாடல்ல, மாறாக தியாகத்தின் வெளிப்பாடு… 

கோதுமை மணியை போல நாமும் மடிந்து மற்றவர் நல்வாழ்வு பெற பலன் தருவோம். நம்முடைய கீழ்ப்படிதல் கடவுளுடைய உடன்படிக்கைக்கு செவிசாய்ப்பதிலும், அவருடைய திருவுளத்தை நிறைவேற்றுவதிலும் வெளிப்படட்டும்.


ஏற்றுக் கொள்வதற்கு பின்புலம் தேவையல்ல…

 


16.03.2024 - சனிக் கிழமை

“இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை” - லூக்கா 4:24

ஒருவர் நம் சார்பாக இல்லையென்றால் அவரை இழிவுப்படுத்துவதற்காக எதையும் சொல்லலாம் என்பது மனித சிந்தனை. நீயும் அவர்களில் ஒருவன் தானே! நீ அங்கிருந்து வருபவன் தானே! நீ அந்த ஊரைச் சார்ந்தவன் தானே! நீ அந்த மனிதருக்கு நெருக்கம் தானே! அதனால் நீ அவர் சார்பாக தான் பேசுவாய்! 

இப்படியெல்லாம் ஒருவரை பற்றி பொது இடத்தில் பேசும் போது அவர் கூனிகுறுகுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால், இப்படி ஒரு சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 7:40-53) பரிசேயருள் ஒருவரான நிக்கதேம் பரிசேயரிடம் “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டார். உடனே மற்ற பரிசேயர்கள் “நீரும் கலிலேயரா என்ன? என்று கேட்டு அவரது வாயை அடைத்தனர். தங்களுக்கு ஆதரவாக பேசாதவர்கள் தங்களுக்கு எதிரிகள், அவர்களை கலிலேயர் என்று முத்திரை குத்திவிடுவர்.  

யூதர்களுக்கு கலிலேயரை பிடிக்காது. அவர்களை கீழ்த்தரமாக நோக்குவர். தங்களைவிட மதிப்புக் குறைந்தவராக கருதுவர். இயேசு பிறப்பில் யூதர் என்றாலும் அவர் வளர்ந்த இடம் கலிலேயாவிலுள்ள நாசரேத்து (மத்தேயு 2:21-23) என்பதால் யூதர்கள் இயேசுவையும் வெறுத்தனர்.

ஆகவே தான், இயேசுவின் பின்புலத்தை வைத்து அவரை ஏற்க மறுத்தனர். இன்றைய நாளின் நற்செய்தியின் விவாதமும் அதுதான். சிலர் அவரை மெசியா என்றனர், சிலர் கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார் என்றனர், சிலர் தாவீதின் ஊரிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது? என்றனர். இவ்வாறு அவர்களிடையே கருத்து வேறுபாடும் இயேசுவை ஏற்றுக் கொள்வதற்கான தயக்கமும் இருந்தது. 

ஒருவரது பின்புலம் அறியாமல் ஒருவரது வார்த்தைக்கு செவிமடுக்கும் பழக்கம் இப்போதெல்லாம் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒருவர் புதிய பொறுப்பு ஏற்கிறார் அல்லது புதிய பணித்தளம் செல்கிறார் என்றால் கேட்கப்பட கூடிய கேள்விகள் இரண்டு, 

1. அவர் எந்த ஊர்? 

2. அவரு என்ன ஆளு?

நம்மிலும் பின்புலம் பார்த்து செவிமடுக்கும் பரிசேயர் உண்டு. “எவரும் இரு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது. …நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” - மத்தேயு 6:24

கடவுளை ஏற்றுக் கொள்ள மற்ற குப்பைகளை விட்டுவிடுவோம். ஒருவரின் பின்புலத்தைவிட ஒருவரின் நன்னடத்தை சிறந்தது.


இயேசுவை தெரியுமா?

15.03.2024 - வெள்ளிக் கிழமை 

“உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்” - பிலிப்பியர் 3:8

இயேசுவை புரிந்துக் கொள்வது மிக கடினம். நற்செய்தியின் சில இடங்களில் இயேசுவை பற்றி இவ்வாறு கொடுக்கப்பட்டிருக்கும், “…இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்” -யோவான் 5:13, “…இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்” -யோவான் 8:59,  “…அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்” -யோவான் 10:39

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (யோவான் 7:1,2,10,25-30) “… அவர்கள் அவரைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை” என்று வாசிக்கிறோம். இவையெல்லாம் இயேசுவின் தப்பித்துச் செல்லும் நிலை என்று புரிந்துக் கொள்ளக் கூடாது. மாறாக தான் மாட்சி (காட்டிக் கொடுக்கப்பட வேண்டிய நேரம்) பெற வேண்டிய நேரம் வரும்வரை, கயவர்கள் கையில் அகப்படாமல் இருந்தார் என்று புரிந்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய நற்செய்தியின் தொடக்கப் பகுதியில் ‘இயேசுவை கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால்’ என்று  தொடங்கி, நற்செய்தி இறுதிப் பகுதி ‘அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை’ என்று நிறைவு பெறுகிறது. விடுப்பட்ட நற்செய்தி பகுதியில் (யோவான் 7:11-24) சிலர் இயேசுவை நல்லவர் என்றனர், சிலர் மக்கள் கூட்டத்தை ஏமாற்றுகிறார் என்றனர், சிலர் யூதர்களுக்கு அஞ்சியதால் இயேசுவை பற்றி வெளிப்படையாக பேசவில்லை. 

நமக்கும் இயேசுவை தெரியும் ஆனாலும் அவரை பற்றி முழுமையாக தெரியாது. இயேசு நல்லவர் ஆனால் அவரை பின்பற்ற வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. அவரை போல நல்லது செய்யும் எண்ணமோ நமக்கு இல்லை. இவைகள் தான் நம்முடைய நிலைப்பாடுகள். 

(திருத்தூதர் பணிகள் நூல் 19:15இல், “பொல்லாத ஆவி அவர்களிடம் (பேயோட்டும் யூதரிடம்) மறுமொழியாக, “இயேசுவையும் எனக்குத் தெரியும்; பவுலையும் எனக்குத் தெரியும்; ஆனால் நீங்கள் யார்?” என்று கேட்டது. நாம் இயேசுவை தெரிந்திருந்தும் தெரியாதவர்கள் போல இருக்கிறோம். ஆனால், பேய்கள் கூட இயேசுவை தெரிந்து வைத்திருக்கின்றன.)

யூதர்களுக்கு, இயேசு ஓய்வு நாள் சட்டத்தை மீறியது தான் குற்றம், அவர் நன்மை செய்தது குற்றமில்லை. நன்மை செய்ய காலமும் இடமும் தேவையில்லை, இயேசு காலத்தையும் இடத்தையும் கடந்தவர் என்பதையும் அவர்கள் உணரவில்லை.

“வழியும் உண்மையும் வாழ்வும் நானே” (யோவான் 14:6) என்கிறார் இயேசு

இயேசுவை பின்பற்றுகிற போது நாம் அவரை தெரிந்துக் கொள்ள முடியும். அவரை தெரிந்துக் கொண்டால்,  அவரோடு நாம் இணைந்து இருக்க முடியும்.

இயேசுவை அறிவோம்… அவரை அறிவிப்போம்…


இயேசுவின் செயல்களே அவருக்கு சான்று…


14.03.2024 - வியாழக் கிழமை

“மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதை விட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார்” - 1யோவான் 5:9

ஒருவர் நல்லவர் என்பதற்கு அவருடைய நற்சொற்களும் நற்செயல்களும் சான்று பகரும். அதே போல ஒருவர் தீயவர் என்பதை அவருடைய தீய சொற்களும், செயல்களும் வெளிக்காட்டிவிடும். தனக்கு பிடிக்காதவர்கள் நல்லதே செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பாங்கு தேவை. 

தங்களை நல்லவர் போல காட்டிக் கொள்ளும் சிலரும் இங்கு இருக்கிறார்கள். நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியது நல்லவர்கள் போல தங்களை காட்டிக் கொள்கிறவர்களை அல்ல, நல்லவற்றை செய்கிறவர்களை. சில நல்லவர்கள் தங்களுடைய வாழ்க்கையை இருளை (தீயவற்றை) நோக்கி திருப்புவதற்கு சில நல்லவர்களின் மௌனமும் காரணம். தீமை செய்வோருக்கு அஞ்சுவோர் இங்கு பலர் உண்டு. தீமைக்கு சான்று பகர்வோரும் உண்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 5:31-47) இயேசுவை ஏற்றுக் கொள்ள தயங்குகிறது யூதர்கள் கூட்டம். மனிதர் தரும் சான்று தனக்கு தேவையில்லை என்றாலும் திருமுழுக்கு யோவான் தன்னைக் குறித்து சான்று பகர்ந்ததையும் இயேசு நினைவு கூர்கிறார். (லூக்கா 3:16 - “யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்கு கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்”).

எல்லாவற்றிற்கும் மேலாக தந்தை கடவுளும் சான்று பகர்ந்திருக்கிறார் (மாற்கு 1:11 - “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்”). தனது செயல்களின் வாயிலாக தன் தந்தையை எல்லோருக்கும் எடுத்தியம்பினார் இயேசு. 

ஆணவமிக்ககோர் ஒருபோதும் இறங்கி வருவதில்லை, அடுத்தவருக்கு செவிசாய்ப்பதில்லை என்பதற்கேற்ப யூதர்கள் அவரது செயல்களையும் அவரையும் வெறுத்தனர். நீங்கள் தந்தையின் வார்த்தையை நம்பாதவர்கள், மறைநூலை ஏற்றுக் கொள்ளாதவர்கள், இறையன்பு அற்றவர்கள், மோசேயின் வார்த்தையை நம்பாதவர்கள், பின் எப்படி என்னை நம்புவீர்கள், என் வார்த்தையை நம்புவீர்கள் என்கிறார் இயேசு. இத்தனை சான்றுகள் இருந்தும் நம்பிக்கை குறைவு தான் உள்ளது.

நாமும் இவர்களை போல சான்று இருந்தும், அடையாளங்களை பெற்றிருந்தும் நம்ப மறுக்கிறோம், தயங்குகிறோம். இயேசுவின் செயல்களை இன்றும் வாழ்ந்துக் காட்டும் மனிதர்களை ஏற்றுக் கொள்ளாத போது, நாம் இயேசுவையே ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

‘நீங்கள் உங்கள் பேச்சுகளின் வாயிலாக, முன்மாதிரியான வாழ்க்கை வாயிலாக சான்று பகரமுடியும்’ என்பார் தாமஸ் மேன்சன்.

இயேசுவின் செயல்கள் இயேசுவுக்கு சான்று அளிப்பது போல நாம் வாழக் கூடிய வாழ்க்கை முறை நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்கு சான்று பகர வேண்டும். இறைவேண்டல் செய்வதால் மட்டும் ஒருவரின் வாழ்வு நிறைவு பெறாது. இறைவேண்டல் செயல்களாக மாறி சான்று பகர வேண்டும்.


தந்தையை பிரதிபலிக்கும் மகன்


13.03.2023 - புதன் கிழமை

“உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்” - யோவான் 3:17

நல்லது செய்வோருக்கு எதிர்ப்பு வருவது அதிகம். அவர்கள் செய்யக் கூடிய செயல்கள், சொற்கள் எதையாவது வைத்து அவர்களை வீழ்த்தலாம் என்று ஒரு கூட்டம் தனியாத தாகத்தோடு காத்திருக்கும். தானும் நல்லது செய்வதில்லை, செய்வோரையும் செய்யவிடுவதில்லை. (நன்மை செய்வோர் தன்னலம் தேடவும் தற்பெருமைக் கொள்ளவும் மாட்டார்கள்) தீமை செய்ய எண்ணுவோர், எல்லா இழிவான செயல்களையும் (கொலையும்) செய்வார்கள். ஒருவரின் பெயரை கெடுத்தல், ஒருவரின் உயிரை பறித்தல் ஆகியவற்றை செய்ய ஆவலாய் இருப்பர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 5:17-30) ஓய்வுநாள் சட்டத்தை மீறியதோடு தன்னையும் கடவுளுக்கு இணையாக்குகிறான் என்று இயேசு மீது பழி சுமத்தப்படுகிறது. இயேசுவை கொல்லவும் யூதர்கள் திட்டம் தீட்டினார்கள்.

தந்தை மகனுக்கு கொடுத்தவை

- தந்தை செய்யும் செயல்களை மகனும் செய்தல்

- இறந்தோரை உயிர்பெறச் செய்தல்

- தீர்ப்பு அளிக்கும் அதிகாரம்

மகன் தன்னை நம்புவோருக்கு கொடுப்பவை

- நம்புவோருக்கு நிலைவாழ்வு

- நம்புவோருக்கு தண்டனை இல்லை

- சாவை கடந்த வாழ்வு

என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன் என்ற வார்த்தையை இயேசு உள்ளத்தில் எழுதினார், செயல்படுத்தினார். எதிர்ப்புகள் பலவற்றை சந்தித்தார், எதிர்த்து நின்றார். கடவுளின் மகனாய் இருந்து மனிதனாக உருவான இயேசுவுக்கே இவ்வளவு எதிர்ப்புகள் என்றால், வலுவற்ற உடலை கொண்ட நாம் எம்மாத்திரம்? “பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்” (லூக்கா 23:31) என்ற இறைவார்த்தை தான் நினைவுக்கு வருகிறது.

இயேசு தன் தந்தையை தனது வாழ்க்கையால் பிரதிபலித்தார். தன்னை காண்பது தன் தந்தையை காண்பது என்றார்.

‘கடவுளின் விருப்பத்தை அல்லது திருவுளத்தை அறிந்தவுடன், நாம் எந்தவொரு தாமதமின்றி அதைப் பின்பற்ற வேண்டும்’ என்பார் புனித சிலுவை பவுல்.

அவருடைய திருவுளத்தை அறிதலும் அதை நிறைவேற்றுவதும் தான் தந்தையை பிரதிபலிப்பதற்கு ஈடாகும். தந்தைக்குரிய மனப்பாங்கோடு செயல்படுவோம். அவரை பிரதிபலிப்போம்.


 


நலமும் பாவமும்…

12.03.2024 - செவ்வாய்க் கிழமை

“நான் உனக்கு நலம் அளிப்பேன்; உன்னுடைய காயங்களை ஆற்றுவேன் என்கிறார் ஆண்டவர்” - எரேமியா 30:17

மருந்துகளை கொடுப்பவர் மருத்துவர் என்றாலும் நலம் அளிப்பவர் கடவுள். சில நோய்களுக்கு மருந்து தீர்வு, சில நோய்களுக்கு மன்னிப்பு (பாவமன்னிப்பு) தான் தீர்வு. சிலர் இவ்வாறு சொல்ல கேள்விப்பட்டிருப்போம், ‘எத்தனையோ மருத்துவரை பார்த்துவிட்டேன் இன்னும் உடல் சரியாகவில்லை’. சிலர் செய்த பாவங்கள் சிலரை பின்தொடர்வது தான் உடல்நலம் பெறாததற்கு காரணம். 

பாவமன்னிப்பு கடவுளிடம் கேட்க வேண்டும். யாருக்கு எதிராக பாவம் செய்தோமோ அவர்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும். சக்கேயு செய்தது போல “சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினார்”. இது தான் பரிகாரம்.

(‘பழி சுமத்துவது காயங்களை பெரிதுப்படுத்துகிறது, ஆனால் மன்னிப்பு குணமாக்குகிறது’ -தாமஸ் மேன்சன்) 

கடவுள் மன்னிப்பவர் தான், அதற்காக பாவத்தில் திளைத்திற்க கூடாது. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 6:1,2இல் இவ்வாறு சொல்வார், “…அருள் பெருகுவதற்காக நாம் பாவத்தில் நிலைத்திருக்கலாமா? ஒருபோதும் கூடாது. பாவத்தைப் பொறுத்தமட்டில் செத்துவிட்ட நாம் எவ்வாறு தொடர்ந்து பாவ வாழ்க்கை வாழ முடியும்? 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 5:1-3,5-16) இயேசு 38 ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரை குணமாக்குகிறார். இயேசு அவரிடம் பேசியதாக மூன்று வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1. நலம்பெற விரும்புகிறீரா?

2. எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்

3. இதோ பாரும் நீர் நலமடைந்தள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்

முழு நலம்பெற வேண்டும் என்றால் பாவம் மன்னிக்கப்பட வேண்டும். இயேசு அதை செய்தார். இனிமேல் பாவம் செய்யாதீர் என்றும் சொன்னார்.

நாம் நம்முடைய வாழ்வில் நாம் முழு நலம்பெறமுடியாமல் இருப்பதற்கு ஒரு காரணம் நம்முடைய பாவங்களுக்கு மனம்வருந்தாததும், மன்னிப்பு கேட்காததும், பிறருடைய குற்றங்களை மன்னிக்காததும் தான் காரணம்.

புனித ஜான் மரிய வியான்னி சொல்வார், ‘நம்முடைய பாவம், கடவுளுடைய மலைபோன்ற இரக்கத்தின் முன்னிலையில் ஒரு சிறிய மணல் குவியல் தான்’.

மன்னிப்பு கேட்போம்… மன்னிப்போம்… நலம் பெறுவோம்!


வல்ல செயல் செய்ய எதுவும் தடையில்லை…

 


11.03.2024 - திங்கள் கிழமை

“அவர்தம் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள்! அவர்தம் எல்லையில்லா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்” - திருப்பாடல்கள் 150:2

வல்ல செயல்கள் என்பது என்ன? நம்மால் வல்ல செயல்கள் செய்ய முடியுமா? எல்லா நல்ல செயல்களும் வல்ல செயல்களே… எல்லா வல்ல செயல்களும் நல்ல செயல்களே… நாம் செய்வது எல்லாம் நல்லவை என்றால் நாமும் வல்ல செயல்கள் செய்கிறோம். (“கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்” - திருத்தூதர் பணிகள் 10:38)

நாம் சொல்லக் கூடிய சொற்கள், செய்யக் கூடிய செயல்கள் மற்றவர்களுக்கு நன்மையாய் அமைய வேண்டும். நான் நன்மை செய்தால், திரும்ப எனக்கு எதாவது கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நன்மைத்தனத்தின் அடையாளம் அல்ல. 

இயேசுவின் வல்ல செயலுக்காய் பலர் அவரை நம்பினர், பின்பற்றினர், தேடி வந்தனர். இயேசு வல்ல செயல்கள் செய்தும் பலர் மனம்மாறவில்லை, அவரில் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் இயேசு நல்லது செய்யாமல் இல்லை. எங்கும் எதிலும் நன்மையே செய்தார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 4:43-54) இயேசு சாகும் நிலையில் இருக்கின்ற அரச அலுவலரின் மகனை குணமாக்குகிறார். ‘உம் மகன் பிழைத்துக்கொள்வான்’ என்று இயேசு சொன்ன நேரமே அரச அலுவலர் மகனின் நோய் நீங்கியது. இயேசு இருந்த இடம் வேறு, அரச அலுவலரின் மகன் இருந்த இடம் வேறு. இயேசு காலத்தையும் இடத்தையும் கடந்தவர். அவர் நன்மை செய்வதற்கு எதுவும் தடையில்லை. 

நம்முடைய வாழ்விலும் தூரம் ஒரு தடையில்லை நாம் நன்மை செய்வதற்கு. ஒருவர் தொலையில் இருந்தாலும் நம் நேர்மறை எண்ணங்கள் அவரின் வாழ்வை, எண்ண ஓட்டங்களை சீர்ப்படுத்தும். ஆறுதலான வார்த்தைகள் ஒருவருக்கு நலம் அளிக்கும். 

பார்ப்பது, கேட்பது, உணர்வது ஆகியவை புதுமைகளே. நம்முடைய உடலின் ஒவ்வொரு பகுதியும் அற்புதமே என்பார் வால்ட் விட்மென்.

நாமும் நலப்படுத்துவோம். காயங்களுக்கு கட்டுப் போடுவோம். தடைகளை தகர்த்தெறிவோம்.



நம்பிக்கை என்னும் வழி… மீட்பு என்னும் ஒளி…

 


10.03.2024 - ஞாயிற்றுக் கிழமை

“இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே” - எசாயா 12:2

நம்பிக்கை என்பது ஒருவரை நம்புகிறேன் என்று சொல்வது அல்ல, மாறாக அவரை ஏற்றுக் கொள்வது. யாரை நம்புகிறோமோ அவராக மாறுவது தான் நம்பிக்கை. 

ஒரு குழந்தை தனது நம்பிக்கையை தன் தந்தையின் மீது வைக்கிறது என்றால் அக்குழந்தை தன்னை மறந்து தனது தந்தையில் இணைந்துவிடும். படியில் நிற்கிற குழந்தையை தந்தை தன்னை நோக்கி குதிக்க சொன்னால், அந்த குழந்தை எந்தவொரு பயமும் இல்லாமல் குதிக்கும். காரணம் அந்த குழந்தையின் நம்பிக்கை அவ்வளவு உறுதியாக இருக்கும். 

நம் இறைவன் தரும் மீட்பை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நம்மிலும் அத்தகைய நம்பிக்கை இருக்க வேண்டும். ஏதாவது கிடைக்குமா என்ற நம்பிக்கை அல்ல எல்லாமே நிறைவேறும் என்ற நம்பிக்கை. 

பழைய ஏற்பாட்டில் (எண்ணிக்கை 21:4-9) மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராக முணுமுணுத்தனர். கொடுக்கப்பட இருக்கின்ற மீட்பை குறித்து மகிழ்ச்சியடையாமல், கடவுளுக்கு எதிராக செயல்பட்டனர். ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை அனுப்பி அவாகளை கடிக்க வைத்தார், அவர்களில் பலர் மாண்டனர். மீதமுள்ளோர் செய்த பாவத்திற்காக மன்னிப்பு கேட்டனர். ஆண்டவர் மோசேயிடம் (வெண்கல) கொள்ளி வாய்ப் பாம்பை செய்து கம்பத்தில் பொருத்து, இதை பார்க்கிற எவனும் உயிர் பிழைப்பான் என்றார். அவ்வாறே உயர்த்தி பிடிக்கப்பட்ட பாம்பை கண்டோர் உயிர் பிழைத்தனர். 

அதே போல இயேசு சிலுவையில் உயர்த்தப்பட்டதை காண்கிறவர் அவரில் நம்பிக்கை கொண்டார் (யோவான் 3:14-21) என்றால் அவர்கள் நிலைவாழ்வு பெறுவர். அன்று இஸ்ராயேல் மக்களிடம் ஏற்பட்ட முணுமுணுப்பு இன்று வரை நம்மிலும் தொடர்கிறது. இயேசுவிடம் மீட்பு உண்டு என்பதை அறிந்திருந்தாலும், அவரே ஒளி என்பதை உணாந்திருந்தாலும், நாம் அவரை நெருங்கி வருவதில்லை. காரணம் ஒளியிடம் வந்தோம் என்றால் நம் இருளான வாழ்க்கை வெளிப்பட்டு விடும் என்பதால்.

முதல் வாசகத்தில் (2குறிப்பேடு 36:14-16,19-23) கடவுளுக்கு எதிராக அருவருப்பான காரியங்களை செய்த மக்கள் மீது கடவுளின் சினம் பொங்கி எழுந்ததை வாசிக்கிறோம். வேற்றினத்தாரின் அருவருப்புகளை செய்த மக்களுக்கு வேற்றினத்து மன்னனாலேயே (கல்தேயரின் மன்னன் - 2குறிப்பேடு 36:17) அழிவை கொண்டு வருகிறார் கடவுள். அடிமை நிலையிலிருந்து மீட்கப்பட்டவர்கள், தங்களின் தீய நடத்தையால் மீண்டும் அடிமைத்தனத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மீண்டும் பாரசீக மன்னன் வாயிலாக எருசலேமுக்கு திரும்புமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. (அடிமை வாழ்வு - மீட்பு - பாவம் - தண்டனை - மன்னிப்பு - மீண்டும் விடுதலை…. இது தான் பழைய ஏற்பாடு)

இரண்டாம் வாசகத்தில் (எபேசியர் 2:4-10) பாவத்திற்கு அடிமையாய் இறந்த நிலையில் இருந்த நாம், கிறிஸ்து வழியாக உயிர்பெற்றுள்ளோம் என்கிறார் திருத்தூதர் பவுல். நாம் மீட்கப்பட்டிருப்பது நம் ஆற்றலால் அல்ல, அவர் அருளாலேயே. கடவுள் நமக்கு கொடுத்த கொடை என்பது பாவத்திலிருந்து விடுதலை கொடுத்து புதுவாழ்வுக்கு(விண்ணக வாழ்வு) அழைத்தது தான். அழைப்புகேற்ற வாழ்வு வாழ, நற்செயல்கள் புரிய அழைக்கப்பட்டுள்ளோம்.

கடவுளோடு இணைந்திருந்தால் (நம்பிக்கையின் வழியாக) மீட்பு என்னும் ஒளியை பெற்றுக் கொள்வோம். இருள்நிறைந்த வாழ்வை விரட்டி ஒளியேற்றுவோம்.


அவரன்பில் பணியாற்ற

மரியாளின் மாசற்ற இதயம்

பொதுக்காலம் 12ஆம் வாரம் 28.06.2024 - சனிக் கிழமை  பிறப்பில் எல்லோருடைய இதயமும் தூய்மையானது தான். வாழ்க்கை நகர்கின்ற போது இதயம் மாசுபடிந்ததாக...