பொதுக் காலம் 26ஆம் வாரம்
03.10.2024 - வியாழக் கிழமை
"ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்" - புலம்பல் 3:26
அமைதி இழந்து தவிக்கும் உள்ளங்கள் இன்று ஏராளம். மனிதரிடம், பொருள்களிடம், பொழுதுபோக்கு சாதனங்களிடம் மனிதர்கள் அமைதிக்காக கைக்கட்டி நிற்கிறார்கள். மனதிற்கு பிடித்தவர்கள் பேசினால் அமைதி கிடைக்கும், எனக்கு தேவைப்பட்டதை வாங்கி கொடுத்தால் அமைதி கிடைக்கும், நான் பணத்தை செலவு செய்து சுற்றுலா சென்றால் எனக்கு அமைதி கிடைக்கும் என்று பல வழிகளில் இன்று அமைதி தேடி மனிதன் திரிகிறான்.
எதுவும் நிரந்தரமான நிலையான அமைதியை தந்து விடாது. இன்று என்னிடம் இருக்கக்கூடியது நாளை மற்றொரு நபரிடம் செல்லும். அது பணமாக இருக்கலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம், கவலையாக இருக்கலாம், கண்ணீராக இருக்கலாம், புகழாக இருக்கலாம், எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 10:1-12) இயேசு வேறு 72 பேர நியமித்து தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்புகிறார். 'ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவது போல நான் உங்களை அனுப்புகிறேன்' சொல்லி அவர்கள் சந்திக்கவிருக்கும் சவால்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறார்.
நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக! என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புவர் அங்கு இருந்தால் நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும் இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும் என்கிறார்.
இயேசு வழங்கும் அமைதி இயேசுவின் சீடர்களோடு இருந்தது.
அமைதியை ஏற்றுக்கொள்ளாதவருக்கு தண்டனை உண்டு என்பது முன்னறிவிக்கப்படுகிறது.
தன்னிலே அமைதி இல்லாதவர் அடுத்தவரின் அமைதியை சீர்குலைப்பார். இங்கு சொல்லப்படும் அமைதி என்பது பதட்டமற்ற சலனமற்ற ஒரு நிலையை குறிக்கிறது. அமைதி இருக்கும் இடத்தில் கவலை என்பது அறவே இருக்காது.
மற்றவர் நம்மை அழிக்க எண்ணிய போதிலும் நம் மனம் அமைதியில் நிலைத்திருந்தால் அழிவு நம்மை நெருங்காது.
இயேசு தரும் அமைதி என்பது இவ்வுலகம் தரக்கூடிய அமைதி போன்றதல்ல. இறந்தால் இவ்வுலகம் என்பது நிரந்தர அமைதியை கொடுக்க முடியாது. தலைவலியை போக்க உடனடி நிவாரணம் எடுப்பது போல தற்காலிக அமைதியை தான் இந்த உலகம் நமக்கு கொடுக்க இயலும்.
இந்த உலகில் எவ்வளவுதான் நாம் ஆட்டம் போட்டாலும், அலைந்து திரிந்தாலும் கடைசியில் நாம் வந்து சேரும் இடம் இறைபாதம்தான். எல்லாம் ஓய்ந்தபின் அமைதிக்காக கடவுளை நாடி தேடி வந்தவர்கள் எத்தனையோ நபர்கள் உண்டு.
அனைத்தும் ஓய்ந்து போகும் இறைவன் தரும் அமைதியை நாம் பெற்றுக் கொள்வோம்...
No comments:
Post a Comment