பொதுக் காலம் 28ஆம் வாரம்
17.10.2024 - வியாழக் கிழமை
"உன் மனச்சான்றை உறுதியோடு பின்பற்று; முன் பின் முரண்படாமல் பேசு" - சீராக்கின் ஞானம் 5:10
எல்லோரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என்று செய்வோர் நம்மில் பலர் உண்டு. எதை செய்தாலும் அதை சரியாக செய்ய வேண்டும் என்று எண்ணுவோரும் நம்மில் உண்டு.
நமக்கும் நம் வாழ்க்கைக்கும் இடையே பல முரண்பாடுகள் இருக்கின்றன. நமக்கு நல்லதெனப்படுவதை அதிகம் பேசுகிறோம். ஆனால் நல்லதை செய்வதில்லை.
நல்லவர்கள் இறந்த பின் அவர்களை பற்றி பெருமையாக பேசுகிறோம். ஆனால் அவர்கள் வாழ்ந்தபோது அவர்களை வாழ விட்டதில்லை.
மீக்கா 6:8 இவ்வாறு சொல்கிறது, "ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?"
நேர்மை, இரக்கம், தாழ்ச்சி ஆகியவை நமக்குள் எப்போதும் இருக்க வேண்டும். (இவை அனைத்தும் தனக்கு ஏற்றார் போல இருக்க கூடாது)
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11: 47-54) இயேசு பரிசேயரையும் திருச்சட்ட அறிஞரையும் சாடுகிறார். உங்கள் முன்னோர்கள் யாரைக் கொலை செய்தார்களோ அவர்களுக்கு நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள். அவர்கள் செய்த தவறுக்கு நீங்களும் உடந்தை என்கிறார் இயேசு.
இறைவாக்கினர் முதல் திருத்தூதர் வரையும், ஆபேல் முதல் சக்கரியா இரத்தம் வரையும் கணக்கு கேட்கப்படும் என்கிறார்.
இன்றும் மாசற்றவர்களின் இரத்தம் சிந்தப்படுகிறது. கடவுளை கைக் கூப்பி வணக்கும் கைகளே மாசற்றவர்களின் இரத்தத்தை சிந்துகிறது.
நம் வாழ்க்கை முரண்பாடுகளை கொண்டது. பிடித்தால் உறவு, இல்லையேல் கொலை. இது தான் ஆணவமிக்க மனிதர்களின் இன்றைய நிலைப்பாடு.
கொலை செய்வதும் பிறர் பெயரை கெடுப்பதும் ஒன்றே. கிறித்தவ போதனைக்கும் நம் வாழ்வுக்கும் தொடர்பு இல்லையேல் நாம் கிறித்தவர் அல்ல... கிறித்தவர் என்று அழைக்கப்படவும் தகுதி அற்றவர் தான்.
இன்று தாய்த் திருஅவை அந்தியோக்கு நகர் புனித இஞ்ஞாசியாரை நினைவுக் கூறுகிறது. உரோமையை ஆண்டு வந்த ட்ரேஜன் என்பவரின் ஆட்சிக் காலத்தில் கிறித்தவர்களுக்கு எதிராக வேதகலாபனை நடைபெற்றது. இதில் அந்தியோக்கு நகரில் ஆயராக இருந்த இஞ்ஞாசியார் கைது செய்யப்பட்டு உரோமை நகருக்கு இழுத்துச் செல்லப்பட்டார். இவர்மீது அக்கறை கொண்ட சிலர், கிறிஸ்துவை மறுதலித்து விடுங்கள்; உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்றனர். அதற்கு இஞ்ஞாசியாரோ, " நான் கிறிஸ்துவுக்காக என் வாழ்வைக் கோதுமை மணி எனத் தர இருக்கின்றேன். இதை யார் தடுத்தாலும் முடியாது என்றார்.
கொலைப் பசியில் இருந்த இரண்டு சிங்கங்களுக்கு உணவாக போடப்பட்டு கொல்லப்பட்டார்.
No comments:
Post a Comment