29.03.2024 - பெரிய வெள்ளி
“நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்; நம்மை ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச் செய்தார்” - உரோ 4:25
இன்று புனித வெள்ளி. இயேசுவின் பாடுகளின் உச்சக்கட்டம். இரவு முழுவதும் ஏற்பட்ட கொடிய வேதனைகளுக்கு பிறகு மீண்டும் பிலாத்துவிடம் விசாரணை. தனக்குரிய கொலைக் கருவியை தானே தூக்கி கொண்டு ‘மண்டை ஓட்டு’ (எபிரேய மொழியில் கொல்கொதா) இடத்திற்கு நடந்து சென்றார். அவரது உடலிலும் காயங்கள் உள்ளத்திலும் காயங்கள். “அவரோ, நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்” - எசாயா 53:5
இயேசுவுக்கு இந்த வேதனையெல்லாம் பெரிதல்ல… இத்தனை நாள்கள் ஒறுத்தல் செய்து, தியாகம் செய்து, கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கை, மன்னிப்பு, அன்பு ஆகிய தியாகச் செயலோடு வாழ்ந்தவர்கள் நாளை முதல் பழைய வாழ்க்கைக்கு சென்று விடுவார்கள் என்பது தான் அவருக்கு ஏற்படும் பெரிய வேதனை.
‘வாருங்கள் அவரோடு இறப்போம்’, ‘நான் உம்மை மறுதலிக்க மாட்டேன்’ என்று சொன்னவர்கள் நிலைக் குலைந்து போனது போல, நாமும் நிலை தடுமாறிவிடுவோம் என்பது அவருக்கு தெரியும். ‘உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்று உறுதி கூறுகிறேன்’ என்று சொல்வதோடு அந்த தீர்மானம் முடிந்து விடுவது வேதனை தான்.
கைகளிலும் கால்களிலும், விலாவிலும் ஆணிகளின் காயங்கள். படைவீரர்களின் ஏளன பேச்சுகள், கடந்து செல்வோரின் ஆணவ பேச்சுகள், சீடர்களின் துணிச்சலற்ற தன்மை, முள்முடி வேதனை இவையெல்லாம் இயேசுவின் சுமைகள். இந்த சுமைகள் அவரில் ஏறுவதற்கு நாம் தான் காரணம்.
சிலுவையில் அவருடைய கடைசி 7 வார்த்தைகளை நினைவுக் கூருவோம்… வார்த்தைகளின் வலிகளை உணர்வோம்…
1. தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை - லூக்கா 23:34
2. நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் - லூக்கா 23:43
3. அம்மா, இவரே உம் மகன்… இவரே உம் தாய்…
4. என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? - மத்தேயு 27:46
5. தாகமாயிருக்கிறேன் - யோவான் 19:28
6. எல்லாம் நிறைவேறிற்று - யோவான் 19:30
7. தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் - லூக்கா 23:46
இறந்தும் வாழ்வை கொடுக்கிறார்… இழப்பின் மகிழ்வில் வலிகளை தாங்கிக் கொள்கிறார்… அவரின் தியாகம் நிறைந்த வாழ்வு நம் வாழ்வுக்கு முன்மாதிரி.
வாடிக்கையான சடங்குகளை கொண்டாடுவதில் திருப்திபட்டு அதோடு நின்று போனோம் என்றால், அவர் தியாகம் நமக்கு தெரியாது.
அவரின் வலிகள் நமக்கு தெரியாது
அவரின் மதிப்பீடுகள் நமக்கு விளங்காது
அவரின் அன்பு நமக்கு புரியாது
அவர் நமக்காக இறந்தார் என்பதை உணரும் தருணம் தான், நாம் அவரின் தியாகத்தை நம் வாழ்வில் வெளிக்காட்டும் நேரம்.
அவரில் அவராக மாறுவோம்… சடங்குகளின் அர்த்தத்தை உணர்ந்து சரித்திரம் படைப்போம். இயேசுவின் விழுமியங்கள் இம்மண்ணில் தூவப்படட்டும்.
No comments:
Post a Comment