24_10

நன்மை செய்வதால் பிளவு!!!


பொதுக்காலம் 15ஆம் வாரம்

24.10.2024 - வியாழக் கிழமை

"நன்மைக்கு முரணானது தீமை; வாழ்வுக்கு முரணானது சாவு; இறைப்பற்றுள்ளோருக்கு முரணானோர் பாவிகள்" - சீராக்கின் ஞானம் 33:14

பிளவு உண்டாக வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. அதே போல பிளவு வந்தபின் சரிசெய்ய வேண்டும் என்றும் யாரும் விரும்புவதில்லை. 

சரி செய்தாலும், பிரச்சனைக்கு மேல் பிரச்சனை தான் வரும். எனவே, பிரச்சனைகளோடு இருந்து விடுவோம். ஏன் பிளவுகளை சரி செய்ய வேண்டும்? என்ற மனப்பான்மை நம்மில் பலருக்கு உண்டு.

சில வேளைகளில் குடும்பத்தில் பிளவுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. சில பிளவுகள் எதிர்பாராமல் பேசிய ஒரு சில வார்த்தைகளால் உருவாகிறது.

யார் பிளவை உண்டாக்கியவர்? யார் பிரச்சனைக்கு காரணம்? என்பது தெரிந்தபின், அதை அவரும் சரி செய்ய முன் வந்து விட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். 

இங்கு பிரச்சனையே பிளவை ஏற்படுத்தியவர் தொடர் பிளவை உண்டாக்குவது தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 12:49-53) இயேசு தீ மூட்ட வந்தேன், பிளவு உண்டாக்க வந்தேன் என்கிறார். (இந்த தீ/பிளவு வித்தியாசமானது) தந்தைக்கு எதிராக மகனும் தாய்க்கு எதிராக மகளும் மாமியாருக்கு எதிராக மருமகளும் பிளவுபட்டிருப்பர். நான் அமைதியை ஏற்படுத்த அல்ல, தீ மூட்டவே வந்தேன் என்கிறார் இயேசு.

இயேசுவை பின்பற்றுவோர் இயேசுவை பின்பற்றாதவருக்கு எதிராகத்தான் இருப்பர். அது குடும்பமாக இருந்தாலும் சரி! சமூகமாக இருந்தாலும் சரி! பிளவு ஏற்பட தான் செய்யும்.

தன் உறவினரிடம் அதிக அன்பு கொண்டு உள்ளோர், தன் சிலுவையை சுமக்காதோர் இயேசுவின் சீடரென அழைக்கப்பட தகுதியற்றோர். தன் உறவினரிடம் அதிக அன்பு கொண்டுள்ளோர், தன் உறவினருக்காக எதையும் இழக்கத் துணிவார், அது உண்மையானாலும் சரி, நீதியானாலும் சரி.

அப்படி உறவினருக்காக எதையும் செய்பவர் இயேசுவின் சார்பாக இருக்க முடியாது. ஒருவேளை இயேசுவின் சார்பாக இருந்தால் உறவினரின் உறவை இழக்க நேரிடும். இது தான் பிளவு.

இங்கு ஒன்றை இழப்பதன் வழியாக ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது தான் இயேசுவின் பாடம். 

தீமையை எதிர்ப்பதன் வழியாக நன்மையை பற்றிக்கொள்ள முடியும். தீய உறவுகளை இழப்பதன் வழியாக நல்ல கைம்மாறை நாம் பெற முடியும்.

இயேசுவின் பார்வையில் பிளவு என்பது தீமைக்கும் நன்மைக்கும் இடையே உள்ள பிளவு, இழப்பிற்கும் கைம்மாறுக்கும் இடையேயான பிளவு.

நல்லது செய்தால், அதை எதிர்ப்பவருக்கும் நல்லது செய்வோருக்கும் இடையே பிளவு உண்டாகும்.

மனிதர்களால் ஏற்படும் பிளவு மன உளைச்சலை கொடுக்கும்; இயேசுவின் பொருட்டு உண்டாகும் பிளவு கைம்மாறை பெற்று கொடுக்கும். நல்லது செய்வதால் பிரிவும் பிளவும் வந்தால் அது நல்லது தான்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...