24_03

சீடர்களின் கேள்விகள்?



26.03.2024 - செவ்வாய்க் கிழமை

“உன் கடவுள் எங்கே? என்று என் பகைவர் நாள்தோறும் என்னைக் கேட்பது, என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல என்னைத் தாக்குகின்றது.” - திருப்பாடல்கள் 42:10

கேள்விகள் கேட்கப்படுவது சரிதான். ஆனால் எதற்காக கேள்விக் கேட்கப்படுகிறது என்பது முக்கியம். சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவா? பிரச்சினைகளைத் தீர்க்கவா? குழப்பங்களை உருவாக்கவா? நான் சொல்வது தான் சரியென்பதை நிரூபிக்கவா?

பல்வேறு தளங்கள் கேள்விகளால் நிறைந்திருக்கிறது. எல்லா கேள்விகளும் விடைகளால் நிரம்புவதில்லை. சிலவற்றிற்கு விடை உண்டு, சில கேள்விகள் விடைக்கான தொடர் தேடலில் இருக்கின்றன. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 13:21-33.36-38) உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்கிறார் இயேசு. அப்போது இயேசுவின் அன்புச் சீடரிடமிருந்து மற்ற சீடர்களின் சார்பாக (பேதுரு தூண்டிவிட)  எழக்கூடிய கேள்வி, “ஆண்டவரே அவன் யார்?”. அப்பத்துண்டைத் தோய்த்து யாருக்கு கொடுக்கிறேனோ அவன் தான் என்பதையும் இயேசு சொல்லிவிட்டார், ஆனால் சீடர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. 

இயேசுவின் உரைக்கு பிறகு சீமோன் பேதுரு கேட்ட கேள்விகள், ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்?, ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர முடியாது. இயேசு எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுக்கிறார், ஆனால் அதை வாசகர்களாக இருந்து நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் இயேசுவின் சீடர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. 

யாரை பற்றி கேள்விக் கேட்கப்பட்டதோ (யூதாசு) அவரும் தவறி விடுகிறார், யார் கேள்வி கேட்டாரோ (பேதுரு) அவரும் தவறி விடுகிறார். யூதாசு காட்டிக் கொடுக்கிறார், பேதுரு மறுதலிக்கிறார்.

எப்போதும் அவரவர் பிரச்சினையை அவரவர் அந்நேரத்தில் புரிந்துக் கொள்வதில்லை. நமக்குள்ளும் பல கேள்விகள் எழத் தான் செய்கிறது, என்னுடைய குடும்பத்திற்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? கடவுள் இருக்கிறாரா? கடவுளை நம்பி என்ன பயன்? எனக்கு மட்டும் ஏன் இத்தனை தோல்விகள்? எல்லாம் முடிந்து நாள்கள் சென்ற பிறகுதான் நமக்கு எல்லாம் புரிய ஆரம்பிக்கிறது. இயேசுவின் சீடர்களுக்கும் அப்படித்தான் நடந்தது. 

இயேசு தங்களோடு இருக்கும் வரை அவர்களால் எதையும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுடைய கேள்விகள் முற்று பெறாமலேயே இருந்தது. இயேசுவின் இறப்பிற்கு பிறகு ஒவ்வொன்றிற்கும் விடை கிடைத்தது.

கேள்விகளோடு மட்டும் நின்று விடாமல் அவற்றிற்கான தொடர் தேடலில் ஈடுபடுவோம். ஏனென்றால் விடை கிடைத்தால் மீண்டும் அதே தவறுகள், பிரச்சினைகள் நம்மில் உருவாகாமல் இருக்கும்.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...