பொதுக் காலம் 29ஆம் வாரம்
23.10.2024 - புதன் கிழமை
எவ்வளவு காலம் மறைந்திருப்பீர் ஆண்டவரே! என்றென்றுமா? எவ்வளவு காலம் உமது சினம் நெருப்பென எரிந்து கொண்டிருக்கும்? - திருப்பாடல்கள் 89:46
தலைவர் பணியாளர் உறவு எத்தகையதாக இருக்க வேண்டும்? அது உண்மையும் அன்பும் நிறைந்ததாக இருக்க வேண்டும். நம்பிக்கைக்குரிய பணியாளரை பெற்ற தலைவர் பேறுபேற்றவர்.
நல்ல பணியாளர் தலைவருக்குரியதை கருத்தில் கொள்வார். தலைவர் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் தன் பணியை செய்வார். தலைவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் செய்ய வேண்டியதை சரிவர செய்ய வேண்டும்.
பிறர் பாராட்ட வேண்டும் என்று பணி செய்தால் அது தோல்வியில் முடியும். செய்யக் கூடிய பணியை ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். ஈடுபாட்டோடு செய்யப்படும் எந்த பணியும் நல்லதொரு பலனை கொடுக்கும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 12:39-48) தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான விட்டுப் பொறுப்பாளர் யார்? என்பதை இயேசு தெளிவுப்படுத்துகிறார்.
தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துக் கொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர்தான் பாரட்டப்படுவார், அவருக்குதான் உயர் பதவியும் கொடுக்கப்படும்.
பொறுப்போடு இருக்க வேண்டிய பணியாளர் பொறுப்பை இழந்தார் என்றால் அவர் தண்டிக்கப்படுவார்.
இயேசு என்னும் தலைவரின் பணியாளர்கள் நாம், அவர் வருவதற்கு காலம் தாழ்த்துகிறார் என்பதற்காக நம் கடமையிலிருந்து நாம் தவற கூடாது.
மிகுதியாக கொடுத்தவரிடம் இருந்து மிகுதியாக எதிர்பார்க்கப்படும். தலைவரின் விருப்பத்தை தெரிந்திருந்தும் அதன்படி செயல்படாதவர் நன்றாக அடிபடுவார்.
எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் தெரியாதவர் போல காட்டிக் கொள்ள முடியாது.
கடவுள் காலம் தாழ்த்துகிறார் என்றால் அவர் பொறுமையோடு இருக்கிறார் என்று அர்த்தம்.
(சீராக்கின் ஞானம் 5:4 ‘நான் பாவம் செய்தேன்; இருப்பினும், எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?’ எனக்கூறாதே; ஆண்டவர் பொறுமை உள்ளவர்.)
பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
நமது கடமையை உணர்ந்து செயல்படுவோம். நம் செயலுக்கேற்ற கைம்மாறு நமக்கு கிடைக்கும்.
நம்மிடம் கொடுக்கப்பட்டது நம்மிடமிருந்து கேட்கப்படும் போது நாம் கணக்கு கொடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment