10.03.2024 - ஞாயிற்றுக் கிழமை
“இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே” - எசாயா 12:2
நம்பிக்கை என்பது ஒருவரை நம்புகிறேன் என்று சொல்வது அல்ல, மாறாக அவரை ஏற்றுக் கொள்வது. யாரை நம்புகிறோமோ அவராக மாறுவது தான் நம்பிக்கை.
ஒரு குழந்தை தனது நம்பிக்கையை தன் தந்தையின் மீது வைக்கிறது என்றால் அக்குழந்தை தன்னை மறந்து தனது தந்தையில் இணைந்துவிடும். படியில் நிற்கிற குழந்தையை தந்தை தன்னை நோக்கி குதிக்க சொன்னால், அந்த குழந்தை எந்தவொரு பயமும் இல்லாமல் குதிக்கும். காரணம் அந்த குழந்தையின் நம்பிக்கை அவ்வளவு உறுதியாக இருக்கும்.
நம் இறைவன் தரும் மீட்பை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நம்மிலும் அத்தகைய நம்பிக்கை இருக்க வேண்டும். ஏதாவது கிடைக்குமா என்ற நம்பிக்கை அல்ல எல்லாமே நிறைவேறும் என்ற நம்பிக்கை.
பழைய ஏற்பாட்டில் (எண்ணிக்கை 21:4-9) மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராக முணுமுணுத்தனர். கொடுக்கப்பட இருக்கின்ற மீட்பை குறித்து மகிழ்ச்சியடையாமல், கடவுளுக்கு எதிராக செயல்பட்டனர். ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை அனுப்பி அவாகளை கடிக்க வைத்தார், அவர்களில் பலர் மாண்டனர். மீதமுள்ளோர் செய்த பாவத்திற்காக மன்னிப்பு கேட்டனர். ஆண்டவர் மோசேயிடம் (வெண்கல) கொள்ளி வாய்ப் பாம்பை செய்து கம்பத்தில் பொருத்து, இதை பார்க்கிற எவனும் உயிர் பிழைப்பான் என்றார். அவ்வாறே உயர்த்தி பிடிக்கப்பட்ட பாம்பை கண்டோர் உயிர் பிழைத்தனர்.
அதே போல இயேசு சிலுவையில் உயர்த்தப்பட்டதை காண்கிறவர் அவரில் நம்பிக்கை கொண்டார் (யோவான் 3:14-21) என்றால் அவர்கள் நிலைவாழ்வு பெறுவர். அன்று இஸ்ராயேல் மக்களிடம் ஏற்பட்ட முணுமுணுப்பு இன்று வரை நம்மிலும் தொடர்கிறது. இயேசுவிடம் மீட்பு உண்டு என்பதை அறிந்திருந்தாலும், அவரே ஒளி என்பதை உணாந்திருந்தாலும், நாம் அவரை நெருங்கி வருவதில்லை. காரணம் ஒளியிடம் வந்தோம் என்றால் நம் இருளான வாழ்க்கை வெளிப்பட்டு விடும் என்பதால்.
முதல் வாசகத்தில் (2குறிப்பேடு 36:14-16,19-23) கடவுளுக்கு எதிராக அருவருப்பான காரியங்களை செய்த மக்கள் மீது கடவுளின் சினம் பொங்கி எழுந்ததை வாசிக்கிறோம். வேற்றினத்தாரின் அருவருப்புகளை செய்த மக்களுக்கு வேற்றினத்து மன்னனாலேயே (கல்தேயரின் மன்னன் - 2குறிப்பேடு 36:17) அழிவை கொண்டு வருகிறார் கடவுள். அடிமை நிலையிலிருந்து மீட்கப்பட்டவர்கள், தங்களின் தீய நடத்தையால் மீண்டும் அடிமைத்தனத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மீண்டும் பாரசீக மன்னன் வாயிலாக எருசலேமுக்கு திரும்புமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. (அடிமை வாழ்வு - மீட்பு - பாவம் - தண்டனை - மன்னிப்பு - மீண்டும் விடுதலை…. இது தான் பழைய ஏற்பாடு)
இரண்டாம் வாசகத்தில் (எபேசியர் 2:4-10) பாவத்திற்கு அடிமையாய் இறந்த நிலையில் இருந்த நாம், கிறிஸ்து வழியாக உயிர்பெற்றுள்ளோம் என்கிறார் திருத்தூதர் பவுல். நாம் மீட்கப்பட்டிருப்பது நம் ஆற்றலால் அல்ல, அவர் அருளாலேயே. கடவுள் நமக்கு கொடுத்த கொடை என்பது பாவத்திலிருந்து விடுதலை கொடுத்து புதுவாழ்வுக்கு(விண்ணக வாழ்வு) அழைத்தது தான். அழைப்புகேற்ற வாழ்வு வாழ, நற்செயல்கள் புரிய அழைக்கப்பட்டுள்ளோம்.
கடவுளோடு இணைந்திருந்தால் (நம்பிக்கையின் வழியாக) மீட்பு என்னும் ஒளியை பெற்றுக் கொள்வோம். இருள்நிறைந்த வாழ்வை விரட்டி ஒளியேற்றுவோம்.
No comments:
Post a Comment