பொதுக் காலம் 30ஆம் வாரம்
01.11.2024 - வெள்ளிக் கிழமை
"அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெண்மையான தொங்கலாடை அளிக்கப்பட்டது. இன்னும் சிறிது நேரம், அதாவது அவர்களின் உடன் பணியாளர்களான சகோதரர் சகோதரிகளும் அவர்களைப்போலவே கொல்லப்படவிருந்த காலம் நிறைவேறும் வரை அவர்கள் பொறுத்திருக்குமாறு அவர்களுக்குச் சொல்லப்பட்டது" - திருவெளிப்பாடு 6:11
வெண்மை தூய்மையின் அடையாளம், மாசற்ற வாழ்க்கையின் அடையாளம், அமைதியின் அடையாளம்.
திருவெளிப்பாடு நூலின் அடிப்படையில் இந்த வெண்மை நிறத்தை அடைய சிவப்பு நிறம் தேவைப்படுகிறது.
திருவெளிப்பாடு நூலின் ஒருசில இடங்களில் வெண்மையை/தூயவர்களை குறிக்கும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. "ஒவ்வொருவருக்கும் ஒரு வெண்மையான தொங்கலாடை அளிக்கப்பட்டது (6:11), வெண்மையான தொங்கலாடை அனிந்தவர்களாய்க் கையில் குருத்தோலை பிடித்திருந்தார்கள் (7:9) தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள் (7:14, 22:14) , வெண்மையும் தூய்மையுயான விலையுயர்ந்த மெல்லிய ஆடை அணிந்த விண்ணக படைகள் (19:14)..."
தூயவர்களுக்கு, விண்ணகத்தில்/ஆட்டுக்குட்டிக்கு அருகில் இடம் உண்டு என்பதை இவ்வார்த்தைகள் நமக்கு அறிவுறுத்துகின்றன.
இன்று அனைத்து புனிதர்களை தாய்த் திருஅவை நினைவுக் கூறுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் கொடுக்கப்பட்டாலும் இந்நாள் அனைவருக்குமான நாள். அனைவரும் தூய வாழ்வு வாழ அழைப்பு விடுக்கும் நாள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு5:1-12) இயேசுவின் மலைப் பொழிவை வாசிக்கிறோம். 8 (+1) பேறுபெற்றோரை நாம் காண்கிறோம். 6ஆவது பேறுபெற்றோர், "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்."
எங்கு தூய்மை இருக்கிறதோ அங்கு கடவுளின் பிரசன்னம் இருக்கிறது. கடவுளை காணும் வாய்ப்பும் கிடைக்கிறது.
இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டிக் காட்டுவது போல (1யோவான் 3:1-3) அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பது போல தம்மையே தூயவராக்க வேண்டும்.
இந்த தூய்மை சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும். தூய வாழ்வு இவ்வுலக பார்வையில் இழிவைக் கொணரலாம். இவ்வுலகை நாம் சாராதவர்கள் என்ற பிம்பத்தைக் கொடுக்கலாம். ஆனால் தூய வாழ்வுக்கு உரிய பரிசு நிச்சயம் உண்டு.
(எ.கா) - மரணப் படுக்கையில் இருக்கின்ற போது, நாம் இவ்வுலகில் நலமாய் வாழ்ந்த காலத்தில் செய்த செயல்கள் நம் கண் முன்னால் வந்து போகும். நல்லது செய்திருந்தால் மனநிறைவும், தீங்கு செய்திருந்தால் பெருந்துயரமும் தான் ஏற்படும். இதுவே முதல் பரிசு.
அதனை தொடர்ந்து நடுவர் இருக்கை முன்னிலையில் நிற்கும் போது தலை நிமிர்ந்து நிற்க முடியும்... இது நாம் பெரும் இரண்டாம் பரிசு.
மூன்றாவது பரிசு விண்ணகத்தில் இடம் ஏற்பாடு செய்யப்படும்.
சீராக்கின் ஞானம் 38:10 இவ்வாறு சொல்கிறது, "குற்றங்களை அகற்று; நேர்மையானவற்றைச் செய்; எல்லாப் பாவங்களினின்றும் உன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்து."
தூய்மையான உள்ளம் பல வழிகளில் காயப்படும். அந்த காயத்திற்கு மருந்து மனிதரிடம் அல்ல கடவுளிடம் உண்டு.
("அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்." - 1பேதுரு 2:24)
தூய வாழ்வுக்கு கைம்மாறு உண்டு. அந்த கைம்மாறு இவ்வுலகிலும் அவ்வுலகிலும் நம்மை வந்து சேரும்.
இவ்வுலக கறைகளை ஆட்டுக் குட்டியின் இரத்தத்தில் துவைத்து தூய்மைப்படுத்திக் கொள்வோம்.
No comments:
Post a Comment