பொதுக் காலம் 28ஆம் வாரம்
19.10.2024 - சனிக் கிழமை
"ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது" - யோவான் நற்செய்தி 3:19
பிடித்தவரை ஏற்றுக் கொள்வோம், பிடிக்காதவரை பழித்துரைப்போம். இது தான் உண்மை. ஒருவர் எப்போது பிடித்தவராக மாறுகிறார்? நாம் விரும்புகிறவற்றை ஒருவர் செய்யும் போதெல்லாம் நமக்கு பிடித்தவராகிறார். நம் தவறை சுட்டிக் காட்டுப்பவர் நமது பழிப்புரைக்கு உள்ளாகிறார்.
இந்த உலகில் நல்லவராக வாழ்வது கடினம் என்ற முடிவுக்கு பலர் வந்து விடுகிறார்கள். காரணம் அயோக்கியர்கள் அதிகாரம் செய்யும் இடத்தில் நல்லவருக்கும், நன்மைக்கும் இடம் இல்லாமல் போய்விடுகிறது.
தவறு செய்பவர்கள் தவறை துணிந்து செய்கிறார்கள். நல்லது செய்பவர்கள் நல்லது செய்ய தயங்குகிறார்கள்.
என்னதான் இருள் இவ்வுலகில் ஆட்சி செய்தாலும் இறுதியில் வெல்வதோ ஒளி தான்.
("தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் சொல்லி, இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ கேடு" - எசாயா 5:20).
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 12:8-12) மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக் கொள்வார் என்றும் தூய ஆவியாரை பழிப்பவர் மன்னிப்பு பெறமாட்டார் என்றும் தன் சீடர்களுக்கு அறிவுரை கூறுகிறார் இயேசு.
தூய ஆவியாரின் கனிகளுள் ஒன்று உண்மை. அந்த உண்மையை எதிர்ப்பவர்கள் தூய ஆவியாரை பழித்துரைக்கிறார்கள்.
ஆட்சியாளர்கள், அதிகாரிகள் முன் என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்பதை தூய ஆவியார் கற்றுத் தருவார் என்கிறார் இயேசு.
இருளுக்கும் தீமைக்கும் நாம் அஞ்ச வேண்டிய தேவையில்லை. இருளை எதிர்த்தால் ஒளி பிறக்கும்.
தீமை செய்வோரை கண்டு தயங்கி செல்வதைவிட தீமைக்கு சவுக்கு அடி கொடுத்து உண்மையை உண்மை என்று உரக்கச் சொல்வோம்.
ஒளியை ஏற்றுக் கொள்வோம். கிறிஸ்து என்னும் ஒளி இருக்கும் இடத்தில் இருளுக்கு வேலை இல்லை.
No comments:
Post a Comment