பொதுக் காலம் 27ஆம் வாரம்
06.10.2024 - ஞாயிற்றுக் கிழமை
"மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழிதேடக் கூடாது; மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது - 1கொரிந்தியர் 7:27
.ஒருவரை விலக்கி வைத்து மற்றொருவரை சேர்த்து இந்த உலகம் மகிழ்ச்சி காணுகிறது. பிடிக்கவில்லை என்று விலகி வாழ்வது வேறு, மற்றொருவரை பிடித்திருக்கிறது என்பதற்காக தனக்குரியவரை விலக்கி வைப்பது வேறு.
சமூகத்தில் யார் இத்தகைய செயலை செய்கிறார்களோ அவர்கள் வீரமிக்கவர்களாக மதிப்பிற்குரியவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
வீரம், மதிப்பு என்பது நல்லவற்றை செய்ய துணிவதில் இருந்து பிறப்பெடுக்க வேண்டும், அடுத்தவருக்குரியதை எடுத்துக் கொண்டால் ஒருபோதும் நாம் மதிப்பிற்குரியவராக பார்க்கப்படுவதில்லை. அடுத்தவர்க்குரியது என்றால் அது பொருளாகவோ ஆளாகவோ இருக்கலாம்.
தகாத உறவு, அடுத்தவரின் துணை மீது அன்பு, பற்று இவை எல்லாம் சொந்த குடும்ப வாழ்வை சிதைக்கும் காரணிகள்.
ஒருவருக்கு ஒருவர் என்பதுதான் கிறிஸ்து நமக்கு போதிக்கக் கூடிய படிப்பினை. மதிப்பையும் மாண்பையும் இழந்து விட்ட பின் அதை மீண்டும் பெற முடியாது.
எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரையறைக்குள் வாழ வேண்டும். ஒருவேளை எப்படி வாழலாம் என்று வாழ்ந்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் நம்மை சூழ்ந்து இருக்கக்கூடியவர்கள் மகிழ்ச்சியை இழந்து விடுவார்கள்.
இங்கு மனிதர் ஒரு சமூக விலங்கு. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழக்கூடியவர். சார்பு நிலை வாழ்க்கை வாழக்கூடிய நாம் மற்றவரை அழித்துவிட்டு நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:2-16) பரிசேயர் இயேசுவை அணுகி கேட்ட கேள்வி, கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா? மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கி விடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்.
இந்த கேள்விக்கு இயேசுவின் பதில், படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ஆணும் பெண்ணும் அவர்களை படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்பதாகும்.
பரிசேயரின் இந்த கேள்வி மனவிலக்கை பற்றி தெரிந்து கொள்வதற்காக கேட்கப்பட்டது என்றாலும் கூட, முக்கியமாக இயேசுவை சோதிப்பதற்காக கேட்கப்பட்டது. ஏனென்றால் அவர்களின் மனங்கள் இயேசுவின் மனநிலையில் இருந்து விலகி இருந்தது.
கிறிஸ்து கொண்டிருந்த மனநிலையை அவர்களால் கொண்டிருக்க முடியவில்லை. எனவே தான் இயேசு செய்த எல்லாவற்றிலும், இயேசு பேசிய எல்லாவற்றிலும் குறை காணும் மனநிலையோடு அவரை சூழ்ந்து நின்றார்கள் பரிசேயர் கூட்டத்தினர்.
ஒரு பெண்ணை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபச்சாரம் செய்கிறான், தன் கணவரை விலைக்கு விட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபச்சாரம் செய்கிறாள் என்பதை இயேசு அழுத்தம் கொடுத்து சொல்கிறார்.
இன்று மனங்கள் விலகி இருக்கின்றன. அதனால் மணவிலக்கு உண்டாகிறது. உண்மையான அன்பினால் இங்கு மனங்கள் இணைவதில்லை. சில மனங்கள் கட்டாயத்தின் பெயரால், செல்வ செழிப்பினால், பகட்டான வாழ்க்கையினால், வெளி ஆடம்பரத்தால், பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தால் இணைகின்றன.
திருமணக் காரியம் முடிந்ததும்/பழிவாங்க வேண்டிய நேரம் வந்ததும் அடுத்தவர் மனம் புண்படும்படி சில நிகழ்வுகள்(அவமானப்படுத்துதல்) நடந்து விடுகிறது.
இன்று நடைபெறக்கூடிய ஒவ்வொரு திருமண நிகழ்வு முடிவிலும் ஒரு பிரச்சனை காத்துக் கொண்டிருக்கிறது. திருமணம் முடிந்த உடனேயே, ஆலயத்திலேயே (அது அருளடையாளம் என்பதை புரியாத சிலரால்) அது அவமானப்படுத்தப்படுகிறது.
அங்கு தொடங்கக்கூடிய பகை இறுதிவரை இரண்டு குடும்பங்களுக்கிடையே தொடர்கிறது.
ஆசிரியளித்து அனுப்பி வைக்க வேண்டிய திருமணத் தம்பதியர், ஆலயத்தின் வெளியே மனமுறிவை தொடங்கி விடுகிறார்கள்.
தங்கள் பெற்றோருக்காக ஒருவர் மற்றவரிடம் முகம் காட்ட (எதிர்ப்பு, எரிச்சல், கோபம்) ஆரம்பிக்கிறார்கள்.
இதையும் கடந்து சிலரது வாழ்க்கை நகர்ந்தாலும் நாட்கள் சென்ற பின் மன வாழ்க்கையில் நிம்மதியற்ற மகிழ்ச்சியற்ற நிலை உண்டாகிறது.
இடையில் வந்த யாரோ ஒருவருக்காக தொடக்கத்தில் இருந்து உடன் வாழக்கூடியவரை எதிர்க்கக்கூடிய மனநிலை இன்று அதிகரித்துவிட்டது. பணம், புகழ், பகட்டான வாழ்க்கை, தற்பெருமை, அதிகாரம் இவையெல்லாம் மனமுறிவுக்கான/மனவிலக்குகான முக்கிய காரணங்கள்.
இறைவனில் தொடங்கப்பட்ட அந்த வாழ்வு நிறைவிலும் இறையாசீரோடு முடிவு பெற வேண்டும்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவதினால் குடும்பத்தில் சண்டை சச்சரவு குறைகிறது.
ஒருவர் பேசும்போது மற்றொரு மௌனம் காப்பதால் கலவரம் தடுத்து நிறுத்தப்படுகிறது.
காரணமே இல்லாமல் சத்தம் போடும் தன் துணையிடம், காரணத்தோடு அன்பு காட்டுவதால் குடும்பத்தில் பிளவு தடைச் செய்யப்படுகிறது.
மற்றவர்கள் செய்த சதியினால் முறியடிக்கப்படக்கூடிய திருமணமாக திருமண வாழ்க்கை இருக்கக் கூடாது.
நான் என்னுடைய துணையை நம்புகிறேன் என்ற ஆழமான உறுதிப்பாடு மனைவியிடம்/ கனவனிடம் இருக்க வேண்டும்.
எத்தனை இடர்கள் வந்தாலும் இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து, என் வாழ்நாள் எல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கும் வாக்களிக்கிறேன் என்று திருமணத்தின் போது சொல்லப்பட்ட வாக்குறுதி இறுதிவரை காப்பாற்றப்பட வேண்டும்.
மனம் விட்டு பேசுவதன் வழியாக மனதில் உள்ள காயங்கள் எல்லாம் ஆற்றப்படும்.
பேசுவதற்கு, பேசியதை கேட்பதற்கு நேரம் கொடுக்க வேண்டும்.
எதுவரை வாழப் போகிறோம் என்பது தெரியாது, இருக்கும் வரை இணைந்திருப்பவரோடு அன்பு உறவில் நிலைத்திருப்போம்.
நமக்குரியவர்களிடமிருந்து நம் மனம் ஒருபோதும் பிரிந்திருக்கலாகாது
கடவுள் இணைத்ததை மனிதர் (ஒருபோதும்) பிரிக்காதிருக்கட்டும்
No comments:
Post a Comment