பொதுக் காலம் 30ஆம் வாரம்
30.10.2024 - புதன் கிழமை
"வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு" - திருப்பாடல்கள் 16:11
இரண்டு வழித்தடம் நமக்கு முன்னே உள்ளது. 1. இடுக்கமான பாதைக்கான வழித்தடம், 2. அகன்ற பாதைக்கான வழித்தடம்.
அகன்ற பாதை தொடக்கத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும் இறுதியில் விளைவதோ கவலை தான். ஆனால் வருந்தி நுழையும் இடுக்கமான பாதையோ தொடக்கத்தில் கஷ்டத்தை கொடுத்தாலும் நிறைவில் விளைவதோ பேரின்ப வாழ்வு.
அழிவுக்குரிய வழி அகன்றது. வாழ்வுக்குரிய வாழ்வு குறுகியது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 13:22-30) இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும் என்கிறார் இயேசு. அவர்களோ, 'நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்கின்ற போது இயேசுவின் பதில் நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்குச் செய்வோரே என்னைவிட்டு அகன்று போங்கள் என்பதாக அமைகிறது.
பலர் கடவுளின் பெயரைச் சொல்லி பலவற்றை செய்கிறார்கள். ஆனால் அது கடவுளுக்கு ஏற்புடையதா? என்பது அவரவர் மனசாட்சியின் பொருட்டு கேட்கப்பட வேண்டிய கேள்வி...
நாம் செய்கிற எல்லாவற்றையும் செய்து விட்டு கடவுள் விரும்புகிறார், கடவுள் பேசுகிறார், கடவுள் எண்ணுகிறார் என்று சொல்வது பொய் பித்தலாட்டம். அது முற்றிலும் தவறானது.
நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்று வெளிப்படையாக சொல்ல வேண்டிய நாள் வரும். அப்போது இயேசுவின் பணியைச் செய்கிறோம், இயேசுவின் சாட்சிகளாய் இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய நாம் துணிந்து/நிமிர்ந்து நிற்க முடியுமா?
கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர் விண்ணரசுக்குள் செல்வர்.
இயேசுவின் பெயரைச் சொல்லி பலவற்றை செய்வது எளிது. ஆனால் இயேசு விரும்பும் வாழ்க்கை வாழ்வதுதான் இயேசுவுக்கு நாம் பகரும் சான்று.
இறையாட்சிக்கு உரியவராவது இறைவன் நமக்கு கொடுத்த அருளாக இருக்கிறது. இடுக்கமான வாயில் வழியே நுழைந்து, அந்த அருளை நம் செயல்களால் நிறைவு பெற செய்வோம்.
No comments:
Post a Comment