09.03.2024 - சனிக் கிழமை
“பேதையரின் தவறுகள் அவர்களையே கொன்றுவிடும்; சிறுமதியோரின் தற்பெருமை அவர்களை அழித்துவிடும்” - நீதிமொழிகள் 1:32
இறைவேண்டல் (செபம்) என்பது கடவுளுக்கும் நமக்கும் இடையேயான உறவு பரிமாற்றம். அந்த இறைவேண்டல் தன் பெருமையை எடுத்துரைப்பதற்கான இடம் அல்ல. “நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவை தானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக்கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்? - 1கொரிந்தியர் 4:7
இறைவன் இல்லம் ஒருவர் தன்னை குறித்து பெருமை பாராட்டுதலுக்கான இடமல்ல. (பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும் - 2 கொரிந்தியர் 10:17).
கோயில் என்பது தன்னலம் தேடுகிற இடம் அல்ல, இறைவனை தொடுகிற இடம். என்னுடைய இறைவேண்டல் கடவுளை தொடுதலும் கடவுள் தன் அருளால் என்னை தொடுதலும் நடைபெறுகின்ற இடம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக் 18:9-14) இருவரின் இறைவேண்டல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் பரிசேயர், மற்றொருவர் வரிதண்டுபவர். பரிசேயரின் இறைவேண்டல் மற்றவர்களை இழிப்படுத்தி தன்னை பெருமைப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது இறைஒன்றிப்பிற்கான அடையாளம் அல்ல. ஆனால் வரிதண்டுபவர் தன்நிலை உணர்ந்து தன்னை தாழ்த்திக் கொள்கிறார், தன் பாவங்களுக்காக மனம் வருந்துகிறார்.
நல்லது செய்தாலும் அதில் பெருமை நாடி அதன் வழியாக பாவம் செய்த பரிசேயர் கடவுளுக்கு ஏற்புடைய நிலைக்கு தகுதியாகவில்லை. பாவி என்னும் நிலையிலிருந்து இறங்கி வந்து, மன்னிப்பு கேட்டவர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனார்.
சோரன் கீர்க்கே கார்ட் என்ற தத்துவ ஞானி சொல்வார் ‘நம்முடைய இறைவேண்டல் இறைவனை மாற்றாது, மாறாக வேண்டுகிறவரின் இயல்பை மாற்றும்’. கடவுளுக்குரியவராக நாம் மாற வேண்டும்.
கடவுளை மாற்றுவது அல்ல கடவுளை போல மாறுவதே நம் வேண்டலாக இருக்க வேண்டும். நல்லவராக தன்னை காட்டிக் கொள்வதல்ல, நல்லவராக வாழ்வதே இறை விருப்பம். இறை இல்லத்தில் தற்பெருமை கொள்ளாது நம் நிலை உணர்ந்து வாழ்வோம்.
Arumai
ReplyDelete