16.03.2024 - சனிக் கிழமை
“இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை” - லூக்கா 4:24
ஒருவர் நம் சார்பாக இல்லையென்றால் அவரை இழிவுப்படுத்துவதற்காக எதையும் சொல்லலாம் என்பது மனித சிந்தனை. நீயும் அவர்களில் ஒருவன் தானே! நீ அங்கிருந்து வருபவன் தானே! நீ அந்த ஊரைச் சார்ந்தவன் தானே! நீ அந்த மனிதருக்கு நெருக்கம் தானே! அதனால் நீ அவர் சார்பாக தான் பேசுவாய்!
இப்படியெல்லாம் ஒருவரை பற்றி பொது இடத்தில் பேசும் போது அவர் கூனிகுறுகுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால், இப்படி ஒரு சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 7:40-53) பரிசேயருள் ஒருவரான நிக்கதேம் பரிசேயரிடம் “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டார். உடனே மற்ற பரிசேயர்கள் “நீரும் கலிலேயரா என்ன? என்று கேட்டு அவரது வாயை அடைத்தனர். தங்களுக்கு ஆதரவாக பேசாதவர்கள் தங்களுக்கு எதிரிகள், அவர்களை கலிலேயர் என்று முத்திரை குத்திவிடுவர்.
யூதர்களுக்கு கலிலேயரை பிடிக்காது. அவர்களை கீழ்த்தரமாக நோக்குவர். தங்களைவிட மதிப்புக் குறைந்தவராக கருதுவர். இயேசு பிறப்பில் யூதர் என்றாலும் அவர் வளர்ந்த இடம் கலிலேயாவிலுள்ள நாசரேத்து (மத்தேயு 2:21-23) என்பதால் யூதர்கள் இயேசுவையும் வெறுத்தனர்.
ஆகவே தான், இயேசுவின் பின்புலத்தை வைத்து அவரை ஏற்க மறுத்தனர். இன்றைய நாளின் நற்செய்தியின் விவாதமும் அதுதான். சிலர் அவரை மெசியா என்றனர், சிலர் கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார் என்றனர், சிலர் தாவீதின் ஊரிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது? என்றனர். இவ்வாறு அவர்களிடையே கருத்து வேறுபாடும் இயேசுவை ஏற்றுக் கொள்வதற்கான தயக்கமும் இருந்தது.
ஒருவரது பின்புலம் அறியாமல் ஒருவரது வார்த்தைக்கு செவிமடுக்கும் பழக்கம் இப்போதெல்லாம் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒருவர் புதிய பொறுப்பு ஏற்கிறார் அல்லது புதிய பணித்தளம் செல்கிறார் என்றால் கேட்கப்பட கூடிய கேள்விகள் இரண்டு,
1. அவர் எந்த ஊர்?
2. அவரு என்ன ஆளு?
நம்மிலும் பின்புலம் பார்த்து செவிமடுக்கும் பரிசேயர் உண்டு. “எவரும் இரு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது. …நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” - மத்தேயு 6:24
கடவுளை ஏற்றுக் கொள்ள மற்ற குப்பைகளை விட்டுவிடுவோம். ஒருவரின் பின்புலத்தைவிட ஒருவரின் நன்னடத்தை சிறந்தது.
No comments:
Post a Comment