24_10

எதிரிக்கு வலிமை கிடையாது...


பொதுக் காலம் 27ஆம் வாரம்

11.10.2024 - வெள்ளிக் கிழமை 

"எதிரிகள் முன் சற்றும் மருளாமல் இருக்கிறீர்கள் என்றும் நான் அறிய வேண்டும். இவ்வாறு நீங்கள் மருளாதிருப்பது அவர்களது அழிவுக்கும் உங்களது மீட்புக்கும் அறிகுறியாகும். இதுவும் கடவுளின் செயலே" - பிலிப்பியர் 1:28

ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் யாரும் தனக்கு எதிராக இருக்கக் கூடாது என்று எண்ணுவார். ஆனால் நான் யாருக்கும் எதிரியாக மாறக்கூடாது என்று யாரும் எண்ண மாட்டார். சில வேளைகளில் நாம் நம்முடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நமக்கு ஒரு எதிரி தேவைப்படுகிறார்.

சிலர் எதிரியாக மாறி விடுகிறார்கள், சிலர் எதிரியாக மாற்றப்படுகிறார்கள். 

தன்னோடு இருந்தவரின் செயல் பிடிக்காத (அந்த செயல் நல்லதாகவோ/கெட்டதாகவோ இருக்கலாம்) காரணத்தால் எதிரியாக மாறி விடுகிறார்கள். வலிந்து திணித்து சில நபர்கள் வாழ்க்கையில் எதிரியாக மாற்றப்படுகிறார்கள் அல்லது சித்தரிக்கப்படுகிறார்கள்.

எதிரியாக மாற்றப்பட்டவர்கள் உண்மையில் எதிரி அல்ல கற்பனையில் சிந்தனையில் அவர்கள் எதிரி என்னும் நிழலே.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:15-26) இயேசு பேய்களின் தலைவனை கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்று பொய்க் குற்றம் சுமத்தப்படுகிறார். 

தன்மீது குற்றம் சுமத்திய மக்களின் சிந்தனைகளை அறிந்த இயேசு, "தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய் போகும் அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராக தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபுலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபுலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களை சார்ந்தவர்கள் யாரைக் கொண்டு பய் ஓட்டுகிறார்கள்? என்று மறுகேள்வி கேட்கிறார். 

எதிரே நிற்பவர்கள் எல்லாம் எதிரியாக மாறிவிட முடியாது. நம்முடைய சிந்தனைகளையும் நம்முடைய செயல்களையும் முடக்க நினைக்கும் அனைவரும் எதிரிகள் தான். 

இயேசு கடவுளின் ஆற்றலால் பேய்களை ஒட்டிய போதிலும் கூட அவர் பேய்களின் தலைவனை கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்று சொல்லி இயேசுவுக்கு எதிராக இருக்கும் பெயல்செபுலை இயேசுவோடு இணைத்து பார்த்தார்கள். இந்த மக்கள் கூட்டமும் இயேசுவின் எதிரியாகத்தான் இருந்தது. ஆனால் இயேசு யாருக்கும் எதிலும் எதிரியாக இருக்கவில்லை (தவறுகளை தட்டிக் கேட்டார்). 

இயேசுவின் வலிமை மக்கள் கூட்டத்திற்கு தெரியவில்லை. இயேசுவைவிட சாத்தான் வலிமை மிக்கது என்று அவர்கள் எண்ணினார்கள். 

மற்றவர்கள் நம்மை விட வலிமை மிக்கவர்கள் என்று நம்மில் பலர் எண்ணுகிறோம் அல்லது நாம் வலிமை குறைந்தவர்கள் என்று எண்ணுகிறோம். 

எப்போது நம் எதிரியை வலிமை குறைந்தவராக எண்ணுகிறோமோ அப்போது இரண்டு காரியங்கள் நினைவு கூறத்தக்கது. 

1. அவர்கள் (என் எதிரி) ஒன்றும் இல்லை 

2. எனக்குள் ஆற்றல் இருக்கிறது

(இந்த ஃபார்முலா எதிர்மறையிலும் செயலாற்றுகிறது - இன்று சமூகத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருக்கிறவர்கள், மற்றவர்களை தங்களைவிட வலிமை குறைந்தவர்களாக மாற்றிவிட்டார்கள். மற்றவர்கள் தங்களுக்குள் ஆற்றல், திறமை இருக்கிறது என்பதை கண்டுபிடித்து மேலே வருகின்ற போதெல்லாம் மட்டம் தட்டி அவர்களை ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறார்கள்.)

இயேசு தன் ஆற்றலை கண்டு கொண்டார். எனவே வெளியிலிருந்து வரக்கூடிய எந்த அதிகாரத்தையும் மிரட்டலையும் கண்டு அவர் பயப்படவில்லை.

நம் எதிரியை நாம் கண்டு கொள்ள வேண்டும் நம் எதிரியின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

(நம் எதிரியை வலிமை குறைந்தவராக மதிப்பிடுவது நம்மை உயர்த்திக் கொள்வதற்காக அல்ல; மாறாக, நமக்குள் இருக்கும் ஆற்றலை கண்டு உணர்வதற்காக)

நம் பலவீனம் தான் நம் எதிரிக்கான பலமாக மாறுகிறது. நம் எதிரிக்கென்று பலம்/வலிமை கிடையாது... (குனிய குனியதான் கொட்டுவார்கள்).

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...