24_10

மீண்டும் பார்வை பெற்று அவர் வழி நடக்க...

பொதுக் காலம் 30 ஆம் ஞாயிறு

27.10.2024 - ஞாயிற்றுக் கிழமை

"பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்" - எசாயா 42:7

சிலர் கண்ணும் கருத்துமாக சிலரை வழிநடத்துகிறார்கள். சிலர் தவறாக வழிநடத்தி குழியில் தள்ளி விடுகிறார்கள்.

சிலர் கண்ணிருந்தும் குருடராக இருக்கின்றார்கள். ஒன்றை (நல்லதை) பார்ப்பதற்காக படைக்கப்பட்டது தான் கண். அந்தக் கண் இருந்தும் பார்க்க இயலாதவர்களாக, கண்டு கொள்ள முடியாதவர்களாக பலர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

கண் நன்றாய் இருக்கும் அனைவரும் பார்வை உள்ளவர் அல்ல; மாறாக அக ஒளி சரியாக இருந்து, உள்ளொளியின் பாதையில் நடப்பவர்களே பார்வையுடையவர்கள்.

கண்ணை இழந்தவருக்குத்தான் அந்த இழப்பின் வலி தெரியும். இருக்கின்ற வரை எதனுடைய அர்த்தத்தையும் நாம் புரிந்து கொள்ள மாட்டோம். 

பொருளை இழந்தால் பெற்றுக் கொள்ளலாம், உடலின் உறுப்புகளை இழந்தால் கூட மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆன்மாவை இழந்தால் மீண்டும் பெற முடியாது. நம்முடைய ஆன்மா தன் ஒளியை இழந்து வருகிறது. 

இழந்ததை மீண்டும் பெற்றுக் கொள்கிற போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:46-52) பார்வை இழந்தவர் மீண்டும் பார்வை பெறுகிறார். அவருடைய நம்பிக்கை என்பது மற்றவர்கள் அவரை அதட்டிய போதிலும் கூட தடைப்பட்டு போகவில்லை. 

'தாவீதின் மகனே! எனக்கு இரங்கும்' என்று இன்னும் உரக்கக் கத்துகிறார் பார்வை இழந்தவர். இழந்தது பார்வையை தான், பேசும் திறனை அல்ல என்பதனால், அவர் நம்பிக்கையை வார்த்தையின் வழியாக எடுத்துக் காட்டுகிறார்.

தன் நம்பிக்கையை வெளிக்காட்டும் தருணத்தில், பல தடைகள் வெளியே இருந்து வந்தாலும், அதில் துவண்டு போகாத மனம் தான் இந்த பார்வையற்றவர் நமக்கு சுட்டிக் காட்டக்கூடிய பாடம்.

இன்று நம்முடைய பார்வைகள் புது பிறப்பு அடைய வேண்டும். நம் ஆன்மா மீண்டும் முழு ஒளியை பெற வேண்டும். 

பார்வை பெற்றதும் அவர் தன் பாதையில் செல்லவில்லை. இயேசுவை பின்பற்றி அவரை பின்தொடர்ந்தார் என்கிறது நற்செய்தி.

இன்றைய முதல் வாசகத்தில் (எரேமியா 31:7-9) 'ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்' என்ற செய்தியை பறைசாற்ற சொல்கிறார் ஆண்டவர். அந்த எஞ்சியோர் என்பவர்கள் நல்வழியில் நடந்தோரை குறிக்கும். கடவுளின் கட்டளையை மீறி தண்டனை பெற்றவர்களுக்கு மத்தியில் இவர்கள் கடவுளுக்குரிய வாழ்வை வாழ்ந்தவர்கள். ஆன்மாவின் ஒளியை அணையாது காத்தவர்கள்.

இரண்டாம் வாசகம் (எபிரேயர் 5:1-6) என்றென்றும் குருவாய் விளங்கும் இயேசுவை பற்றி எடுத்துரைக்கிறது. கிறிஸ்து தன்னை தலைமைக் குருவாய் உயர்த்திக் கொள்ளவில்லை. அந்த அருளும் வாய்ப்பும் தந்தையிடம் இருந்து வந்தது.

கிறிஸ்துவில் ஒளியில்/தலைமைத்துவத்தில் பங்கெடுக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

பார்க்க வேண்டியவற்றை பார்க்க, கண்டுகொள்ள வேண்டியவற்றை கண்டுகொள்ள நமது கண்கள் திறக்கப்பட வேண்டும்.

பெற்றுக் கொண்ட பார்வைக்கு நம்பிக்கை உரியவராக இருக்க வேண்டும்.

மூடியே இருக்கும் கண்களால் உலகை (நலனை) காண முடியாது.

நம்பிக்கை மலர்ந்து நம் கண்களும் திறக்கப்படட்டும்...

ஆன்மாவின் ஒளியும் கண்களின் ஒளியும் பற்றி எரிந்துக் கொண்டே இருக்கட்டும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...