11.03.2024 - திங்கள் கிழமை
“அவர்தம் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள்! அவர்தம் எல்லையில்லா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்” - திருப்பாடல்கள் 150:2
வல்ல செயல்கள் என்பது என்ன? நம்மால் வல்ல செயல்கள் செய்ய முடியுமா? எல்லா நல்ல செயல்களும் வல்ல செயல்களே… எல்லா வல்ல செயல்களும் நல்ல செயல்களே… நாம் செய்வது எல்லாம் நல்லவை என்றால் நாமும் வல்ல செயல்கள் செய்கிறோம். (“கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்” - திருத்தூதர் பணிகள் 10:38)
நாம் சொல்லக் கூடிய சொற்கள், செய்யக் கூடிய செயல்கள் மற்றவர்களுக்கு நன்மையாய் அமைய வேண்டும். நான் நன்மை செய்தால், திரும்ப எனக்கு எதாவது கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நன்மைத்தனத்தின் அடையாளம் அல்ல.
இயேசுவின் வல்ல செயலுக்காய் பலர் அவரை நம்பினர், பின்பற்றினர், தேடி வந்தனர். இயேசு வல்ல செயல்கள் செய்தும் பலர் மனம்மாறவில்லை, அவரில் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் இயேசு நல்லது செய்யாமல் இல்லை. எங்கும் எதிலும் நன்மையே செய்தார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 4:43-54) இயேசு சாகும் நிலையில் இருக்கின்ற அரச அலுவலரின் மகனை குணமாக்குகிறார். ‘உம் மகன் பிழைத்துக்கொள்வான்’ என்று இயேசு சொன்ன நேரமே அரச அலுவலர் மகனின் நோய் நீங்கியது. இயேசு இருந்த இடம் வேறு, அரச அலுவலரின் மகன் இருந்த இடம் வேறு. இயேசு காலத்தையும் இடத்தையும் கடந்தவர். அவர் நன்மை செய்வதற்கு எதுவும் தடையில்லை.
நம்முடைய வாழ்விலும் தூரம் ஒரு தடையில்லை நாம் நன்மை செய்வதற்கு. ஒருவர் தொலையில் இருந்தாலும் நம் நேர்மறை எண்ணங்கள் அவரின் வாழ்வை, எண்ண ஓட்டங்களை சீர்ப்படுத்தும். ஆறுதலான வார்த்தைகள் ஒருவருக்கு நலம் அளிக்கும்.
பார்ப்பது, கேட்பது, உணர்வது ஆகியவை புதுமைகளே. நம்முடைய உடலின் ஒவ்வொரு பகுதியும் அற்புதமே என்பார் வால்ட் விட்மென்.
நாமும் நலப்படுத்துவோம். காயங்களுக்கு கட்டுப் போடுவோம். தடைகளை தகர்த்தெறிவோம்.
No comments:
Post a Comment