பொதுக் காலம் 27ஆம் வாரம்
08.10.2024 - புதன் கிழமை
செபிக்கும் உதடுகளை விட உதவும் கரங்கள் மேலானது என்பார் புனித அன்னை தெரசா.
ஆலயத்தில் இறைவேண்டல்(இறைவனோடு உரையாடி விட்டு) செய்துவிட்டு வெளியில் வந்து மற்றவரை அழிக்க கூட்டு சதி செய்யும் மனங்கள் இங்கு உண்டு.
செபிக்கும் உதடுகள் தான், இங்கு யாரை? எங்கு? எப்படி? கவிழ்க்கலாம் என்று சதித்திட்டம் தீட்டுகிறது. கடவுள் நேரடியாக வந்து தவறை சுட்டிக் காட்டினால் கூட, கடவுளையே எதிர்க்க தவறாதவர்கள் நாம்.
(தந்தையாம் கடவுளை போற்றுவதும் அந்நாவே; கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதரை தூற்றுவதும் அந்நாவே)
மனித உள்ளம் இறைவனோடு ஒன்றித்து செல்வதில்லை. அதனால் தான் போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்து காணப்படுகிறது.
செபிக்கும் உதடுகள் செயல்பட ஆரம்பித்தால் இங்கு பிளவு ஏது? தாங்கள் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர்கள் என்று காட்டிக் கொள்பவர்களாலேயே கிறித்தவத்தில் அதிக பிரச்சினை உண்டாகிறது. நம் செபங்கள் எல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்ட வாய்ப்பாடுகளாகவே இருக்கின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா (11:1-4) இயேசுவின் சீடர்கள், இறைவனிடம் வேண்ட கற்றுக் கொடுக்கும்படி இயேசுவிடம் கேட்கிறார்கள். இயேசு கற்றுக் கொடுத்த இறைவேண்டல் இரண்டு படிநிலைகளைக் கொண்டுள்ளது. ஒன்று தந்தையாம் கடவுளுக்கு புகழ், மற்றொன்று நம் வாழ்க்கையின் தேவைகளுக்கான வேண்டல்.
இரண்டாம் படிநிலையில் வரக்கூடிய அந்த செபம் என்பது நம்முடைய உணர்வையும் (மன்னிப்பு, குற்றம், சோதனைக்கு உட்படுவோமோ என்ற பயம்) உணவையும் (உயிர்வாழ அடிப்படையான ஒன்று) குறிப்பிடக் கூடியதாக இருக்கிறது.
நம் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றால் நம்மோடு இருப்பவர்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.
வழக்கமான செபங்களை செபித்துவிட்டால் போதும், அதோடு நம் கடமை முடிந்துவிடும் என்று எண்ணக்கூடாது. மாறாக செபங்கள் செயலாக மாற வேண்டும்.
என்னை மன்னியும் என்று இறைவனிடம் வேண்டுகிற போது நான் அந்த மன்னிப்பை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
என்னை சோதனைக்கு உட்படுத்தாதேயும் என்று வேண்டுகின்ற போது நான் மற்றவர்களுக்கு சோதனை கொடுக்காமல் இருக்க வேண்டும்.
அன்றாட உணவு எனக்குத் தாரும் என்று வேண்டக் கூடிய நாம் மற்றவர்களின் பசி ஆற்ற வேண்டும்.
செபம் வார்த்தைகளில் மட்டுமல்ல செயல்களிலும் (நன்றியாக) வெளிப்பட வேண்டும். அத்தகைய செபம்தான் நம்மை இறைவனோடு இணைக்கும்.
No comments:
Post a Comment