24_03

தலைமைத்துவம் + குருத்துவம் = இழப்பில் வாழ்வு


28.03.2024 - பெரிய வியாழன்

புனித வியாழன், Maundy Thursday, பெரிய வியாழன் என்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இன்றைய நாள் மூன்று சிறப்புகளைக் கொண்டுள்ளது.

1. தலைமைத்துவம் - பாதங்களை கழுவி பணிவிடை புரிவதில் வெளிப்படுகிறது

2. குருத்துவம் - இதை என் நினைவாகச் செய்யுங்கள், ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்ற அன்புக் கட்டளையை நிறைவேற்ற அழைப்பு

3. நற்கருணை - அப்பத்தையும் கிண்ணத்தையும் எடுத்துக் கடவுளுக்கு நன்றி சொல்லி, தன்னையே உணவாகத் தந்தது

தலைமைத்துவம் தனது பணியின் பணிவில் வெளிக் கொணரப்பட வேண்டும், குருத்துவம் தன்னை இழந்து பிறருக்கு வாழ்வு கொடுப்பதில் வெளிப்பட வேண்டும். நற்கருணை என்பது சமப்பந்தி என்ற உயரிய எண்ணம் உருவாக வேண்டும்.

இயேசு தன் சீடர்களின் பாதங்களை கழுவியது ஒரு முன்மாதிரியான செயல். அடிமைகள் தனது தலைவருக்கு செய்ய வேண்டிய ஒரு பணி தான், தலைவர் வெளியே சென்று வந்த பிறகு அவருடைய காலடிகளை கழுவுவது. அத்தகைய செயலை இயேசு முன்னெடுக்கிறார். அதோடு இயேசு நிறுத்தவில்லை, “ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடைமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” - யோவான் 13:14-15) என்கிறார். வார்த்தையால் சொல்லப்படுவதைவிட வாழ்க்கையால் எடுத்துரைப்பது அடுத்தவரை எளிதாக ஈர்க்கும். இயேசுவின் வாழ்வு ஈர்ப்பையும் கொடுத்தது, அவரை போல மற்றவர்களை இயங்கவும் வைத்தது.

‘இதை என் நினைவாகச் செய்யுங்கள்’ என்ற இயேசுவின் வார்த்தை குருத்துவத்தின் வழியாக இன்றும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. கல்வாரி பலி அனுதினமும் அரங்கேறுகிறது. திருப்பலியில் பலி பொருளும் அவரே… பலி இடுபவரும் அவரே… 

தன்னையே இழப்பதும் பிறர் வாழ்வு உயர உழைப்பதும் தான் நற்கருணைக் கொண்டாட்டத்தின் உட்பொருள். இயேசுவின் தியாகம் தன்னை கொடுப்பதில் வெளிப்பட்டது. நற்கருணை என்பது சமப்பந்தி. இந்த பந்தியில் உயர்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்ற வேறுபாடு இல்லை. சாதிய ஏற்றத் தாழ்வுகள் இல்லை, அடிமை தலைவன் என்ற நிலை இல்லை, முன்னுரிமையும் சிறப்பு தரிசனமும் இல்லை. அனைவரும் கிறிஸ்துவின் ஒரே திருவுடலையும் திருஇரத்தத்தையும் பெறுகிறோம்

முப்பெரும் நிகழ்வின் ஒன்றிப்புதான் இந்த புனித வியாழன். இந்த வியாழனில் மகிழ்ச்சியும் உண்டு துயரமும் உண்டு. ஒவ்வொரு விடுதலைக்குள்ளும் பல பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

1. இயேசு இரத்த வியர்வை வியர்த்தார் (லூக்கா 22:44)

2. தனது சீடரால் காட்டிக் கொடுக்கப்பட்டார் (மாற்கு 14:43-45) சீடரின் மறுதலிப்பு (மாற்கு 14:66-72) சீடரின் நிராகரிப்பு (மாற்கு 14:50-51)

3. இரவு முழுவதும் படைவீரர்களால் கொடிய வேதனை (மத்தேயு 26:67-68)

நாம் மீட்கப்பட பல்வேறு தியாகங்களை அவர் செய்தார். “அவரோ, நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்” - எசாயா 53:5 

புனித வாரத்தை பொருள் உணர்ந்து கொண்டாடுவோம். தற்காலிக மனமாற்றம், மனவருத்தம் அல்ல அவருடைய காயங்களை ஆற்றும் குற்றமுணர்ந்த மனமாற்றத்தை (பாவங்களுக்கு பரிகாரம் செய்யும் மனமாற்றத்தை) வெளிப்படுத்துவோம்.

சிந்தனைக்கு சில…

- கிறித்தவ விழுமியங்களை வாழ்வாக்க தவறிய தருணங்களை எண்ணிப் பார்ப்போம். தாழ்ச்சி, மன்னிப்பு, அன்பு, பொறுமை, நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்த தருணங்களுக்காக மன்னிப்பு கேட்போம்.

- நற்கருணைக் கொண்டாட்டத்தின் மகத்துவத்தை உணராமல் வாழ்ந்த தருணங்களை நினைவில் கொள்வோம். ஏற்றத்தாழ்வு நிறைந்த உள்ளத்தோடு சமப்பந்தியில் பங்கெடுத்த நாட்களுக்காக மன்னிப்பு கேட்போம்.

- குருக்களும் தவறக் கூடியவர்கள், அவர்கள் செய்த தவறை அவர்களிடம் எடுத்துக் கூறாமல், அடுத்தவர்களிடம் எடுத்துக் கூறி எள்ளி நகையாடிய தருணங்களை நினைவு கூர்வோம். குருக்களுக்கு எதிராக பேசிய தருணங்களுக்கு மன்னிப்பு கேட்போம்.

புனித வாரத்தில் மேற்கொள்ளப்படும் சில வாடிக்கையான செயல்கள்

ஒருவேளை அல்லது இருவேளை உணவுகளை தவிர்த்தல்

புலால் உணவுகளை தவிர்த்தல்

ஆலயம் சந்தித்தல், இறைவேண்டல் செய்தல்

சிலுவைப் பாதை செய்தல்

ஒப்புரவு வழிபாட்டில் பங்கெடுத்தல்

உழுந்தங் கஞ்சி, சுடு கஞ்சி செய்து மக்களுக்கு கொடுத்தல்

அலைபேசி, தொலைக்காட்சி உபயோகத்தை குறைத்தல்

கருப்பு நிற உடை அணிதல்

புலனத்தில் (வாட்ஸ் அப்) வருந்தக்க பாடல்கள் வைத்தல்

புனித வாரத்தில் மேற்கொள்ளப்படும் சில வேடிக்கையான செயல்கள்

பாடுப்பட்ட இயேசுநாதர் திருமுன் சுயபடம் (செல்ஃபி) எடுத்தல்

விளம்பரங்களை தேடுதல் (தன்னை எல்லோரும் பார்க்க வேண்டுமென காரியங்களை செய்தல்)

ஒறுத்தல் முயற்சிகளுக்கு உறுவிளைவிக்கும் படியாக குளிர்பானங்கள், மோர் வழங்குதல், அதை பெறுவோர் கூச்சலிட்டுக் கொண்டு, அடித்து பிடித்து அதை வாங்குதல்

வழிபாட்டில் பங்கெடுக்காது ஆலயத்திற்கு வந்தும் சுவரில் அமர்ந்தோ, சாய்ந்தோ நின்றுக் கொண்டு அலைபேசி உபயோகித்தல், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருத்தல்

திருப்பலி அல்லது வழிபாடு முடிந்து செல்லும் வழியில் உள்ள கடைகளில் நின்று கொண்டு உணவுகளை வாங்கி உண்ணுதல் (ஆலயத்திற்கு உள்ளே மட்டும் துக்கம் கொண்டாடும் குழுவினர்)

ஆலயத்தின் உள்ளே அல்லது ஆலய வளாகத்தில் நின்றுக் கொண்டு புறணி பேசுதல்

இயேசுவின் பாடுகளில் பங்கெடுக்காது பராக்குகளுக்கு இடம் கொடுப்பது (அடுத்தவர் உடை, நகை, நடை கண்டு வியப்பது 

இது இயேசுவின் பாடுகள்… ஆனால் சுமைகள் நம்முடையது… 

தூயவர் அவர்… பாவம் செய்தது நாம்…

மனம் வருந்துவோம்…


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...