பொதுக் காலம் 32ஆம் வாரம்
16.11.2024 - சனிக் கிழமை
"மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை; எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது" - திருப்பாடல்கள் 9:18
நம்பிக்கைக்கும் தொந்தரவுக்கு என்ன தொடர்பு? நேரடி தொடர்பு இல்லை, ஆனால் நம்பிக்கை தொடர் நம்பிக்கையானால் எதிரே உள்ளவருக்கு தொந்தரவு. கிடைக்கும் என்பது நம்பிக்கை; கிடைக்கும் வரை போராடுவேன் என்பது தன்னம்பிக்கை.
அந்த தன்னம்பிக்கை தான் மற்றவர்களை தொந்தரவு செய்யும். நேர்மையாய் இருக்க வேண்டியவர் நேர்மை தவறும் போது கண்டுக் கொள்ளாமல் இருப்பது ஒருபுறம். நேர்மை தவறுபவர் தன் தவறை கண்டுக் கொள்ளும் வரை போராடுவது மறுபுறம்.
இவர் எங்க திருந்த போகிறார் என்ற கேள்வி பொய்மைக்கு உரம் போட்டுவிடும். இவர் மாறும்வரை விட மாட்டேன் என்பது மற்றொருவர் இன்னும் அதிக நம்பிக்கை பெற வழிவகுக்கும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 18: 1-8) மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொல்கிறார்.
கைம்பெண் ஒருவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.
அந்த கைம்பெண் கணவனை இழந்தவர், வாழ்வை இழந்தவர், வலு இழந்தவர் ஆனால் நம்பிக்கையினால் உறுதியூட்டப்பட்டவர்.
அவரின் நம்பிக்கையும் தொடர் தொந்தரவும் அந்த நடுவரையே மாற்றிவிட்டது.
என்னால் முடியாது என்று சுருண்டு படுத்தால் எறும்பு கூட ஏறி கடிக்கும். முடியாவிட்டாலும் முயற்சி செய்வேன் என்பது தன்னால் முடியாத காரியத்தை கூட மற்றொருவரால் நடத்தி முடிக்க வைக்கும்.
மதிக்காத நடுவரே மனம் மாறினார் என்றால், நம் மனமாற்றத்தை எதிர்பார்க்கும் கடவுள் நமக்கு இரக்கம் காட்டாமல் இருப்பாரா?
மாற்கு நற்செய்தி 5:35இல் "அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள்.
தொழுகைக்கூடத் தலைவர் கொடுத்த தொந்தரவு அவர் மகளுக்கு உயிர் கொடுத்தது.
செயல்பாட்டோடு கூடிய நம்பிக்கையினால் கடவுளை தொந்தரவு செய்வோம். நலமானதை பெற்றுக் கொள்வோம்.
No comments:
Post a Comment