17.03.2024 - ஞாயிற்றுக் கிழமை
“கடவுளுக்கு அஞ்சுங்கள்; அவரைப் போற்றிப் புகழுங்கள். ஏனெனில் அவர் தீர்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது. மண், கடல், நீருற்றுகள் ஆகியவற்றைப் படைத்தவரை வணங்குகள்” என்று அவர் உரத்த குரலில் கூறினார்” - திருவெளிப்பாடு 14:7
நம்முடைய பின்னணியில் நேரம் என்பது நல்ல நேரம், கெட்ட நேரம் என்று பொருள்படும். ஆனால் இயேசுவின் பார்வையில் நேரம் வந்துவிட்டது என்பது பாடுகளின் தொடக்க புள்ளி அல்லது மாட்சியுறும் நேரம். கானாவூர் திருமண விழாவில், “அம்மா அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே என்றார்” - யோவான் 2:4 இங்கு நேரம் என்பது இயேசு மாட்சியுறுதலுக்கான நேரம்.
யோவான் நற்செய்தி 7:30இல் “அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை”. இங்கு நேரம் என்பது காட்டிக் கொடுக்கப்பட வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை என்பதை குறிக்கிறது.
மாட்சியுறுதல் என்றால் என்ன? இயேசு தன்னை இறைமகனாக வெளிப்படுத்தும் தருணம், கடவுள் தன் மகனுக்கு மதிப்பளிக்கும் நேரம், இயேசுவின் பாடுகள் நெருங்கும் வேளை, சிலுவை சாவை ஏற்கும் நேரம், இறந்து உயிர்த்தெழுதல்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 12:20-33) மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்கிறார். நேரம், மாட்சி என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது. உயிரை இழக்கும் தருணம் வந்தபோதிலும் கூட, மடியும் கோதுமை மணி மிகுந்த விளைச்சலை கொடுக்கும் என்பதை தெளிவுப்படுத்துகிறார். இழப்பதில் தான் மற்றவருக்கான வாழ்வு இருக்கிறது என்பதை நினைவுப்படுத்துகிறார். பிறரின் நலனில் தன்னை கரைப்போர் நிலைவாழ்வுக்கு உரியவர் ஆவார் என்கிறார்.
தனது நேரம் நெருங்கி வருவதைக் குறித்து இயேசு கலங்குகிறார். அவருடைய கலக்கம் அவருடைய மனித நிலையிலிருந்து வெளிப்படுகிறது. அவருடைய உள்ளம் கலக்கமுற்றிருக்கிறது. இந்த வேளையில் “மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்” என்று தந்தை மகனை தேற்றுகிறார், உயர்த்துகிறார், மகிமைப்படுத்துகிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் (எரேமியா 31:31-34) இஸ்ராயேல் வீட்டாரோடு கடவுள் செய்யவிருக்கும் புதிய உடன்படிக்கை பற்றி பேசப்பட்டுள்ளது. உடன்படிக்கை இரண்டு நிலைகளில் இருந்தது. 1. வாக்குறுதியின் உடன்படிக்கை 2. சட்ட உடன்படிக்கை
1. வாக்குறுதியின் உடன்படிக்கை என்பது கடவுள் ஆபிரகாம், மோசே, யோசுவா, இஸ்ராயேல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள். (உன்னை பெரிய இனமாக்குவேன் தொடக்க நூல் 12:2, எனது பிரசன்னம் உன்னோடு செல்லும்- விடுதலைப் பயணம் 33:14, இன்னும் பல)
2. சட்ட உடன்படிக்கை - மோசே வழியாக கடவுள் கொடுத்த பத்துக் கட்டளை (விடுதலைப் பயணம் 20:1:17)
இன்றைய முதல் வாசகத்தில் அதையும் கடந்த, புதிய உடன்படிக்கை பற்றி பேசுகிறார் கடவுள். நான் அவர்கள் கடவுள்; அவர்கள் என் மக்கள். என்னை அவர்கள் அறிந்து கொள்வர், எனக்குரிய வழியில் அவர்கள் நடப்பர் என்பது கடவுளின் விருப்பம். இவ்வாறு நடப்பதனால் அவர்களின் பழைய பாவங்கள் நினைவுக் கூரப்படாது என்கிறார் ஆண்டவர்.
இரண்டாம் வாசகத்தில் (எபிரேயர் 5:7-9) இயேசு தனது பாடுகளை குறித்து கண்ணீர் சிந்தி மன்றாடும் நிகழ்வு கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்ப்படிதல் வாயிலாக மகன் தந்தையை மாட்சிப்படுத்தினார். தந்தை மகனுக்கு செவிசாய்த்து அவரை மாட்சிப்படுத்தினார். மகனின் கீழ்ப்படிதல் நாம் அனைவரும் மீட்படையக் காராணமாக இருக்கிறது.
இயேசுவின் இறப்பு கோழைத்தனத்தின் வெளிப்பாடல்ல, மாறாக தியாகத்தின் வெளிப்பாடு…
கோதுமை மணியை போல நாமும் மடிந்து மற்றவர் நல்வாழ்வு பெற பலன் தருவோம். நம்முடைய கீழ்ப்படிதல் கடவுளுடைய உடன்படிக்கைக்கு செவிசாய்ப்பதிலும், அவருடைய திருவுளத்தை நிறைவேற்றுவதிலும் வெளிப்படட்டும்.
No comments:
Post a Comment