24_10

இறைவார்த்தை விருந்தோம்பல்...


பொதுக் காலம் 27ஆம் வாரம்
08.10.2024 - செவ்வாய்க் கிழமை 

"வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்" - உரோமையர் 12:13

விருந்தோம்பல் என்பது ஓர் உன்னத பண்பு. ஒருவர் முன்பின் தெரியாத ஒருவரை வரவேற்று உபசரிக்கிறார் என்றால் அவர் இயல்பாக அடையாளம் தெரியாத ஒரு நபரால் உபசரிக்கப்படுவார் என்பது ஒரு நம்பிக்கையாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் இந்த விருந்தோம்பல் பண்பு இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆபிரகாம் 3 மனிதர்களை உபசரித்தார் (தொடக்க நூல் 18), லோத்து ஆண்டவரின் தூதர்களை வரவேற்றார் (தொடக்க நூல் 19)...

நம்முடைய முன்னோர்கள் வசித்த போது அவர்களின் வீடுகளில் முன்பு திண்ணை வைக்கப்பட்டிருக்கும். காரணம் வழிப்போக்கராக வந்து செல்லக்கூடியவர்கள் இரவு வேளையில் அந்த திண்ணையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான் அதனுடைய நோக்கம். (ஆனால் இன்றைய காலக் கட்டங்களில் தன்னுடைய இடம் போக பொது இடத்தையும் ஆக்கிரமிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் நம்மிடம் மேலோங்கி இருக்கிறது). 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 10: 38-42) பெத்தானியா என்னும் ஊருக்கு இயேசு செல்லக்கூடிய வேளையிலே மார்த்தா அவரை தன்னுடைய வீட்டிற்கு வரவேற்கிறார். மரியா என்னும் சகோதரியும் அவருக்கு உண்டு. மார்த்தாவோ இயேசுவுக்கு பணிவிடை புரிவதில் பரபரப்பாகி இருந்தார், ஆனால் மரியாவோ இறைவார்த்தையை உள்வாங்கிக் கொண்டிருந்தார். 

மார்த்தா இயேசுவுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடுகளை செய்தார், மரியா இறைவார்த்தையை விரும்பி ஏற்றார்.

மார்த்தா இயேசுவிடம், நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னை தனியே விட்டு விட்டாளே, எனக்கு உதவி செய்யும்படி என் சகோதரிக்கு சொல்லும் என்கிறார்.

ஆனால் இயேசு கொடுத்த பதில் உண்மையில் மார்த்தாவுக்கு வியப்பை கொடுத்திருக்கும். "மார்த்தா! மார்த்தா! நீ பலவற்றை பற்றி கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது".

மரியா நல்ல பங்கை தேர்ந்து கொண்டார் என்று சொல்ல காரணம் அவர் தன்னை தேடி வந்த இறைவார்த்தையை தனக்குள் ஏற்றுக்கொண்டார். மார்த்தாவின் நோக்கம் சரிதான்; இயேசுவை உபசரிக்க வேண்டும் என்பது அவருடைய உன்னதமான எண்ணமாக இருந்தது. ஆனால் வந்திருக்கக்கூடிய விருந்தினரிடம் அமர்ந்து பேச அவர் தவறிவிட்டார். விருந்தளிக்க தயாராக இருந்த மார்த்தா இயேசு கொடுத்த இறைவார்த்தை என்னும் விருந்தை ஏற்றுக் கொள்ளவில்லை

மார்த்தாவிடம் இருந்த பரபரப்பு இன்று நம்மிடமும் உண்டு. திருவிழா நாட்களில் திருப்பலியில் பங்கெடுக்கும் போது பிரசன்னமாகும் ஆண்டவர் நமக்கு முக்கியப்படுவதில்லை; சுற்றி இருக்கும் நபர்கள் தான் முக்கியம், ஆலய வழிபாட்டில் கலந்து கொண்டாலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதுதான் நம்முடைய சிந்தனையாக இருக்கும். 

கடமைக்காக வழிபாட்டு கொண்டாட்டம், பழகிப் போனதால் கடைப்பிடிக்கப்படும் சடங்கு முறைகள், ஆலயத்தில் நடைபெறக்கூடிய திருப்பலிக்கு கூட நல்ல நேரம் பார்க்கக்கூடிய சூழல் இவையெல்லாம் கடவுளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

கடவுள் விரும்புகிறார் என்று சொல்லி கடவுள் எதிர்பார்க்காததை செய்வது தான் கிறித்தவர்களின் வாடிக்கையாகிவிட்டது. நிறுவன மயமாக்கப்பட்ட கிறித்தவ சமயத்தில் நாமும் இயங்கிக் கொண்டிருக்கிறோம், பங்கேற்பாளர்களாக அல்ல பார்வையாளர்களாக. 

மார்த்தா தள்ளி நின்று உபசரித்தார் மரியாவோ அருகில் அமர்ந்து உற்றுப் பார்த்தார். 

செபங்களை மட்டும் சொல்லிவிட்டு நாம் கடவுளை மகிமைப்படுத்த முடியாது, கடவுள் விரும்பும் செயல்முறைகளும் நம்மிலிருந்து வெளிப்பட வேண்டும்.

இறைவார்த்தை என்னும் விருந்தை விரும்பி ஏற்போம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...