24_03

உயிர்த்தெழுந்த இயேசுவின் விழுமியங்கள்…


31.03.2024 - ஞாயிற்றுக் கிழமை

உயிர்ப்பு ஞாயிறு

“ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்…” - விடுதலைப் பயணம் 15:1

கொலை செய்து அவரது மூச்சை நிறுத்திவிட்டோம், இனி நமக்கு பிரச்சனை இல்லை என்று எண்ணியது அதிகார வர்க்கம். அவர் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிக்கிறார் என்பதை அவர்கள் அறியவில்லை. புரட்சியாளர்களின் உடல்கள் புதைக்கப்பட்டாலும் அவர்கள் விழுமியங்கள் ஒருநாளும் புதைக்கப்படுவதில்லை.

இங்கு இயேசுவின் உடல்கள் புதைக்கப்பட்டபோதிலும் அது மண்ணில் தங்கிவிடவில்லை. அவர் மாண்புடன் உயிர்பெற்றார். அவர் உடலோடு இணைந்து அவரது விழுமியங்களும் உயிர்பெற்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 16:1-7) இயேசுவின் உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கிக் கொண்டு மூன்று பெண்கள் கல்லறை நோக்கிச் செல்கிறார்கள். இது ஒரு துணிச்சல்மிக்க  செயல்பாடு. அவர்களுக்குள் இருந்தது ஒரே ஒரு கவலை தான், கல்லறை வாயிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்? கல்லறையில் படைவீரர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பார்களே என்ற செய்தி அவர்களுக்கு தெரிந்திருக்குமா? (மத்தேயு 27:66 - “அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்”). 

இந்த செய்தி அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். தெரிந்திருந்தால், அவர்கள் அங்குச் செல்ல அஞ்சி இருப்பார்கள், நமக்கு யார் கல்லை புரட்ட உதவுவார் என்ற கேள்வி எழுந்திருக்காது. (நறுமணப் பொருள் கொண்டு இறந்தவர்களின் உடலை பூசுவது அவர்களது பழக்கவழக்கம்). அவர்கள் எண்ணமெல்லாம் இயேசுவுக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பது தான். எனவே அவர்கள் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் கல்லறைக்கு செல்கிறார்கள். இவர்களின் துணிச்சல்மிக்க இந்த செயல்பாடு இயேசுவின் விழுமியம் தான். 

கல் அகற்றப்பட்டிருப்பதை கண்டு உள்ளே செல்கிறார்கள், வெண்தொங்கல் ஆடை அணிந்த ஒருவரை காண்கிறார்கள், திகிலுறுகிறார்கள். ‘இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார், அவர் இங்கே இல்லை, கலிலேயாவில் அவரை காண்பீர்கள்’ என்று அந்த நபர் சொன்னதும் அவர்கள் கல்லறையை விட்டு வெளியே வருகிறார்கள்.

அவர்கள் கல்லறையை விட்டு வெளியே வந்ததும் ஓட்டம் பிடிக்கிறார்கள், நடுக்கமுறுகிறார்கள், மெய்மறந்து போகிறார்கள், யாரிடமும் எதையும் கூறவில்லை. 

இன்று இயேசுவின் உயிர்ப்பைக் கொண்டாடுகிறோம். இன்று இயேசுவின் விழுமியங்களும் கொண்டாடப்பட வேண்டும். அவர் போதித்த, உதிர்த்த, விதைத்த வார்த்தைகள் வாழ்வாக்கப்பட வேண்டும். அன்பு, இரக்கம், மன்னிப்பு, அமைதி, நீதி, நேர்மை ஆகியவை வாழ்வாக்கப்பட வேண்டும்.

கல்லறையை எதிர்கொண்டு சென்றவர்களுக்கு முன் கல் என்ற தடங்கல் இருந்தது. அவர்கள் கல்லறையை நெருங்கி சென்றதும் தடங்கல் இல்லை ஆனால் தடுமாற்றம் இருந்தது. இயேசுவின் உயிர்ப்பை பற்றிய தடுமாற்றம். அவர்கள் கேட்ட செய்தியை மற்றவருக்கு அறிவிப்பதற்கான தடுமாற்றம்.

‘கண்டு நம்புவோரை விட காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்’ என்றார் இயேசு. இயேசுவின் உயிர்ப்பை நாம் கண்களால் காணவில்லை, ஆனால் கேட்டு அறிந்திருக்கின்றோம். அவரின் வாழ்வை நம்பிக்கையினால் கண்டுணர்ந்திருக்கிறோம். 

ஆனால் அந்த மூன்று பெண்களை போல, அறிவிக்க மறந்திருக்கின்றோம். அவர்களுக்குள் இருந்த தடுமாற்றம் அதிர்ச்சியாக, நடுக்கமாக, அச்சமாக இருந்தது. அதே போலத்தான் நமக்குள்ளும் இயேசுவின் விழுமியத்தை அறிவிக்க பல தடுமாற்றம்\தடைகள் இருக்கின்றன. 

- மற்றவர்களை போல இருந்துவிட்டு செல்வோம்

- நல்லவர்களாக இருப்பதால் என்ன பலன்?

- அவர் வாழ்ந்தார், இறந்தார், சென்றார். அவரை போல எனக்கு ஏன் துன்பம்?

- நன்மை செய்வதால் எனக்கு என்ன கைம்மாறு? என்ற கேள்விகளே கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடுவதற்கு தடையாக இருக்கிறது.

நாம் சற்று சிந்தித்து பார்த்தோம் என்றால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட தங்கள் எடுத்துக்காட்டான வாழ்வால் கடவுளை பிரதிப்பலிக்கிறார்கள். நம் வாழ்வு கிறித்தவர்கள் என்று பெருமிதம் கொள்வதோடு, வாடிக்கையான சடங்குகளை நிறைவேற்றுவதோடு நின்று விடுகிறதே என்பது தான் வருந்ததக்க விஷயம்.

தவக்காலம் எப்போது முடியும்? பாஸ்கா காலம் எப்போது வரும் என்ற எதிர்ப்பார்ப்பு தான் நம்மில் அதிகம். பாடுகள் வேண்டாம், மரணங்கள் வேண்டாம், தியாகங்கள் வேண்டாம், இழப்புகள் வேண்டாம். இவைதான் நாம் எதிர்பார்க்கும் கிறித்தவம். ஆனால் இயேசுவின் போதனை அதுவல்ல, இறப்பு இல்லாமல் உயிர்ப்பு இல்லை, தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை, துன்பம் இல்லாமல் மாட்சி இல்லை.

கிறிஸ்துவின் விழுமியங்கள் வாழ்வாக்கப்படாமல் கிறித்தவமும் இல்லை…

அன்று கிறிஸ்துவின் கதை முடிந்தது என்று ஒரு கூட்டம் எண்ணியது. ஆனால் கிறிஸ்துவின் கதை முடியவில்லை, அவர் உயிர்த்தெழுந்துவிட்டார், அவரின் விழுமியங்களோடு அவர் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கிறிஸ்துவின் விழுமியங்களோடு கிறித்தவர் என்ற பெருமைக் கொள்வோம்… உயிர்ப்பில் மகிழ்வோம்…


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...