24_03

தந்தையை பிரதிபலிக்கும் மகன்


13.03.2023 - புதன் கிழமை

“உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்” - யோவான் 3:17

நல்லது செய்வோருக்கு எதிர்ப்பு வருவது அதிகம். அவர்கள் செய்யக் கூடிய செயல்கள், சொற்கள் எதையாவது வைத்து அவர்களை வீழ்த்தலாம் என்று ஒரு கூட்டம் தனியாத தாகத்தோடு காத்திருக்கும். தானும் நல்லது செய்வதில்லை, செய்வோரையும் செய்யவிடுவதில்லை. (நன்மை செய்வோர் தன்னலம் தேடவும் தற்பெருமைக் கொள்ளவும் மாட்டார்கள்) தீமை செய்ய எண்ணுவோர், எல்லா இழிவான செயல்களையும் (கொலையும்) செய்வார்கள். ஒருவரின் பெயரை கெடுத்தல், ஒருவரின் உயிரை பறித்தல் ஆகியவற்றை செய்ய ஆவலாய் இருப்பர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 5:17-30) ஓய்வுநாள் சட்டத்தை மீறியதோடு தன்னையும் கடவுளுக்கு இணையாக்குகிறான் என்று இயேசு மீது பழி சுமத்தப்படுகிறது. இயேசுவை கொல்லவும் யூதர்கள் திட்டம் தீட்டினார்கள்.

தந்தை மகனுக்கு கொடுத்தவை

- தந்தை செய்யும் செயல்களை மகனும் செய்தல்

- இறந்தோரை உயிர்பெறச் செய்தல்

- தீர்ப்பு அளிக்கும் அதிகாரம்

மகன் தன்னை நம்புவோருக்கு கொடுப்பவை

- நம்புவோருக்கு நிலைவாழ்வு

- நம்புவோருக்கு தண்டனை இல்லை

- சாவை கடந்த வாழ்வு

என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன் என்ற வார்த்தையை இயேசு உள்ளத்தில் எழுதினார், செயல்படுத்தினார். எதிர்ப்புகள் பலவற்றை சந்தித்தார், எதிர்த்து நின்றார். கடவுளின் மகனாய் இருந்து மனிதனாக உருவான இயேசுவுக்கே இவ்வளவு எதிர்ப்புகள் என்றால், வலுவற்ற உடலை கொண்ட நாம் எம்மாத்திரம்? “பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்” (லூக்கா 23:31) என்ற இறைவார்த்தை தான் நினைவுக்கு வருகிறது.

இயேசு தன் தந்தையை தனது வாழ்க்கையால் பிரதிபலித்தார். தன்னை காண்பது தன் தந்தையை காண்பது என்றார்.

‘கடவுளின் விருப்பத்தை அல்லது திருவுளத்தை அறிந்தவுடன், நாம் எந்தவொரு தாமதமின்றி அதைப் பின்பற்ற வேண்டும்’ என்பார் புனித சிலுவை பவுல்.

அவருடைய திருவுளத்தை அறிதலும் அதை நிறைவேற்றுவதும் தான் தந்தையை பிரதிபலிப்பதற்கு ஈடாகும். தந்தைக்குரிய மனப்பாங்கோடு செயல்படுவோம். அவரை பிரதிபலிப்போம்.


 


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...