பொதுக் காலம் 26ஆம் வாரம்
04.10.2024 - வெள்ளிக் கிழமை
இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்" - இணைச் சட்டம் 6:4
செவியிருக்கும் எல்லோரும் செவி சாய்ப்பதில்லை. செவியில்லாதவர்கள் கூட நன்மையான செயல்பாடுகளால் செவிசாய்க்கிறார்கள். நான் செவிமடுப்பது உள்ளே சென்றால்தான் செயல்பாடு வெளியே வரும். காதின் வழியே செல்லும் எல்லாமே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
சிலர் காது கொடுத்து கேட்கவே மாட்டார்கள், சிலர் கேட்பது போல நடிப்பார்கள், சிலர் கேட்பார்கள் ஆனால் செயல்படுத்த மாட்டார்கள், சிலர் கேட்பார்கள் கேட்டதற்கும் அதிகமாகவே செயல்படுவார்கள்.
நமக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் சொல்வதை நாம் கேட்க மாட்டோம். நமக்கு ஒருவர்மீது பயம் இருக்கிறது என்றால் அவருக்கு செவிமடுப்பது போல நடிப்போம். உண்மையிலேயே ஒருவர் மீது அளவுக்கதிக மதிப்பு இருந்தது என்றால் அவருக்கு செவிமடுத்து அவர் சொல்வதில் உள்ள நன்மையை நாம் நம்முடைய வாழ்க்கையில் கடைபிடிப்போம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னுடைய சீடர்களை அனுப்புகின்ற போது அவர்கள் உங்களுக்கு செவிசாய்த்தால் எனக்கு செவிசாய்க்கிறார்கள், உங்களை புறக்கணித்தால் என்னை புறக்கணிக்கிறார்கள், என்னை புறக்கணித்தால் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார் என்று தன்னுடைய சீடர்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
ஒருவரை பிடிக்கவில்லை என்றாலும் அவர் சொல்வதில் நல்லது இருக்கிறது என்றால் அதற்கு செவிமடுப்பது ஒன்றும் தவறில்லை. நல்லது யாரிடம் இருந்தாலும் அதை எடுத்துக் கொள்வதில் ஒன்றும் இழப்பில்லை.
நல்லவருக்கு செவிசாய்த்தலின் வாயிலாக நமக்குள் மனமாற்றம் நிகழ வேண்டும்.
மனமாற்றத்தை கொண்டு வராத செவிசாய்த்தல் பயன் அற்றது, பலனற்றது.
இன்றைய காலக் கட்டத்தில் பலர் தலைவர்களாக மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் பலர் அதை கட்டாயத்தின் பேரில்/அன்பளிப்பின் பேரில் காதுக் கொடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சிலருக்கு செவிசாய்ப்பது சிலருக்கு கட்டாயம், பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் செவிசாய்க்க வேண்டும்.
இயேசுவின் வார்த்தையை கட்டாயத்தினாலல்ல, மாறாக மனமாற்றத்தின் தொடக்கமாக அதை எண்ண வேண்டும்.
இன்று தாய்த் திருஅவை அசிசி நகர் புனித பிரான்சிசை நினைவு கூறுகிறது.
வளமையில், செல்வ செழிப்பில் சிறந்து விளங்கினாலும் தன்னிடம் இருப்பதை ஏழை எளியவருக்கு கொடுத்து வாழ வேண்டும் என்ற மனப்பான்மை இவருக்கு அதிகமாகவே இருந்தது.
ஒருமுறை குதிரையில் சென்று கொண்டிருந்தபோது வழியில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு தொழுநோயாளரை கண்டு மனம் இறங்கினார். இவர் தன்னுடைய குதிரையில் இருந்து இறங்கி அந்த தொழுநோயாளரை கட்டித் தழுவி முத்தமிட்டார். தான் உடுத்திருந்த விலையுயர்ந்த ஆடையையும் அவருக்கு கழட்டிக் கொடுத்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்பினார்.
தன்னுடைய வீடு, பெற்றோர், உடைமைகள் என அனைத்தையும் துறந்த பிரான்சிஸ் நகரில் இருந்தவரிடம் பிச்சை எடுத்து உண்டும், தன்னிடம் இருப்பதை மற்றவர்களுக்கு கொடுத்தும், இயேசுவின் நற்செய்தியை அறிவித்தும் வாழ்ந்து வந்தார்.
பிரான்சிஸ்! என்னுடைய கோயில் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது. இதனை நீ சரி செய்வாயா? என்ற ஆண்டவரின் குரலைக் கேட்டு நிதி திரட்டி கோயிலை கட்டி முடித்தார்.
(1223 ஆம் ஆண்டு புதிய முயற்சியாக பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் குடிலை அமைத்தார், ஏழைகளை அன்பு செய்தவர், சூரியனை சகோதரன் எனவும் நிலவை சகோதரி எனவும் பூமியை தாய் எனவும் அழைத்து இயற்கையை நேசித்தவர். பறவைகள் இவருடைய தோளில் தங்கின காட்டு விலங்குகள் கூட இவருக்கு வழி விட்டன. அந்த அளவுக்கு இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்தவர், இயற்கையில் இறைவனை கண்டவர் நம் புனிதர் புனித பிரான்சிஸ் அசிசியார்).
இறைவார்த்தைக்கு செவிமடுத்து அதை செயல்படுத்தியவர் நம் புனிதர்.
No comments:
Post a Comment