பொதுக் காலம் 30ஆம் வாரம்
31.10.2024 - வியாழக் கிழமை
"நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன்" - எசேக்கியேல் 36:26
பாறை இடுக்கில் கூட செடி முளைக்கும், துருப்பிடித்த பூட்டில் கூட செடி முளைக்கும். ஆனால் ஈரமுள்ள இதயத்தில் இரக்கம் இருப்பதில்லை.
சிலருக்கு இரக்கக் குணம் இருக்கும், அதை செயல்படுத்துவதற்கான ஆற்றல் இருக்காது. ஆற்றல் இருப்போருக்கு இரக்கக் குணம் இருக்காது. இரக்கமும் ஆற்றலும் இணையும் இடத்தில் பெரிய மாற்றம் உண்டாகும்.
அடுத்தவரின் நிலை கண்டு இறங்கும் இதயம் இருந்தால் அது உணர்வுள்ள இதயம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 13:31-35) பரிசேயர் இயேசுவிடம் வந்து, "இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்ல வேண்டும் என்றிருக்கிறான்" என்று கூறுகிறார்கள்.
இது பரிதாபத்தாலோ அல்லது இரக்கத்தாலோ அல்லது இயேசுவை அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தவோ கூட சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் உயிரை காப்பாற்ற நினைக்கும் ஓர் இரக்கச் செயலாக/சொல்லாக இது இருக்கிறது.
எது வந்தாலும் பரவாயில்லை, தனது கடமையை செய்து முடிப்பதில் இயேசு தெளிவாக இருந்தார். ஆகவே தான், 'இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என் பணி நிறைவு பெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்' என்று சொல்கிறார் இயேசு.
இறைவாக்கினரை கொல்லும் எருசலேம் நகரை எச்சரிக்கிறார் இயேசு. அனுப்பட்டோரைக் கல்லால் எறிந்த நகரின் இறை இல்லம் கைவிடப்படும் என்கிறார்.
அனுப்பட்டவர்களை ஏற்றுக் கொள்வது அனுப்பியவரை ஏற்றுக் கொள்வதற்கு சமம்.
உடன் வாழ்வோருக்கு இரக்கம் காட்டுவது கடவுளுக்கே இரக்கம் காட்டுவதாகும்.
இதயத்தில் இருக்கும் ஈரத்தின் அளவுக்கு ஏற்ப கொஞ்சம் இரக்கமும் இருக்கட்டும்.
சீராக்கின் ஞானம் 40:17 இவ்வாறு சொல்கிறது, "இரக்கம் என்பது நலமிகு பூங்காபோன்றது; தருமம் என்றும் நிலைக்கும்."
No comments:
Post a Comment