04.03.2023 - திங்கட் கிழமை
“அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள்” - 1 தெசலோனிக்கர் 5:21
யார் சொன்னார்கள் என்பது முக்கியமல்ல! என்ன சொல்லப்பட்டது என்பது தான் முக்கியம். யாருக்கு சொன்னார்கள் என்பது முக்கியமல்ல! என்னுடைய வாழ்க்கைக்கு அது பொருந்துகிறதா என்பது தான் முக்கியம்.
நம்முடைய வாழ்க்கை மேம்பட வேண்டும் என்றால் நல்லது எங்கு சொல்லப்பட்டாலும், நல்லது எந்த இடத்தில் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நன்மைத்தனத்தை அல்லது நல்லவற்றை மற்றவரிடம் இருந்து பெறுவதற்கு நமக்குள் கர்வம் இருக்கக் கூடாது.
நடைமுறை வாழ்க்கையில், சொந்த ஊரை சார்ந்த நல்லவர்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள். எங்கோ இருப்பவர்கள் உயர்ந்தவர்களாக, நல்லவர்களாக தெரிவார்கள். முகநூல் நண்பர்கள், இன்ஸ்ட்ராகிராமில் பின்பற்றுபவர்கள், பேருந்து பயணத்தில் பழக்கமானவர்கள் நல்லவர்களாக தெரிவார்கள். அதற்கு ஒரு காரணம் அவர்கள் நம் ஒருபுறத்தை (வெளித்தோற்றத்தை) மட்டும் பார்த்து நம்மை புகழ்பவர்கள், நம் மறுபக்கத்தை (தாறுமாறான வாழ்க்கை) பற்றி கவலைப்படாதவர்கள், கண்டுக் கொள்ளாதவர்கள். அவர்களுக்கு அது தேவையும் இல்லை. ஆனால் நம்மோடு உடன் இருக்கின்ற நல்லவர்கள் நம்மீது அக்கறை கொண்டவர்களாய் இருப்பதால் நம் வாழ்க்கை மாறும் போது தட்டி கேட்பார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவை ஏற்றுக் கொள்ள ஒரு கூட்டம் தயக்கம் காட்டுகிறது. சொந்த ஊரில் இறைவாக்கினர்கள் மதிக்கப்படுவதில்லை என்பதை இயேசு அன்றே சொல்லிவிட்டார். பல்வேறு வல்லசெயல்கள் செய்தும் மக்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை, இவர் நம் அசைவுக்கு உடன்படவில்லை என்பது தான் இயேசு வெறுக்கப்பட்டதற்கு காரணம். ஏற்றுக் கொள்ளப்படாதவர்கள் பற்றி இயேசு கவலை கொள்ளவில்லை, ஆனால் கடவுளை ஏற்றுக் கொண்டவர்கள் அடைந்த நன்மையை இயேசு நற்செய்தியில் எடுத்து சொல்கிறார் (இஸ்ரயேலுக்கு வெளியே நடந்த கடவுளின் ஆற்றல் - சாரிபாத்தின் கைம்பெண் நிகழ்வு, சிரியாவை சார்ந்த நாமான் நிகழ்வு).
புனித அகுஸ்தினார் சொல்வார், ‘கடவுள் எப்போதும் நமக்கு நல்லதையே கொடுக்கிறார், கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நம்முடைய கைகள் நிரம்பி இருப்பதால் அதை பெற முடிவதில்லை’.
நல்லதை ஏற்றுக்கொள்பவர்கள் நன்மையை பெறுவார்கள் என்பது உண்மையிலும் உண்மை. நல்லதை ஏற்போம்… நல்லவர்களாய் மாறுவோம்…
No comments:
Post a Comment