24_03

சோதிப்போர் பலர்… சோதனைக்கு உள்ளாவோர் சிலர்…

07.03.2024 - வியாழக் கிழமை

“சகோதர சகோதரிகளே, ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டால் தூய ஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள்; அவரைப் போல் நீங்கள் சோதனைக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்” - கலாத்தியர் 6:1

சோதனைகள் எல்லோருக்கும் வருகிறது. ஆனால் எல்லோரும் சோதனையில் வீழ்ந்து விடுவதில்லை. காரணம் அவர்கள் சோதனைகளை எதிர்கொள்வதற்கான ஆற்றலை பெற்றிருக்கிறார்கள். திருத்தூதர் பேதுரு தன்னுடைய முதல் திருமுகம் 5:8இல் சொல்வார், “அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது”. 

சோதனைகள் பல வகைகளில் வருகிறது. சோதனைகளை எதிர்த்து நிற்பதற்கான ஆற்றல் இறைவனிடமிருந்து வருகிறது. நாம் ஆற்றலை தவிர்த்துவிட்டு சோதனைகளை தேக்கி வைத்துக் கொள்கிறோம். தேக்கநிலையில் இருக்கும் சோதனைகள் நம்மை அழுத்திக்கொண்டே இருக்கிறது. புனித தாமஸ் மூர் சொல்வார், ‘உங்களுடைய மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள், இல்லையென்றால் அலகை உங்கள் மனதை தீயவற்றால் அல்லது சோதனைகளால் நிரப்புவான்’.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:14-23) இயேசுவை சிலர் சோதிக்கின்றனர். சாத்தானின் துணையோடு இவன் பேய்களை ஓட்டுகிறான் என்கின்றனர். இயேசு செய்த நன்மைக்கு கிடைத்த பரிவு அவதூறு பேச்சு. சோதிக்கிறவர்கள் பேச்சுக்கு இயேசு தடைப்பட்டு நிற்கவில்லை. எப்படி சாத்தான் சாத்தானை எதிர்த்து செயல்படும்? என்ற கேள்வியை முன்வைக்கிறார். இயேசு சொல்வது அவர்களுக்குள் நுழையவில்லை. 

அவரோடு இராதவர்கள் அவருக்கு எதிராக இருக்கிறார்கள். காரணம், செவிசாய்க்கும் மனநிலை இல்லையென்பதால் இயேசு சொல்வது சரியாக இருந்தும் அது அவர்கள் காதுக்குள் செல்லவில்லை. நாம் இயேசுவின் வார்த்தைக்கு செவிசாய்த்தால், நாம் அவரோடு இருக்கிறோம். 

இன்று நம் பணிகளை அங்கீகரிக்காமல், நம்மை பற்றி அவதூறு பரப்பி நம்மை சோதனைக்கு உள்ளாக்க காத்திருக்கும் கூட்டத்தை நாம் எதிர்த்து நிற்க வேண்டும். அவர்கள் விரித்த வலையில் விழாமல் இருப்பதே அவர்களை எதிர்த்து நிற்பதற்கு சமம். 

பேராயர் புல்டன் ஷீன் சொல்வார், ‘தூய வாழ்க்கை வாழாதவர்கள் ஏற்கனவே சாத்தானோடு தான் இருக்கிறார்கள், எனவே, சாத்தான் தூயவர்களை தான் சோதிப்பான்’.  

சோதனைகளை எதிர்த்து நிற்போம்… தூய நிலைக்கு கடந்துச் செல்வோம்…


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...