1. புனித யோசேப்பு யார்?
தாவீதின் வழிமரபை சார்ந்தவர். யாக்கோபின் மகன். மரியாவின் கணவர், இயேசுவின் வளர்ப்புத் தந்தை.
2. புனித யோசேப்பு யாருக்கெல்லாம் பாதுகாவலர்?
உலகளாவிய திருஅவை, குடும்பங்கள், தந்தையர், கருவுற்ற தாய்மார்கள், பயணம் செய்வோர், புலம் பெயர்ந்தோர், வீடு விற்போர், வீடு வாங்குவோர், தச்சர், கைவினைஞர், பொறியியலாளர்கள், அனைத்து தொழிலாளர்கள்.
3. புனித யோசேப்பு எதற்கெல்லாம் முன்மாதிரி?
கற்பு, உழைப்பு, நேர்மை, உண்மை, கீழ்ப்படிதல், இறைநம்பிக்கை
4. புனித யோசேப்பிடம் காணப்படும் அடையாளங்கள் எவை?
லில்லி மலர் - அவருடைய தூய்மையின் அடையாளம்
கோடாரி, தச்சு சதுரம் - அவருடைய பணி, நேர்மையின் அடையாளங்கள்
5. ஏன் யோசேப்புக்கும் மரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது?
விவிலிய பார்வையில் - அன்னை மரியாவின் இழிநிலையை நீக்க (மத்தேயு 1:20 “…அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால் தான்”, அன்னை மரியாவையும் குழந்தையையும் காப்பாற்ற (மத்தேயு 2:14 குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்”)
புனித தாமஸ் அக்குவினாஸின் பார்வையில் - ‘கன்னியின் வயிற்றில் கருவாகத் தோன்றிய இறைமகனுக்கு ஆன்மிகத் தொட்டிலாக, யோசேப்பு - மரியா திருமணம் தேவைப்பட்டது. மரியாவுக்கு தவறான விதத்தில் குழந்தை பிறந்தது என்ற பேச்சு எழாமல் இருக்க அவ்வாறு நடந்தது”.
6. எந்த திருத்தந்தை புனித யோசேப்பை குறித்து முதல் சுற்றுமடல் எழுதினார்?
1889 ஆம் ஆண்டு, திருத்தந்தை 13ஆம் லியோ அவர்கள் Quamquam Pluries என்ற சுற்றுமடலில் புனித யோசேப்புக்கு மார்ச் மாதத்தில் சிறப்பு வணக்கம் செலுத்த அங்கீகாரம் கொடுத்தார்.
7. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித யோசேப்பை பற்றி கூறியது என்ன?
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Patris Corde என்ற திருத்தூது மடலில், புனித யோசேப்பை பற்றி எழுதியுள்ளார். அதில் அவர் கூறியது, ‘இவ்வுலகில் மனிதனாக பிறந்து வாழ்ந்த இயேசுவுக்கு, புனித யோசேப்பு தந்தை கடவுளின் பிரதிபலிப்பாக இருந்தார். மகனை பாதுகாத்தார், வழிநடத்தினார்.’ தொடர்ந்து இணைச் சட்டம் 1:31-ஐ மேற்கோள் காட்டி தந்தை கடவுளை போல யோசேப்பு தன் மகனை தூக்கிச் சுமந்ததை எடுத்துச் சொல்கிறார், “பாலை நிலத்தில், நீங்கள் நடந்து வந்த வழிகளில் எல்லாம் இங்கு வந்து சேரும்வரை ஒருவன் தன் மகனைத் தூக்கிச் செல்வது போல உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைத் தூக்கி வந்ததைக் கண்டீர்களே!”
தொடரும்….
No comments:
Post a Comment