பொதுக் காலம் 27ஆம் வாரம்
10.10.2024 - வியாழக் கிழமை
கொடுத்து வாங்குதல் எல்லோருக்கும் பிடிக்கும். கொடுத்து கொண்டே இருப்பது ஒரு சிலருக்கு தான் பிடிக்கும். நாம் கொடுப்பதை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிலே பலர் பலவற்றை (பணம், பொருள், அன்பு, நட்பு, இன்னும் பல) கொடுக்கிறார்கள்.
ஆனால் கொடுத்தது கிடைக்கவில்லை என்றதும் பலருக்கு கோபம் வருகிறது. சிலர் அன்பை பிச்சை கேட்பது போல கெஞ்சி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இறுதியில் கிடைப்பதோ ஏமாற்றம் தான்.
இழப்பை எதிர்பாராதவர்கள், இழப்பை தாங்க முடியாமல் வாழ்வில் நொந்து போகிறார்கள். சிலர் அந்த அடியிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11: 5-13) ஒருவர் நள்ளிரவில் தன் நண்பனிடம் சென்று 3 அப்பங்களை கடனாக கேட்கிறார், தனக்காக அல்ல தன்னை தேடி வந்திருக்கிற தனது நன்பருக்காக. கதவு எல்லாம் பூட்டியாச்சு, என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்து தர முடியாது என்று சொல்லி விடுகிறார்.
மற்ற நண்பரோ தொல்லைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். தொல்லையின் பொருட்டு உதவியை பெற்றுக் கொள்கிறார்.
கேட்பவருக்கு கொடுக்கப்படும், தேடுபவர் கண்டடைவர், தட்டுபவருக்கு திறக்கப்படும்.
ஒன்றை பெற வேண்டும் என்றால் முயற்சி செய்ய வேண்டும். முயற்சியும் பயிற்சியும் இணைந்து செல்ல வேண்டும்.
அதே நேரத்தில் பெறுவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இல்லாமல் கொடுப்பதிலும் நாம் அக்கறை காட்ட வேண்டும்.
நாம் ஒருவருக்கு அவருக்கு தேவையானதை கொடுக்கும் போது, ஒருவேளை பெற்றுக் கொண்டவர் திரும்ப கொடுக்காமல் போகலாம், ஆனால் நாம் கொடுத்ததற்கான கைம்மாறு நமக்கு கிடைக்கும்.
கேட்போர் எல்லோருமே தான் விரும்பியதை அல்லது தனக்கான பதிலை பெற்றுக் கொள்கின்றனர்.
நமக்கானது ஒருநாள் நமக்கு கிடைக்கும் என்பது மறுப்பதற்கில்லை...
No comments:
Post a Comment