24_10

பதவி வெறி கிறித்தவத்தின் எதிரி...

 


பொதுக் காலம் 29ஆம் வாரம்

20.10.2024 - ஞாயிற்றுக் கிழமை 

பதவி வெறி சிலரின் பசியாக இருக்கிறது. பதவி மோகம் பலரை அழித்திருக்கிறது, பலரை நடுத் தெருவில் நிறுத்தி இருக்கிறது. இருக்கைக்கு இங்கு சண்டை நடக்கிறது. இருக்கைக்கு இடம் பிடிக்க இயலாதவர்களுக்கு உதவுவது போல நாடகம் நடத்தப்படுகிறது. இருக்கையில் இடம் கிடைத்த பின் இயலாதவர் தேவையில்லாதவர் ஆகிறார்.

எல்லாம் நடிப்பு என்றாலும் எல்லோரும் ஏமாந்து தான் போகிறோம். ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் இருக்கத் தான் செய்வார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:35-45), 'நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கும் அருளும்' என்று யாக்கோபுவும் யோவானும் இயேசுவை அணுகி கேட்கிறார்கள். 

இயேசுவின் சீடர்களிடமும் பதவி ஆசை இருந்தது என்பது மறுப்பதற்கில்லை. இவர்கள் விரும்பிய பதவியினால் மற்ற சீடர்கள் இவர்கள் மீது கோபம் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். 

இயேசுவின் சீடராய் இருப்பதே உயர்ந்த பதவி/ஆசிர்வாதம் என்பதை அவர்கள் மறந்து போனார்கள்.

உங்களுள் பெரியவராய் இருக்க விரும்புகிறவர்கள் உங்கள் தொண்டராய் இருக்கட்டும் என்கிறார் இயேசு. தொண்டு ஏற்க அல்ல, தொண்டு ஆற்றவே வந்தேன் என்கிறார்.

வாழ்க்கையில் ஒரு தடவை பதவி ஆசை வந்துவிட்டால் அது கல்லறைக்கு செல்லும் வரை தொடரும்.

இவ்வுலகில் இனிமேல் எந்தவொரு (அரசியல்/சமயம் சார்ந்த)  பதவிக்கும் அதற்கு உண்டான அதிகாரம் இல்லை என்று அறிவிக்கப்பட்டால் பதவிக்கு போட்டிகள் இருக்காது, பிரச்சினைகளும் இருக்காது.

எல்லா இடத்திலும், பதவிவெறி தலை தூக்குகிறது. மேல் இருப்பவரை தகர்க்க, கீழ் இருப்பவர்கள் அதிகாரத்திற்கு வர எண்ணுகிறார்கள். யார் மேலே? யார் கீழே? என்ற தராசு மேலும் கீழுமாக இறங்கிக் கொண்டிருக்கிறது.

இதற்கு காரணம் அரியணை மீதான ஆசை தான்.

நாம் நிற்க வேண்டிய இருக்கை...

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5:10இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. "ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்."

உயர்த்தப்பட்டோர் எந்நாளும் உயர்த்தப்பட்ட நிலையிலே இருக்க போவதில்லை. இருக்கை எப்போதும் இடம் மாறிக் கொண்டே இருக்கும்.

இயேசுவின் இருக்கை இழப்பை சுட்டிக் காட்டும் இருக்கை. இயேசு, பலருடைய மீட்புக்கும் ஈடாக தம் உயிரைக் கொடுக்கவும் வந்தார்.

இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா 53:10-11) துன்புறும் ஊழியர் பற்றி இறைவாக்கினர் எசாயா முன்னுரைக்கிறார். அந்த துன்புறும் ஊழியர் இயேசு என்பது விவிலிய அறிஞர்களின் கருத்து.

இரண்டாம் வாசகத்தில் (எபரேயர் 4:14-16) நம்மை போல சோதிக்கப்பட்ட இயேசுவை படம்பிடித்து காட்டுகிறது எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம். 

சோதனைகளின்/துன்பங்களின் வழி மீட்பை கொணர்ந்தவர் வழி நாம் நடக்க வேண்டும்.

அவரை அணுகி சென்றால்/அவரை போல் வாழ்ந்தால் நமக்கான அரியணை விண்ணகத்தில் தயாராய் இருக்கும்.

இவ்வுலக இருக்கை/ பதவி வெறி கிறித்தவத்திற்கு எதிரி.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...