24_03

திருச்சட்டமும் இறைவாக்கும் மறைந்து போகாது!

06.03.2024 - புதன் கிழமை

“இந்தத் திருச்சட்ட நூலை உன் முன்னின்று அகற்றாதே. இரவும் பகலும் இதனைத் தியானம் செய்து, இதில் எழுதியுள்ள அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இரு. அப்பொழுது தான் நீ செல்லும் இடம் எல்லாம் நலம் பெறுவாய்; வெற்றி காண்பாய்” - யோசுவா 1:8

எது திருச்சட்டம்? மக்களுடைய வாழ்க்கை இறைவனுக்குரியதாய் மாற உதவிய, பத்துக் கட்டளைகள், தோரா நூல்கள், திருப்பாடல்கள், இறைவாக்குகள் ஆகியவையே திருச்சட்டம். சுருங்கச் சொல்லின் திருச்சட்டம் என்பது ஆண்டவரின் வார்த்தை\கடவுளின் கட்டளை. (“நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது” - திருப்பாடல்கள் 119:72)

சாதாரண சட்டம், இறைவன் கொடுத்ததால் திருச்சட்டமாக மாறுகிறது, சாதாரண வார்த்தை, இறைவன் மொழிந்ததால் இறைவாக்காக மாறுகிறது. மனிதர் அழிந்து போகலாம். ஆனால் இறைவாக்கும் திருச்சட்டமும் ஒருநாளும் அழியாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:17-19), “திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என் நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” என்று இயேசு சொல்கிறார். இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் கட்டளைகளையும் நியமங்களையும் தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொண்டனர். ஆகவே, கடவுள் வெளிப்படுத்திய வார்த்தைகளை தவறாக கையாண்ட நபர்களை கண்டித்து, அதன் பொருளை விளங்கச் செய்வதே இயேசுவின் நோக்கமாக இருந்தது. ‘சட்டம் சொல்கிற வார்த்தைகளை விட அதனுடைய சாராம்சமே முக்கியம்’ என்பது இயேசுவின் கருத்து. 

திருச்சட்டத்தை பின்பற்றுவதற்கு முன் அதன் அர்த்தத்தை புரிந்துக் கொண்டு பின்பற்ற அழைப்பு விடுக்கிறார் இயேசு. அர்த்தமற்ற செயல்கள் ஆபத்தில் போய் முடியும் என்பது இங்கு தெளிவாகிறது. இயேசு திருச்சட்டத்தை எளிமைப்படுத்துகிறார். அதன் வழியாக கடவுளுக்கு உகந்த வழியில் நடக்க உதவுகிறார்.

கற்றுக் கொண்டதை பின்பற்றவும் கற்பிக்கவும் வேண்டும். திருச்சட்டம் காட்டும் பாதையில், ஒளியில் பயணிக்க வேண்டும். அப்போது விண்ணரசில் நாம் பெரியவராய் இருப்போம்.

திருச்சட்டம் நம் உள்ளத்தில் பதிய வேண்டும். உண்மை பொருளை உணர்ந்து கற்பித்தால், செயல்படுத்தினால் எதுவும் அழியாது…


 

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...