23.11.2024 - சனிக் கிழமை
"இறப்பு யாருக்கும் காலம் தாழ்த்தாது என்பதையும் நீ சாகவேண்டிய நேரம் உனக்கு இன்னும் சொல்லப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்" - சீராக்கின் ஞானம் 14:12
.இறப்பிற்கு பிறகு என்னவாகும்? என்ற கவலை, தனிப்பட்ட நபரின் வாழ்நாளை நரகம் ஆக்கிவிடுகிறது. அதே நேரத்தில் இறப்பிற்கு பிறகு என்ன நடந்தா எனக்கு என்ன? என்பது, மற்றவர்களின் வாழ்க்கையை நரகம் ஆக்கிவிடுகிறது.
வாழும் நாட்கள் சொர்க்கம் ஆக வேண்டும் என்றால் நல்லதை நினைக்கவும், செய்யவும், சொல்லவும் வேண்டும். ஒருவேளை நாம் நல்லதை நினைக்க, மற்றவர்கள் நமக்கு கெடுதல் செய்தால் என்ன செய்வது என்ற கேள்வியும் நம்மில் எழும்.
நம் காயங்களுக்கு நாம் மருந்திட்டிடலாம், ஆனால் மற்றவர்களின் தலைக்கணத்துக்கும் கர்வத்திற்கும் நாம் மருந்திட முடியாது. (கடவுள் மருந்திடுவார் என்பதை மறந்து விட கூடாது). அவரவர் விதைப்பது அவரவருக்கு. என் வீட்டுத் தோட்டத்தில் களை முளைத்தெழாமல் பார்ப்பது என் கையில் இருக்கிறது. அடுத்தவர் என் மீது எறியும் களையை நான் பெரிதுப்படுத்தாமல் அப்புறப்படுத்தினால் களை எறிந்தவர் ஒரு தருணத்தில் கலங்கி போவார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 20:27-40) உயிர்த்தெழுதலை மறுதலிக்கும் சதுசேயர் இயேசுவை அணுகி, 'ஒரு பெண் ஏழு நபர்களை மணந்து மகப்பேறின்றி இறந்து போனால் உயிர்த்தெழும் போது அவர் யாருக்கு மனைவியாக இருப்பார்?' என்ற கேள்வியை முன் வைத்தனர்.
இயேசு அவர்களுக்கு நேரிடையாக பதில் சொல்கிறார். "இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் வருங்கால வாழ்வை பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும் போது திருமணம் செய்து கொள்வதில்லை. இனி அவர்கள் சாக முடியாது. அவர்கள் வானதூதரைப் போல இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே" என்று இயேசு பதில் சொல்கிறார்.
இறப்பிற்கு பிறகு நம் வாழ்வு வான தூதர்களை போல இருக்கும். அதற்கு முந்தைய வாழ்க்கை தான் நாம் வானதூதரா? விண்ணக வாழ்வுக்கு தகுதி உடையவரா? என்பதை உறுதி செய்யும்.
இக்கால வாழ்வில் பிறருக்கு இடறலாய் இருக்கும் மனிதர் எப்படி விண்ணக வாழ்வை உரிமை பேறாய் பெற முடியும்?
வாழ்வோரின் கடவுள் பக்கம் நாம் நிற்கும் தகுதி பெற இறப்பதற்கு முன் நல்வாழ்க்கை வாழ வேண்டும்/ மற்றவரை வாழ விட வேண்டும்.
மானிட மகனின் மறு வருகையின் போது உயிர்த்தெழுதல் இருக்கும்.
தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 4:16,17 இவ்வாறு சொல்கிறது, "கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்".
அனைவரும் (கல்லறையில் இருப்போரும், உயிர் வாழ்வோரும்) எடுத்துக் கொள்ளப்படுவர். அவரவருக்கேற்ற அரியணை அவ்வுலகில் கொடுக்கப்படும்.
No comments:
Post a Comment