24_11

இடர் வரும் முன்னே எச்சரிக்கையாய் இருங்கள்...


பொதுக் காலம் 34ஆம் வாரம்

28.11.2024 - வியாழக் கிழமை 

"மாறாக அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்; வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மன உறுதியோடு தாங்கி வருகிறோம்" - 2 கொரிந்தியர் 6:4

சமமான சாலையில் நடப்பதைவிட அசைந்தாடும் பாலத்தின் மீது நடக்கும் போது அதிக கவனம் தேவை. தடுமாறினால் இழப்பு நமக்கு தான்.

இடர் வரும் என்றாலும் கடக்க வேண்டிய பாதையை நிச்சயம் நாம் கடந்து தான் ஆக வேண்டும். 

இந்த உலகிலும் பல இடர்கள் நமக்கு முன்னே வைக்கப்பட்டுள்ளது. தடைகளை தாண்டினால் வெற்றி. தடைகளோடு நின்று விட்டால் தோல்வி தான். 

இந்த உலகத்தின் போக்கின் படி நடந்தால் இந்த உலகம் நம்மை தூக்கி வைத்து கொண்டாடும். ஆனால் நடுவர் இருக்கையின் முன் நிற்க வேண்டிய காலம் வரும்போது நம்மை தலைநிமிர்த்துவது இவ்வுலக போக்கின்படியான வாழ்க்கை அல்ல. 

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 12:2 சொல்கிறது, "இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்".

தவறு செய்தால் தலைமறைவாக இருக்க வேண்டும், குற்றம் செய்தால் ஓடி ஒளிய வேண்டியிருக்கும். 

நன்மை செய்வதால் இந்த உலகம் நம்மை விரட்டும், துரத்தும், இழிவுப்படுத்தும். ஆனால் நன்மை செய்தால் நாம் அவரின் இருக்கை முன் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 21:20-28) அழிவு பற்றி இயேசு விவரிக்கிறார். பழிவாங்கும் நாட்கள் வரும், வாளால் வீழ்த்தப்படுவார்கள், சிறைப்பிடித்து செல்லப்படுவார்கள் என்று இடரின் எண்ணிக்கை நீளுகிறது.

இத்தகைய இடர் நம்மை நெருங்காமல் இருக்க உலகு சார்ந்த காரியங்களில் இருந்து சற்று விலகி இருக்க வேண்டும்.

இன்று மனிதர்கள் சக மனிதர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். எந்த அளவையால் அளக்கிறோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்பதை அறிந்தும் அறியாமல் இருக்கிறோம்.

நம் நிலை பரிதாபத்திற்குரியதாய் மாறுவதும் பேறுபெற்றதாய் மாறுவதும் நம் செயல்பாடுகளில் இருக்கிறது.

மனிதர்களை முன்மாதிரியாய் கொண்டால் நம் வாழ்வு ஆட்டம் காணும். ஏனெனில் மனிதர் இடம் கண்டு/ஆள் கண்டு நடிப்பார்கள். 

இறைவனை முன்மாதிரியாய் கொண்டு இடரிலிருந்து தள்ளி நிற்போம்.

தூய உள்ளத்தோடு ஆட்டுக்குட்டியின் நாளை எதிர்பார்த்து அவரில் இணைவோம்... 

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...