24_03

ஆர்ப்பரிப்பில் ஆரம்பமாகும் பாடுகள்…



 24.03.2024 - ஞாயிற்றுக் கிழமை

எதையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டால் அது சுமையாக தெரியாது. குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்கு பிரசவ வலி வேதனை அல்ல, தன் பிள்ளைகளுக்காக உழைக்கும் தந்தையின் மன வலி வேதனை அல்ல, முதியோர் இல்லத்தில் இருந்தாலும் தன் பிள்ளைகளுக்காக செபிக்க மறவாத தாய், தந்தை உள்ளங்களின் வேதனை வெறுப்பல்ல.

சிலர் ஏமாற்றங்களை கண்டு நொந்துவிடுகிறார்கள், சிலர் வாழ பழகிக் கொள்கிறார்கள், சிலர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள். எதிர்ப்பு இல்லாத ஏற்றுக் கொள்தல்கள் நிறைந்த பலனை கொடுக்கத் தான் செய்யும். சிலருக்கு தன்னை இழந்து பிறர் வாழ்வை உயர்த்துவதில் மகிழ்ச்சி. சிலருக்கு இருப்பதை பகிர்ந்து கொடுப்பதில் மகிழ்ச்சி. பிறரின் தேவையை பூர்த்தி செய்வதில் ஒருசிலருக்கு மகிழ்ச்சி.

இப்படி அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வோரின் வாழ்வு ஆர்ப்பரிப்பில் (மகிழ்வில்) தொடங்குகிறது. இறுதியில் செய்த நன்மைக்கு கைம்மாறாக துன்பத்தில் முடிவடைகிறது. இறைவாக்கினர் எரேமியா கேட்பது போல இருக்கிறது நன்மை செய்தோரின் வாழ்க்கை, “நன்மைக்குக் கைம்மாறு தீமையா?” - எரேமியா 18:20

இவ்வுலகில் தான் நன்மைக்கு கைம்மாறு தீமை, நாம் எதிர்நோக்கி இருக்கும் அவ்வுலகில் நன்மைக்குக் கைம்மாறு நன்மை தான், தீமைக்குக் கைம்மாறு தீமை தான். 

செய்த (நன்மையான) செயலுக்கு எதையும் எதிர்பாராதவர்கள் துன்பம் வந்தாலும் துவண்டு போவதில்லை. இப்படிபட்ட வாழ்க்கை வாழ்வதற்கும் மனதில் உறுதி (தில்) வேண்டும். ‘இது உனக்கு தேவையா?’ என்று நம் உறவுகளே நம்மை கேட்கும். ‘இருக்கிறத வச்சி ஒழுங்கா வாழ தெரியல இவுங்களுக்கு’ என்று ஊரே எள்ளி நகையாடும். மற்றவர்கள் நமக்கு செய்த துரோகம் கூட நமக்கு வலிக்காது, ஆனால் வெந்த புண்ணில் இன்னும் வேதனையை கூட்டும் உடன் உறவுகளின் வார்த்தைகள் தான் வேதனையை அதிகரிக்கும்.

இயேசுவுக்கும் இது விதிவிலக்கல்ல…

இன்று பாடுகளின் ஞாயிறுக்குள் அடியெடுத்து வைக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகம் மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது (மாற்கு 14:1-15:47). நான்கு நற்செய்தியாளர்களை பொருத்தவரை, வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைகிறார் இயேசு. இது தனது பாடுகளின் தொடக்கம் என்பது இயேசுவுக்கு தெரியும். ஓசான்னா என்று சொன்னவர்கள் சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்! என்று சொல்வார்கள் என்பது இயேசுவுக்கு நன்றாகவே தெரியும்.

வாழ்க! வாழ்க! என்ற ஆர்ப்பரிப்போடு ஆரம்பாகிறது இயேசுவின் எருசலேம் நுழைவு. ஒழிக! ஒழிக! என்ற ஆர்ப்பரிப்போடு அரங்கேறுகிறது இயேசுவின் சிலுவை ஏற்பு.

“அவரோ, நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்” - எசாயா 53:5

(இன்றைய நாளின் நற்செய்தி தலைப்புகள் - இயேசுவை கொல்லச் சதித்திட்டம் தீட்டப்படுகிறது, இயேசுவை காட்டிக் கொடுக்க யூதாசு உடன்படுகிறான், பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது, யூதாசின் சூழ்ச்சி வெளியாகிறது, இயேசு தன்னையே உணவாக தருகிறார், பேதுருவின் மறுதலிப்பு முன்னறிவிக்கப்படுகிறது, கெத்சமணித் தோட்டத்தில் இயேசு ஆழ்துயரம் கொள்கிறார், இயேசு கைது செய்யப்படுகிறார், தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் குற்றவாளியாக நிற்கிறார், பேதுரு மறுதலிக்கிறார், இயேசு பிலாத்திடம் அழைத்துச் செல்லப்படுகிறார், இயேசுவுக்கு மரணத் தண்டனை விதிக்கப்படுகிறது, படைவீரர்கள் ஏளனம் செய்கிறார்கள், சிலுவையில் இயேசு, இயேசு உயிர்த் தியாகம் செய்கிறார், இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது). 

இயேசுவும் இந்த கேள்வியை கேட்டிருக்கலாம்!, “நன்மைக்குக் கைம்மாறு தீமையா?”

நீண்ட நெடிய துயரமும் பாடுகளும் இயேசுவை எவ்வளவு வேதனைக்கு உள்ளாக்கியிருக்கும். அன்று மட்டுமல்ல, இன்றும் இயேசுவின் பெயரால் செய்யப்படும் அநியாயங்கள், இயேசு விரும்பாததை இயேசு விரும்புவதாக செய்யும் செயல்கள் இயேசுவை வேதனைக்கு உள்ளாக்கத் தான் செய்கிறது. 

மனிதர்கள் முன் நல்லவர்களாக காட்டிக் கொள்வது முக்கியல்ல… கடவுளின் முன்னிலையில் நல்லவர்களாக இருப்பது தான் முக்கியம்.

மகிழ்வின் ஆர்ப்பரிப்பு தொடக்கம் தான். ஆர்ப்பரிப்பை தொடர்ந்து வரும் மிரட்டல்கள், இடையூறுகள், தடுமாற்றங்கள், துன்பங்கள் ஆகியவற்றில் நிலை தளர்ந்துவிடாமல் இருப்போம். அவ்வுலகில் நாம் பெறப் போகும் கைம்மாறு தான் ஆர்ப்பரிப்பின் நிறைவு.

நம் சுமைகளை ஒருபோதும் மற்றவர்கள் மேல் சுமத்தாத நல்வாழ்வு இயேசு விரும்பும் வாழ்வு. மற்றவர்களின் சிலுவைகளை சுமந்து அவர்களுக்கு உதவி செய்வதன் வழியாக, இயேசுவின் பாடுகளில் பங்கெடுப்போம். புனித வாரத்தில் மனித மாண்புகளை சுமந்தவர்களாய் பயணிப்போம்… 


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...