14.11.2024 - வியாழக் கிழமை
"இறையாட்சி பேச்சில் அல்ல, செயல்பாட்டில்தான் இருக்கிறது" - 1 கொரிந்தியர் 4:20
.இறைவனின் ஆட்சி ஏற்கனவே வந்துவிட்டது. ஆனால் எல்லோரும் இறைவனின் அரசுக்குள் வரவில்லை. எல்லோரும் இறைவனை ஏற்றுக் கொள்கிறார்கள், ஆனால் அவருடைய கொள்கைகளை தான் பின்பற்றுவதில்லை.
கொள்கைப் பிடிப்புள்ள மனிதரை பலருக்கு பிடிக்கும். ஆனால் அதே கொள்கை நம்மை தாக்கினால் திருப்பி தாக்குவோம்.
இன்று கிறித்தவம் வளர்ந்து உலகெங்கும் பரந்து விரிந்து இருக்கிறது. கிறித்தவ ஆலயங்கள், பக்த சபைகள், மறைமாவட்டங்கள், துறவற இல்லங்கள், கிறித்தவ சங்கங்கள் என்று பல அமைப்புக்கள் கிறிஸ்துவின் பெயரால் இயங்குகிறது.
ஆனால் கிறிஸ்துவுக்கும் நமக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தான் கேள்வி. கடவுளின் பெயரால் எல்லாவற்றையும் அவர் விரும்புகிறார் என்று சொல்லி செய்கிறோம். உண்மையில் ஆய்ந்து பார்க்க வேண்டியது, கடவுள் நம் வழிபாடுகளை விரும்புகிறாரா? கடவுளை வழிபாட்டு பொருளாக மட்டும் பார்ப்பது சரியா? கிறிஸ்துவின் விழுமியங்கள் நம் வழிபாடுகளில் இடம் பெறுகின்றதா?
கடவுள் என்னிடம் வெளிப்படுத்தினார், கடவுள் என்னை மட்டும் தேர்ந்தெடுத்தார் என்ற கண்ணோட்டம் தவறு.
கடவுள் தன்னை எல்லா வழிகளிலும் எல்லா மனிதரிலும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 17: 20-25) இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர் மறுமொழியாக, “இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” என்றார்.
இறைவனும் நம்மில் தான் இருக்கிறார், இறையாட்சியும் நம் நடுவில் தான் இருக்கிறது.
நாம் அதை வாழ முயற்சி செய்வதில் தான் சிரமப்படுகிறோம். இறைவனின் ஆட்சி இவ்வுலகில் நிலைபெற இறைமகன் பல துன்பங்களை ஏற்றார்.
இறைத் திருவுளம் நிறைவேற இயேசு தம் வாழ்வை கையளித்தார். அவர் திருவுளம் நம் வழியாக நிறைவு காண பொய்மைக்கும் போலிகளுக்கும் மயங்காமல் உண்மையை பற்றிக் கொள்வோம்.
மானிட மகனின் வருகையை காண ஆயத்தம் தான் இவ்வுலக வாழ்வு.
இவ்வுலக வாழ்வை இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப வாழ முயற்சி செய்வோம். அப்போது இறைவனின் வருகையின் போது அவர் முன்னிலையில் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.
No comments:
Post a Comment