15.03.2024 - வெள்ளிக் கிழமை
“உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்” - பிலிப்பியர் 3:8
இயேசுவை புரிந்துக் கொள்வது மிக கடினம். நற்செய்தியின் சில இடங்களில் இயேசுவை பற்றி இவ்வாறு கொடுக்கப்பட்டிருக்கும், “…இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்” -யோவான் 5:13, “…இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்” -யோவான் 8:59, “…அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்” -யோவான் 10:39
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (யோவான் 7:1,2,10,25-30) “… அவர்கள் அவரைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை” என்று வாசிக்கிறோம். இவையெல்லாம் இயேசுவின் தப்பித்துச் செல்லும் நிலை என்று புரிந்துக் கொள்ளக் கூடாது. மாறாக தான் மாட்சி (காட்டிக் கொடுக்கப்பட வேண்டிய நேரம்) பெற வேண்டிய நேரம் வரும்வரை, கயவர்கள் கையில் அகப்படாமல் இருந்தார் என்று புரிந்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய நற்செய்தியின் தொடக்கப் பகுதியில் ‘இயேசுவை கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால்’ என்று தொடங்கி, நற்செய்தி இறுதிப் பகுதி ‘அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை’ என்று நிறைவு பெறுகிறது. விடுப்பட்ட நற்செய்தி பகுதியில் (யோவான் 7:11-24) சிலர் இயேசுவை நல்லவர் என்றனர், சிலர் மக்கள் கூட்டத்தை ஏமாற்றுகிறார் என்றனர், சிலர் யூதர்களுக்கு அஞ்சியதால் இயேசுவை பற்றி வெளிப்படையாக பேசவில்லை.
நமக்கும் இயேசுவை தெரியும் ஆனாலும் அவரை பற்றி முழுமையாக தெரியாது. இயேசு நல்லவர் ஆனால் அவரை பின்பற்ற வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. அவரை போல நல்லது செய்யும் எண்ணமோ நமக்கு இல்லை. இவைகள் தான் நம்முடைய நிலைப்பாடுகள்.
(திருத்தூதர் பணிகள் நூல் 19:15இல், “பொல்லாத ஆவி அவர்களிடம் (பேயோட்டும் யூதரிடம்) மறுமொழியாக, “இயேசுவையும் எனக்குத் தெரியும்; பவுலையும் எனக்குத் தெரியும்; ஆனால் நீங்கள் யார்?” என்று கேட்டது. நாம் இயேசுவை தெரிந்திருந்தும் தெரியாதவர்கள் போல இருக்கிறோம். ஆனால், பேய்கள் கூட இயேசுவை தெரிந்து வைத்திருக்கின்றன.)
யூதர்களுக்கு, இயேசு ஓய்வு நாள் சட்டத்தை மீறியது தான் குற்றம், அவர் நன்மை செய்தது குற்றமில்லை. நன்மை செய்ய காலமும் இடமும் தேவையில்லை, இயேசு காலத்தையும் இடத்தையும் கடந்தவர் என்பதையும் அவர்கள் உணரவில்லை.
“வழியும் உண்மையும் வாழ்வும் நானே” (யோவான் 14:6) என்கிறார் இயேசு
இயேசுவை பின்பற்றுகிற போது நாம் அவரை தெரிந்துக் கொள்ள முடியும். அவரை தெரிந்துக் கொண்டால், அவரோடு நாம் இணைந்து இருக்க முடியும்.
இயேசுவை அறிவோம்… அவரை அறிவிப்போம்…
No comments:
Post a Comment