24_10

இரண்டு செல்வம்... இரண்டு பாதை...

பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு 

13.10.2024 - ஞாயிற்றுக் கிழமை

இந்த உலகம் வித்தியாசமானது. நேர்மையானவர்களை தீயவர்கள் என்றும், தீயவர்களை நேர்மையானவர்கள் என்றும் படம்பிடித்து காட்டக் கூடியது தான் இந்த உலகம் (உலகம் என்பது மனிதரை குறிக்கிறது). எங்கு செல்வம் இருக்கிறதோ அங்கு மரியாதை இருக்கிறது. 

இந்த உலகம் போதிக்கக்கூடிய பாடம் சற்று வித்தியாசமானது. உன்னுடைய வாழ்வு உயர வேண்டும் என்றால் எதையும் செய்; யாருக்காகவும் எதற்காகவும் உன்னை விட்டுக் கொடுக்காதே, மற்றவர்கள் எப்படி போனாலும் பரவாயில்லை; நீ உனக்கான காரியத்தை செய். இதைப் போன்ற தன்னலம் பாராட்டக்கூடிய செயல்களை தான் இந்த உலகம் விரும்புகிறது, இந்த உலகம் போதிக்கிறது. 

நான் நன்றாக இருந்தால் போதும் என்ற குறுகிய மனநிலை நம்மில் பலருக்கு உண்டு.

இந்த உலகம் தரக்கூடிய செல்வம், மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருக்கிறது. அந்த செல்வம் என்பது பணமாகவோ, பொருளாகவோ, புகழாகவோ, அதிகாரமாவோ, தற்பெருமையாகவோ இருக்கலாம்.

எல்லாம் மாயை! என்று நாம் அறிந்திருக்கிறோம், ஆனால் அந்த மாயைக்குள் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். 

("உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது" - கொரிந்தியர் 7:31)

இரண்டு வகை பாதை நமக்கு முன் இருக்கிறது. ஒன்று விண்ணகம் நோக்கிய பாதை மற்றொன்று மண்ணகம் நோக்கிய பாதை. 

விண்ணக நோக்கிய பாதை அழியா ஞானத்தை கொடுக்க கூடியது. மண்ணகத்தை நோக்கிய பாதை அழிவுறும் செல்வத்தைக் கொடுக்கக் கூடியது. 

இறைவார்த்தை நமக்கு தெளிவாக சொல்கிறது (நீதிமொழிகள் 11:4), "கடவுளின் சினம் வெளிப்படும் நாளில் செல்வம் பயன்படாது; நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்".

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:17-30) ஒருவர் இயேசுவிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, நல்ல போதகரே நிலைவாழ்வை உரிமையாக்கி கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

இயேசு அவரிடம் கட்டளைகளை கடைப்பிடியும் என்று சொல்கிறார். அவரோ நான் இளமை முதல் அனைத்தையும் கடைபிடித்து வருகிறேன் என்று பதில் கூறுகிறார். 

இயேசுவோ அவரை அன்பொழுக கூர்ந்து நோக்கி, உமக்கு இன்னும் ஒன்று குறைவுபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னை பின்பற்றும் என்று சொல்கிறார்.

இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம் வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். காரணம் இந்த உலக செல்வத்தின் மீது அவர் பற்றுக் கொண்டிருந்தார். இருப்பதை இழக்காமல் இயேசுவை பின்பற்ற முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை. 

செல்வமும் வேண்டும் இயேசு என்னும் ஞானமும் வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாய் இருந்தார். ஆனால் இயேசுவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் உலக இன்பத்தைத் துறக்க வேண்டும் என்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே செல்வம் அவரிடம் இருந்தாலும் கூட அவர் இயேசு சொன்னதைக் கேட்டு முகவாட்டத்தோடு திரும்பி விடுகிறார்.

செல்வம் ஒருபோதும் முழுமையான இன்பம் தராது. (யாக்கோபு 5:1-6இல் செல்வர்களுக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது

யாக்கோபு 5:2,3 இவ்வாறு சொல்கிறது, "உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன.

உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப்போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே!").

இன்றைய உலகில் அழிந்து போகும் செல்வத்திற்காக உறவுகளை அழித்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். 

குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அக்கறை/அன்பு கொள்ளாதவர்கள் எப்படி அடுத்தவர் மீது அக்கறை/அன்பு கொள்வார்கள்?

இன்று பணத்தின் மீதும் பொருளின் மீதும் இருக்கக்கூடிய மோகம் உறவுகளை சிதைத்து விடுகிறது. 

எல்லாம் இழந்தபின் தான் உறவின் மகத்துவம் தெரிய ஆரம்பிக்கிறது. 

இவ்வளவு செல்வம் ஞானத்தை அடைவதற்கான வழி அல்ல. இறைவன் தரும் ஞானமே இவ்வுலகை விட்டு அவ்வுலகை அடையும் வழி.

மண்ணுலகில் இழக்கும் ஒவ்வொன்றையும் நாம் விண்ணுலகில் கைம்மாறாக பெற்றுக் கொள்வோம்.

மண்ணுலகில் சுரண்டலும் பதுக்களும் அதிகமானால் விண்ணகத்தில் நமக்கான இடம் இல்லாமல் போய்விடும். அனைவரும் செல்வம் நம் வாழ்க்கைக்கு அழிவை கொண்டு வரும். அழியா ஞானம் அருள் வாழ்வை கொடுக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் (சாலமோனின் ஞானம் 7:7-11) தான் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானத்தை பற்றி பதிவு செய்கிறார் சாலமோன். கடவுளிடம் சாலமோன் கேட்டதோ ஞானம்; ஆனால் அவருக்கு ஞானத்தோடு சேர்த்து அனைத்தும் கொடுக்கப்பட்டது. ஞானத்தோடு ஒப்பிட செல்வம் தகுதியற்றது. ஆனாலும் ஞானத்தோடு எல்லா நலன்களும் அவரிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது என்று முதல் வாசகம் பதிவு செய்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (எபிரேயர் 4:12-13) செல்வத்தை விட ஆற்றல்மிக்க, உயிருள்ள, கூர்மையான, பலம் வாய்ந்த ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. அதுதான் இறைவார்த்தை. நம்முடைய உள்ளத்தின் சிந்தனைகளை, நோக்கங்களை சீர்தூக்கி பார்க்கக் கூடியது இது. இறைவார்த்தை நமக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது, இறைவார்த்தையின் படி வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.

செல்வத்தின் மீது பற்றற்ற வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். நம் இறைவேண்டல் இவ்வாறு அமைய வேண்டும் - நீதிமொழிகள் 30:8, "வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச்செய்யும்; எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்".

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...