பொதுக் காலம் 28ஆம் வாரம்
18.10.2024 - வெள்ளிக் கிழமை
"ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்; அவர் உனக்குத் துணை செய்வார். உன் வழிகளைச் சீர்படுத்து; அவரிடம் நம்பிக்கை கொள்" சீராக்கின் ஞானம் 2:6
நாம் விரும்பும் எதையும் சேர்த்து வைத்து கொள்ளலாம். ஆனால் எதையும் எடுத்துச் செல்ல முடியாது. பிறருக்கு கொடுத்தால் நாம் பெற்றுக் கொள்ளலாம்.
ஒன்றை பெறுவதற்கு வரும் மனம் கொடுப்பதற்கு வருவதில்லை. பிறரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய எண்ணுவோர் இங்கு உண்டு. தனக்கு சொந்தமில்லாததையே அடைய வேண்டும் என்ற ஆவல் நம்மிடம் மேலோங்கி இருந்தால் நாம் எப்படி கொடுக்க முன் வருவோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 10:1-9) இயேசு வேறு 72 பேரை நியமித்து, அவர்களை இருவர் இருவராக அனுப்புகிறார். இயேசுவின் சீடர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். அந்தப் பயணத்திற்கு சில பரிந்துரைகள் முன் வைக்கப்படுகிறது. உணவு, பை, இடைக் கச்சை, செப்பு காசு, கைத்தடி, மிதியடி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு போக வேண்டாம். இதுதான் சீடர்களின் பயணத்திற்கான இயேசுவின் பரிந்துரைகள்.
பற்றற்ற வாழ்க்கை தான் இயேசு விரும்பும் சீடத்துவ வாழ்க்கை.
ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவது போல இயேசு அவர்களை அனுப்புகிறார். மடியில் கணம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்பார்கள். எனவே தான் இயேசு எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் சொல்லி இருக்கலாம்.
இறையாட்சி பற்றி அறிவிக்கப்பட வேண்டும் என்பது முதன்மை நோக்கம். அதற்கு தடையாய் இருப்பவை எல்லாம் அகற்றப்பட வேண்டும்.
பாதை சரியாய் இருந்தால் பயணம் சரியாய் அமையும். இலக்கு தெளிவாய் இருந்தால் நம் வாழ்க்கை நலமாய் அமையும்.
புனித லூக்கா - நற்செய்தியாளர் (விழா)
அன்னை மரியாவின் ஓவியத்தை வரைந்தவர்.
கிரேக்க மொழியை கற்றுத் தேர்ந்தவர்.
இயேசுவின் 72 சீடர்களில் ஒருவராக இருந்திருக்கலாம்.
மருத்துவர்.
திருத்தூதர் பவுலோடு இணைந்து பணியாற்றியவர்.
எல்லோருக்கும் பொதுவான நற்செய்தியை எழுதியவர்.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.
திருத்தூதர் பணிகள் நூலையும் எழுதியவர்.
இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளை தத்ரூபமாக எழுத்து வடிவில் தந்தவர்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர் புனித லூக்கா.
உலகக் காரியங்களை பற்றிக் கொள்ளாமல் கடவுளை பற்றிக் கொண்டார் புனித லூக்கா. அதனால் தான் இயேசுவின் வாழ்வு தரும் நற்செய்தியை தனது எழுத்துக்களால் பறைசாற்றினார்.
No comments:
Post a Comment