ஞாயிற்றுக் கிழமை - 03.03.2024
“கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும், வீட்டுக்காவலர்⒜ நடுக்கங்கொள்ள, வலியோர்⒝ தளர்வுறுமுன்னும், அரைப்போர்⒞ மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர்⒟ ஒளி இழந்துபோகுமுன்னும், தெருச்சந்தடி கேளாவண்ணம் கதவுகள்⒠ அடைத்துக்கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர்⒡ அனைவரும் ஓய்ந்துபோகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை” - சபை உரையாளர் 12:2-4
திருவிவிலிய அடிக்குறிப்பு - ⒜ கைகள் ⒝ கால்கள் ⒞ பற்கள் ⒟ கண்கள் ⒠ காதுகள் ⒡ குரல்வளை நரம்புகள்
கடவுளை தேடுவதற்கு உள்ளமும் உள்ளதும் தூய்மையாக இருக்க வேண்டும். எல்லாம் இழந்தபிறகு கடவுளை தேடாது எல்லாம் நன்றாய் இருக்கும்போதே கடவுளை தேட வேண்டும். படைத்தவருக்கே உள்ளத்தில் இடம் இல்லாமல் போனால் எப்படி? உள்ளம் சரியாய், உறுதியாய் இருந்தால் எல்லாம் நன்றாய் இருக்கும்.
மனம் அலைபாய ஆரம்பிக்கும்போது எல்லாம் சிதறுண்டு போகிறது. மனதிற்கு பிடித்தவர்(வை)களுக்கு மனதில் இடம் கொடுத்து விடுகின்றோம். அதன்பிறகு தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. அடுத்தவரில் மகிழ்ச்சி காண முற்பட்டால் அது நிலையற்ற மகிழ்ச்சியாக தான் இருக்கும். ஏனென்றால் ஒருவரின் வெளிப்புறம் அவரின் நேர்மைத்தனத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டாது. உள்ளம் தான் உள்ளதை காட்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 2:13-25) வெளிப்புறத்தையும் உட்புறத்தையும் தூய்மையாக வைக்க அழைப்பு விடுக்கிறார் இயேசு. “என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” என்று சொல்லி இறைவன் உறையும் கோவிலை வியாபாரக் கூடமாக்கிய கயவர்களை கண்டிக்கிறார். “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்று சொல்லி கடவுள் உறையும் தம் உடலாகிய கோவிலை பற்றி எடுத்துரைக்கிறார்.
(“நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில், கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்” 1கொரி 3:16)
வெளிப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதுபோல் காட்டிக் கொள்வது எளிது. ஆனால் உட்புறத்தை பற்றிய அக்கறை நமக்கு கிடையாது. உட்புறம் என்னும் உள்ளமும் ஆன்மாவும் தூய்மையாக இருக்க வேண்டும்.
மத்தேயு நற்செய்தி 23:27இல் “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உஙகளுக்கு கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன” என்று இயேசு சொல்கிறார். இது இன்று அப்படியே நம்முடைய வாழ்க்கைக்கு பொருந்துகிறது. வெளியே தூய்மையிலும் தூய்மை. உட்புறத்தில் மாசுபடிந்திருக்கிறது.
நற்கருணையை திருப்பலியில் பெற்றுவிட்டு, கோவில் வளாகத்தில் நின்றுக் கொண்டு மற்றவர்களை பற்றி பேசும்போது கோவில் சந்தையாக மாற்றப்படுகிறது. கோவிலில் கடவுள் இருக்கிறார் என்று சொல்லிவிட்டு மந்திரத்தையும் மூட பழக்கவழக்கங்களையும் தேடி செல்லும்போது கோவில் சந்தையாக மாற்றப்படுகிறது. கடமைக்காக கோவிலுக்கு வந்து, வெளியே நின்று கொண்டு திருப்பலியில் பங்கெடுக்கும்போது கோவில் சந்தையாக்கப்படுகிறது. செய்கிற தவறுகளை எல்லாம் செய்துவிட்டு, கோவில் உண்டியலில் காணிக்கை போடும்போது கோவில் வியாபாரக் கூடமாகிறது. நீர் எனக்கு இதை செய்தால், நான் உமக்கு இதை செய்வேன் என்று கடவுளிடம் பேரம் பேசும்போது கோவில் வியாபாரக் கூடமாகிறது.
தீயனவற்றை சிந்திக்கும்போது உள்ளம் தீட்டாகிறது. மற்றவர்களுக்கு எதிராக புரணி பேசும்போது உள்ளம் மாசுப்படுகிறது. மன்னிக்க முடியா கோபத்தோடு இறுதிவரை இருக்கின்றபோது உள்ளம் தூய்மை இழக்கிறது.
இறைவன் உறையும் உடல் என்னும் கோவில் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. இறைவன் உறையும் கோவிலும் நம்முடைய செயல்களால் மாசுபடாதவாறு பாதுகாக்கப்பட வேண்டும்.
வெளிப்புறமும் உட்புறமும் மாசுபடாதவாறு காத்து, இறைவனை கோவில் உள்ளே தேடுவோம். அடுத்தவரின் உள்ளத்திலும் நம் உள்ளத்திலும் கண்டு கொள்வோம்.
No comments:
Post a Comment