05.03.2024 - செவ்வாய்க் கிழமை
“எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர்” - திருப்பாடல்கள் 32:1
மன்னிப்பு கேட்பவர்களை மன்னிக்க மனம் வருவதில்லை, செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கவும் மனம் வருவதில்லை. மன்னிப்பு கேட்பதற்கு நான் என்ன பெரிய பாவம் செய்து விட்டேன் என்ற எண்ணம் இருப்பதே உறவு சிக்கல்கள் தீர்க்கப்படாததற்கு காரணம். (பாவத்துக்கு மேல் பாவம் செய்யும் அளவுக்குப் பாவ மன்னிப்புப் பற்றி அச்சம் இல்லாமல் இராதே. ஆண்டவரின் பரிவு எல்லையற்றது” - சீராக் 5:5)
தவறு செய்தவர்கள் இறங்கி வர வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிக்கிற இடத்தில் இருக்கிறவர்கள் கர்வம் கொள்ளாது பிறரை மன்னிக்க வேண்டும். அதே வேளையில் மன்னிப்பு பெற்றவர்கள் மற்றவர்கள் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டும். இது ஒரு வழிப்பாதை அல்ல. மன்னிப்பை பெற்றுக் கொண்டு இருந்தால் மட்டும் போதும் என்ற எண்ணம் மறைந்து மன்னிப்பை கொடுக்கவும் முன்வர வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 18:21-35) பேதுரு இயேசுவிடம் கேட்கும் கேள்வி எனக்கு எதிராக ஒருவர் பாவம் செய்தால் நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்பது தான். இயேசுவின் பதில் மன்னித்து கொண்டே இரு (மன்னிப்பு என்பது பாவம் பெருக வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படுவதில்லை, மாறாக ஒருவர் புதுவாழ்வு பெற வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படுவதே). ஆனால் நற்செய்தி வாசகத்தில் ஒருவரிடமிருந்து கடன் தள்ளுபடி என்னும் மன்னிப்பை பெற்றவர் தன்னிடம் கடன்பட்டவரை மன்னிக்கவில்லை (மன்னிப்பு ஒரு வழி பாதையாக மாறியது). இரக்கம் பெற்றவர் இரக்கம் காட்டவில்லை. கடன் தள்ளுபடி என்னும் புதுவாழ்வு பெற்றவர் மற்றவருக்கு வாழ்வு கொடுக்கவில்லை. தன் சகோதரனை, சகோதரியை மன்னிக்காதவர் கடவுளிடமிருந்து மன்னிப்பை எதிர்பார்ப்பது நியாயமா?
புனித அம்புரோஸ் சொல்வார், ‘மற்றவர்களை காயப்படுத்தி, நாம் நம்மை குணப்படுத்த முடியாது’. மற்றவர்களின் காயங்களுக்கு மன்னிப்பு என்னும் மருந்தளிக்கும் போது நம் மனதின் காயங்கள் தானாக ஆறிவிடும்.
மற்றவர் செய்த தவறை மன்னித்து, அவற்றை மறக்கிற மனது தான் நல்வாழ்வை பெறும். இந்த இடத்தில் மறதி மிக நல்லது. எதையும் கொடுத்தால் தானே பெற்றுக் கொள்ள முடியும். மன்னிப்பை கேட்கிறவர்களுக்கு கொடுப்போம். மற்றவர்கள் செய்த தவறுகளை மறப்போம், புதுவாழ்வை பெற்றுக் கொள்வோம்…
No comments:
Post a Comment