19.03.2024 - செவ்வாய்க் கிழமை
“ஆண்டவர் எனது நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார்; என் மாசற்ற செயலுக்கு ஏற்பக் கைம்மாறு செய்தார்” - 2 சாமுவேல் 22:21
இன்றைய நாளில் கற்பின் பாதுகாவலரும் புனித கன்னி மரியாவின் கணவருமான புனித யோசேப்பின் விழாவை கொண்டாடுகின்றோம். தவக்காலத்தில் நினைவுக் கூரப்படும் பெரும் புனிதர் புனித யோசேப்பு.
“அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிட திட்டமிட்டார்” - மத்தேயு 1:19
மோசேயின் சட்டப்படி கணவனை அறியாமல் ஒரு பெண் கருத்தரித்தார் என்றால், அவர் கல்லால் எறிந்துக் கொல்லப்பட வேண்டும். (காண்க இணைச்சட்டம் 22:20-24)
இந்த சட்டங்கள் யோசேப்புக்கு நன்கு தெரியும். அவர் கடவுள் முன்னிலையில் நேர்மையுடன் இருந்தார். எனவே இரண்டு காரியங்களை செய்கிறார். 1. தம் மனைவியை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கிவிட திட்டமிடுகிறார். 2. கடவுளின் தூதர் கனவில் எச்சரித்ததும் தம் மனைவியை ஏற்றுக் கொள்கிறார்.
மறைவாக விலக்கி விட எண்ணியதன் நோக்கம், மரியாவுக்கு எந்தவொரு தீங்கும் நேர கூடாது என்பதனால் தான். இருந்தபோதிலும் கனவுகளின் வழியாக கடவுளின் செய்தியை, உண்மையை பெற்றுக் கொண்டதும், தன் நிலைப்பாட்டை மாற்றிப் கொள்கிறார். அவரது நேர்மை அவரை திருக்குடும்பத்தின் தலைவராக்கியது.
கொன்ஸ்தாந்திநோபிள் பேராயரான புனித யோவான் கிறிஸ்தோஸ்தம் புனித யோசேப்பை பற்றி இவ்வாறு கூறுவார், “ திருக்குடும்பத்தின் தலைவர் என்ற மிக மேலான பொறுப்பைப் பெற்றிருந்த யோசேப்பு, மிகுந்த தாழ்ச்சியும் தன்னடக்கமும் நிறைந்தவராக வாழ்ந்தார்”.
திருக்குடும்பத்தின் தலைவரான புனித யோசேப்பு தனது நேர்மையினால் அன்னை மரியாவையும் குழந்தை இயேசுவையும் துன்ப வேளையில் காப்பாற்றினார். கடவுளின் சொல்லிற்கிணங்க வழிநடத்தினார்.
பழைய ஏற்பாட்டு யோசேப்புக்கும் புதிய ஏற்பாட்டு யோசேப்புக்கும் சில தொடர்புகள் இருக்கின்றன..
- பழைய ஏற்பாட்டு யோசேப்பு கனவுகளுக்கு விளக்கம் கொடுத்தார், புதிய ஏற்பாட்டு யோசேப்பு கனவுகளின் வழியாக விளக்கத்தை பெற்றார்.
- பழைய ஏற்பாட்டு யோசேப்பு மக்களை பஞ்சத்தில் இருந்து காத்தார், புதிய ஏற்பாட்டு யோசேப்பு தன் குடும்பத்தை தீமையிலிருந்து காத்தார்.
- பழைய ஏற்பாட்டு யோசேப்பு தன் சகோதரர்களை மன்னித்தார், புதிய ஏற்பாட்டு யோசேப்பு தன் மனைவியை ஏற்றுக் கொண்டார்.
- இருவர் சொல்லிலும் செயலிலும் நேர்மை வெளிப்பட்டது.
இன்றைய நாளின் புனிதர் நமக்கு விடுக்கும் அழைப்பு என்பது, நேர்மைத்தனம் என்பது நேர்மையான செயல்களிலும் கடவுளுக்குகந்த வழிகளிலும் வெளிப்பட வேண்டும்.
நேர்மையாளர்களை ஊக்குவிப்போம்… நேர்மையாய் இருக்க முயற்சிப்போம்…
No comments:
Post a Comment