பொதுக் காலம் 29ஆம் வாரம்
21.10.2024 - திங்கட் கிழமை
"ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே" - சபை உரையாளர் 2:21
செல்வம் இரண்டு வகையில் அறியப்படலாம் 1. பொருள் செல்வம் 2. அருள் செல்வம்.
செல்வம் இருப்பதை வைத்து தான் நம் மதிப்பு மண்ணகத்திலும் சரி விண்ணகத்திலும் சரி உயரும். மண்ணக செல்வம் மண்ணோடு கரைந்து விடும். மண்ணகத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் விண்ணகத்தில் நமக்கான செல்வமாக மாறும். பொருள் இல்லாதவருக்கு இவ்வுலம் இல்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.
அவ்வுலகில் அருளை பெற இவ்வுலக வாழ்வு உதவுகிறது.
பகிர்ந்து கொடுப்பதால் என்ன கிடைக்கும் என்ற கேள்விக்கு பதில் - சேர்த்து வைத்தால் எதை பெற முடியாதோ அதை பகிர்ந்து கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம் என்பது தான்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 12:13-21) சொத்தை பங்கிட்டு கொடுக்க உதவி வேண்டி இயேசுவிடம் வருகிறார் ஒருவர். பொருளாசையை விரும்பாதவரிடம் பொருளை பங்கிட்டு கொடுக்க கேட்கிறார். அறிவற்ற செல்வன் உவமை வாயிலாக எதார்த்தத்தை விளக்குகிறார் இயேசு. களஞ்சியத்தை இடித்து பெரிதாக கட்ட எண்ணியவர் தனக்குள் சொல்லிக் கொண்டது, "என் நெஞ்சே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு, உண்டுக் குடித்து மகிழ்ச்சியில் திளைத்திடு".
கடவுளின் குரல், அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை எல்லாம் யாருடையவையாகும்?
எல்லாவற்றையும் சேர்த்து வைத்து, விட்டு தான் செல்லப் போகிறோம். இது தான் உண்மை.
நாமும் அறிவற்ற செல்வன் போல தான் மண்ணக செல்வத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். இருப்பதை இழக்க மனம் ஒருபோதும் வருவதில்லை. மேன்மேலும் குவித்தும் பதுக்கியும் வைக்க எண்ணுகிறோம்.
இவ்வுலக செல்வம் அவசியமில்லை என்று சொல்லவில்லை. மாறாக இவ்வுலக செல்வம் மட்டும் போதும் என்று இருந்துவிடக் கூடாது.
மண்ணகத்தில் நாம் செய்யும் சிறு சிறு நன்மைகள் வழியாக/நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொடுப்பதன் வழியாக விண்ணகத்தில் கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்ப்போம்...
No comments:
Post a Comment