24_11

நேர்மையான செல்வத்திலே முன்மதியுடையோராய்...


பொதுக் காலம் 31ஆம் வாரம்

08.11.3024 - வெள்ளிக் கிழமை 

"என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும், முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்" - எரேமியா 3:15

.அறிவாற்றல் மிக்க மனிதர்கள் இவ்வுலகில் வெகுவாக பாராட்டப்படுகிறார்கள். புத்திசாலித்தனம் ஒரு செயலை விரைந்து முடிக்க உதவுகிறது. திட்டமிட்டு செயல்படும் ஆற்றல் எக்காலத்திலும் நலம் பயக்கும்.

முன்மதி உடையோர் இவ்வுலகில் உண்டு. முன்மதி என்னும் ஆற்றல் நேர்வழியிலும் தவறான வழியிலும் பயன்படுத்தபடுகிறது என்கிறது தான் உண்மை.

சரியானதை சரியாக செய்ய இந்த ஆற்றல் பயன்படுத்தப்படுவதில்லை. பிறருடைய சொத்துக்களை அபகரிக்க, ஏமாற்று வழியில் புகழை சம்பாதிக்க, பிறர் வாழ்வை அழிக்க தான் முன்மதியுடையோராய் பலர் சுற்றி வருகிறார்கள். 

"ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துக் கொள்ளுகிறார்கள்" - லூக்கா 16:8

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 16:1-8) செல்வந்தருக்கு வீட்டுப் பொறுப்பாளராய் இருந்த பணியாளர் முன்மதியோடு செயல்பட்டதாக பாராட்டப்படுகிறார். ஆனால் அவர் தலைவரை ஏமாற்றி இருக்கிறார் என்பதே உண்மை. 

நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரை பாராட்டினார் என்கிறது இன்றைய நற்செய்தி. இந்த பகுதி நமக்கு குழப்பத்தை கொடுக்கலாம். ஆனால் தெளிவுப்பெற வேண்டும் என்றால் இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியை முழுமையாக வாசிக்க வேண்டும். (காண்க லூக்கா 16:9-13)

இவ்வுலகம் எவ்வகையிலாவது செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறது. அதற்கு நாமும் விதி விலக்கு அல்ல.

நற்செய்தியின் தொடர்ச்சியில்...

- "நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களை தேடிக் கொள்ளுங்கள்" (லூக்கா 16:9) என்பது நம்மிடம் இருக்கும் இவ்வுலக செல்வத்தை பிறருக்கு பகிர்ந்துக் கொடுக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.

- மிகச் சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவர் பெரியவற்றிலும் நம்பிக்கைக்குரியவராக இருப்பார்.

- பிறருக்கு உரியவற்றை கையாளுவதில் நம்பிக்கைக்கு உரியராக இருக்க வேண்டும்.

- கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது. 

இவ்வுலக செல்வமே நேர்மையற்றது தான். காரணம் ஏதாவது ஒரு வகையில் மற்றவரை ஏமாற்றி தான் நம் பிழைப்பு நடக்கிறது அல்லது செல்வம் சேர்க்கிறோம்.

நிலையான செல்வம் என்பது நற்செயல் புரிவதன் வாயிலாக அவ்வுலகில் சேர்க்கப்படும். 

ஒளியின் மக்களாய், நேர்மையான செயல் புரிவதில் முன்மதியோடு இருப்போம். இவ்வுலக செல்வம் இவ்வுலகிலே தேங்கி விடும்.

விண்ணக இறைவனையும் விண்ணக செல்வத்தையும் பற்றிக் கொள்வோம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...