பொதுக் காலம் 29ஆம் வாரம்
25.10.2024 - வெள்ளிக் கிழமை
"அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்" - லூக்கா 9:45
புரிந்துக் கொள்ள கொஞ்சம் நிதானம் தேவை. அறிந்துக் கொள்ள ஆர்வம் தேவை. நிதானமும் ஆர்வமும் இருந்தால் எல்லாம் கைக்கூடும்.
இன்று நாம் உலகக் காரியங்கள் பலவற்றை அறிந்திருக்கிறோம். ஆனால் அருகில் இருப்பவர்களின் உணர்வுகளை நாம் புரிந்துக் கொள்வதில்லை.
காலத்தின் வட்டத்தில் நாம் சுற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்கு முன் இருப்பவர்களும் நமக்கு தெரிவதில்லை; நமக்கு பின் இருப்பவர்களும் நமக்கு தெரிவதில்லை. நம் வாழ்க்கை பயணம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 12:54-59) நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து அறிந்திருக்கும் போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்? என்ற கேள்வியை எழுப்புகிறார் இயேசு.
இயற்கையின் மாற்றங்களை தெரிந்திருக்கும் நாம், நம்மோடு இருப்பவர்களை அறிந்திருக்க வேண்டும் அல்லவா?
தண்டனை வழங்க அழைத்து செல்பவரோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டால் தண்டனையிலிருந்து தப்பலாம். ஆனால் கர்வம் அதை செய்ய விடாமல் தடுத்துவிடும். இறங்கி செல்வது நம் நடைமுறைக்கு ஒத்துவராது என்போரும் உண்டு.
தன் நிலையிலிருந்து இறங்கி வர புரிந்துணர்வு தேவை. பிறர் இறங்கி வருகின்ற போது ஏற்றுக் கொள்வதற்கும் புரிதல் தேவை.
சீராக்கின் ஞானம் 23:20 இவ்வாறு சொல்கிறது, "அனைத்தும் படைக்கப்படுமுன்பே ஆண்டவர் அவற்றை அறிந்திருந்தார்; அவற்றைப் படைத்து முடித்த பின்னும் அவற்றை அறிந்துள்ளார்".
கடவுளை போல, நாம் எல்லாவற்றையும்/எல்லாரையும் அறிய முடியாது. அறிய வேண்டியவற்றையும் புரிய வேண்டியவர்களையும் அறிந்து புரிந்துக் கொள்ள முற்படுவோம்.
No comments:
Post a Comment