24_03

கடவுளின் சட்டமும்… போலி சடங்கும்…

 


08.03.2024 - வெள்ளிக் கிழமை

“பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவிட, அன்புள்ளம் உடையவர் அளிக்கும் மரக்கறி உணவே மேல்” - நீதிமொழிகள் 15:17

உள்ளத்தில் பகையை வைத்து கொண்டு செய்யப்படும் பெரிய செயல்கள் பயனற்றவை. அன்பு உள்ளத்தோடு செய்யப்படும் எளிய செயல்களோ பேறுபெற்றவை.

அன்பு செய்ய மனம் வருவதில்லை, ஆனால் அன்பை மனம் எதிர்பார்க்கிறது. கடவுள் விரும்புவதை செய்ய மனம் வருவதில்லை, ஆனால் கடவுள் விரும்பாததை கடவுளுக்காக செய்வதுபோல, விழுந்து விழுந்து செய்கிறோம் (காணிக்கை கொடுப்பது, நேர்ச்சை செய்வது, கோவில் அலங்காரம், ஆடம்பர திருவிழாக்கள்).

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 12:28-34) முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் கடவுளை அன்பு செய்ய, தன்னை அன்பு செய்வது போல அடுத்திருப்பவரை அன்பு செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். காணிக்கை கொடுப்பதோ பலி செலுத்துவதோ அன்பிற்கு ஈடாகாது. 

இன்று எதை செய்ய வேண்டுமோ அதை செய்வதை விட்டுவிட்டு எது தேவையில்லையோ அதை நாம் தூக்கிக் கொண்டு செல்கிறோம். அன்பிரக்கச் செயல்கள் செய்ய வேண்டும், அது சொந்த வீட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும். “கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதர சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது” 1 யோவான் 4:20

விக்டர் ஹியுகோ சொல்வார், ‘அடுத்திருப்பவரை அன்பு செய்வது என்பது கடவுளின் முகத்தை பார்ப்பதற்கு சமம்’.

அன்பை நான்கு வகைகளாக பிரிக்கலாம். 1. குடும்ப அன்பு (ஸ்டோர்கே) 2. நட்பின் அன்பு (ஃபீலியா) 3. காதல் (ஈரோஸ்) 4. நிபந்தனையற்ற அன்பு (அகாப்பே)

முதல் மூன்று வகை அன்பும் மனிதரிடையே பரிமாறப்படுகிறது. அகாப்பே என்ற நிபந்தனையற்ற அன்பு கடவுளுக்கு மட்டும் பொருந்தும். அவருடைய அன்பு மட்டுமே நிபந்தனையற்றது.

புனித அன்னை தெரசா சொல்வார், ‘நீ செல்கிற இடமெல்லாம் அன்பை பரப்பு; முதலில் உன் குழந்தைகளிடம், கணவன் அல்லது மனைவி, உன் பக்கத்து வீட்டுக்காரர் ஆகியோரிடம் அன்பை காட்டு. கடவுளின் அன்பை பிரதிபலிப்பவராக இரு’.

தேவைக்காக ஒருவரை பயன்படுத்தாமல், தேவையில் இருப்போருக்கு ஆறுதல், உதவி, மன்னிப்பு, இரக்கம் என்னும் அன்பை கொடுப்போம், அதன் வழியாக இறைவனையும் அன்பு செய்வோம்.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...